Saturday 28 December 2013

சித்தர் தத்துவம் -- 15

சித்தர் தத்துவம் -- 15 

   சூழ்ச்சி முடிபு துணிபு எய்தல் அத்துணிவு 
   தாழ்ச்சியுள் தங்குதல் தீது  


சித்தர் கடவுள் நிலை தொகுதி --2
சொற்ப வாழ்வது துவண்டலையாதே
அற்புதம் ஆனா ஆனந்த போதம்
கற்பனையாக கண்டு கொள்வாயே
                       =நந்தீஸ்வரர் கருக்கிடை – 54
மாந்தனின் வாழ்வானது என்பது கொஞ்ச காலந்தான் அந்தக் கால நிலையில் நமது வாழ்வானது ஒரு நெறியோடு வாழ்வது தான் சிறப்பானது அவ்வாறு இல்லாது இஷ்டம் போல் வாழ்வது என்பது அர்த்தமற்றதாகிவிடும். சித்தர்களும், ஞனிகளும், இவ்வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து தங்களை கடவுள் தேடல் நிலையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். அதில் அவர்கள் கடவுள் என்னும் ஒருவரை கண்டார்களா? அல்லது அவர்களின் ஆய்வு முடிவு என்ன என்பதை இதன் வழி அவர்களின் நூல் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.
      மேற்கண்ட நந்திச்வரரின் சொல்லை பார்ப்போம் இந்த வாழ்வு நிலை இல்லாதது ஆகையால் நீ அற்புதம் நிறைந்த இன்பம் நிறைந்த ஆனந்தத்தை உன் மனதில் கற்பனை ஆக கண்டு கொள்வாயே. இது அடிப்படைக் கருத்து என்பதை நினைவில் கொண்டு இனி பார்ப்போம். மனிதன் இன்றைய சூழ்நிலையை அடைய பல பரிணாம மாற்றங்களையும் பலவித இடர்ப்பாடுகளையும் கடந்து வந்துள்ளான் என்பதுவே உண்மை திடீர் என்று ஒரு நாளில் எந்த ஒரு பொருளும் படைப்புகளும் தோன்றி விடவில்லை கார், ஆகாய விமானம், ரயில், தொலைத்தொடர்பு வசதிகள், மனிதன் அன்றாட  உபயோக பொருள் உணவு, விவசாயம், போர்முறைகள் என்று எல்லாவற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது இவையாவும் ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை பல கட்டங்களைத் தாண்டி நாம் இன்றைய நிலையை அடைந்துள்ளோம் என்பதுவே உண்மை. இது போல் சித்தர்கள் வாழ்ந்த கி.பி. 1800  --  ஆண்டுகளுக்கு முற்பட்ட காலநிலையில் அவர்களின் வாழ்வியல் ஆதாரங்கள் ஒருவருக் கொருவர் தொடபு நிலை எப்படி இருந்து இருக்கும் என்பதையும் நாம் மனத்தில் இருத்திக் கொண்டு பார்க்க வேண்டும். இதிகாச புராணங்களில் வரும் கருத்துக்களைக் கொண்டு நோக்கினோமானால் உண்மை நிலை வெளிப்பாடு தெரியாது. திருஞனசம்பந்தர் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு பார்வதி பாலுட்டிய காலநிலையில் அவ்வூர் மக்கள் தொகை என்ன அந்த நிகழ்வை பார்த்தவர்கள் யார் ? அவர் பாடியவுடன் ஒரு கோவில் கதவு திறக்கிறது. இன்னொருவர் பாடியவுடன் கதவு மூடிக்கொள்கிறது என்றால் உயிர்க் கொல்லாமையை முன்னிலையாகக் கொண்ட ஒரு சமயத்தில் 7000-  ஆயிரம் சமண முணிவர்களை வாதிடுதல் என்ற பெயரில் கழுவேற்றிக் கொள்ள வேண்டும். ஏன் ஒரு பாடல் பாடி தன்  வயப்படுத்த வில்லை என்பதை சிந்திக்க வேண்டும். ஆரியவர்க்கத்தினர் ஆதி தமிழர்களை அடிமை கொள்ள என்னற்ற வழிகளை கைக்கொண்டனர் என்பது வரலாற்று ஆய்வில் கூறப்படுகிறது. மனித இனம் தோன்றி பல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் ஆகிறது இருந்தாலும் அவன் அறிவு வளர்ச்சி பெற்று மொழியறிவு, விவசாயம், நீர்ப்பாசனம், காலக் கணக்கீடுகள் போன்ற தன்  வாழ்வியலுக்கு தேவையான வற்றைக் கொண்டபின் அவனது பொற்காலமாக கி.மூ.5000—3000 அவர்களது பொற்காலம் என்று ராகுல் சாங்கிர்த்தியன் அவர்கள் தனது இந்து தத்துவயியலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மனிதனின் அறிவுக் கூர்மையை அதன் பின் கி.பி. 1700 க்குப் பிறகு புதுயுக கண்டுபிடிப்புகள் துவங்கிய காலத்தில் பார்க்கிறோம். இந்திய தத்துவ இயலானது விஞானத்தையோ, கலையையோ பின் தொடராமல், மதத்தின் வால்பிடித்துச் சென்றது. கி.மூ.மூவாயிரம்-இரண்டாயிரம் ஆண்டுகள் மனித இனத்தின் அறிவார்ந்த வாழ்க்கையின் சிறந்த காலமல்ல. இந்த நூற்றாண்டுகளில் மனிதன் மிகக் குறைந்த புதிய கண்டுபிடிப்புகளையே சாதித்தான். முதல் இரண்டாமாயிரம் ஆண்டுகள் உழைத்த மானசீகக் களைப்பிற்குப் பிறகு, கி.மூ. 700 க்குப் பிந்திய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் தத்துவ இயலின் பொற்காலமாகும். இந்தக் காலத்தில் தான் இந்தியாவில் உபநிசத்துக்கள் முதல் புத்தர், மகவீரர் வரை வேதங்களுக்கு புது விளக்கங்களும், கடவுள் மறுப்புக் கொள்கைகளும் வெளிப்படலாயின. கபிலரில் இருந்து புத்தர் போன்றோர் கடவுள் மறுப்புக் கொள்கைகளை வெளிப்படுத்தினர் இது வைதீக மதத்திற்கு பேரிடியாக விளங்கியது.     சித்தர்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களின் சிந்தனை வெளிப்பாடுகளை வெளிபடுத்தினார்கள். அதை நம்மவர்கள் சரியாக ஆய்வு செய்யாது. சித்தர்களை மிகப்பெரிய தோற்றத்தில் காண்பது நாம் சரியான புரிதல் இல்லாமல் பார்க்கிறோம் என்பதுவே உண்மை.
       மாந்தன் இயற்கைச் சீற்றங்களின் காரணம் புரியாத  காலத்திலும், நோய், நெருக்கடியான காலகட்டத்தில் அதற்கான காரணங்களை அறிய முடியாத காலத்தில் பயத்தின் வயப்பட்டு தன்னை கடவுள் என்ற சொல்லுக்குள் அடங்கி தன் பயத்தை போக்கிக் கொண்டான். அதனை பயன் படுத்திக் கொண்ட குமுகாயத்தில் சிலர் தங்களை அறிவு ஜீவிகளாகவும் இறைவனுக்கும் பயம் கொண்ட மானிடர்களுக்கும் இடையில் புரோகித பூசாரிகளாகவும், குருக்களாகவும் தங்களை தலைமை பீடத்தில் இருத்திக்கொண்டு தங்கள் வாழ்வியலுக்கும் நலனுக்கும் உடல் உழைப்பு இல்லாத இத்தொழிலை கைகொண்டு மனிதனின் பிரச்சனைகளின் அடிபடையில் மந்திரம், தந்திரம், யந்திரம், யாகம் என்று சடங்குகளின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கைகளை ஊட்டி வந்தனர். மற்றும் கடவுளரின் கோபத்தை தணிக்கவும் அவரது அன்பைப் பெறவும் தூபதீப, நிவேதானங்கள், ஆடல், பாடல், மேளதாள, தேர்த்திருவிழா, பூமிதித்தல் என்று பலவித காரியங்களை கூறி தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அவர்களின் போதனைப்படி அரசன் முதல் அன்றாடங்காச்சி வரை கோயில் ,குளங்கள் கோபுரங்கள் ஆகியவற்றை உருவாக்கவும் அதன் வழியாக தங்களை நிலை நாட்டவும் செய்தனர். அவனது படைப்புக் கடவுளுக்கு அம்பு, வேல், வில், வாள், கத்தி சூலம், கதை சக்கரம், தண்டு என்று தாங்கள் வாழ்வியலில் பயன் படுத்திய கருவிகளை எல்லாம் வல்லனவாகவும் ஆக்கல் அழித்தல் என்று சர்வவல்லமை கொண்ட கடவுளுக்கு உருவகப்படுத்திக் கொண்டனர். மிருக வடிவிலும், மனிதன் + மிருகம் கலந்த வடிவங்களிலும் மனித உருவிலும் தங்களின் பரிணாம வளர்ச்சி சிந்தனைத் திறனுக்கு ஏற்ப வடிவமைத்து தன்னைப் போல் மனைவி, குழந்தைகள், காதல் மனைவிகள், இவர்களின் பிறந்த நாள்கள், பிறரோடு போர்புரிந்து கண்ட வெற்றிகளையும் பெண்கள் மீது கொண்ட மோகங்களையும்  விழாக்களாகவும் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ற வகையில் புராண, இதிகாச கதைகளாக சொல்லி பாமர மனிதர்களை பயன் படுத்திக் கொண்டனர். இதில் இருந்து வேறுபட்டு சிலர் தத்துவயியலில் தங்களை இடுபடுத்திக் கொண்டனர்.
        மத்திய ஆசியாவில் இருந்து  இந்தியாவிற்குள் மேற்குக் கணவாய் வழியாகப் நுழைந்த ஆரியர் பழங்குடி மக்களாகிய (தஸ்யுக்கள்—தாசர்கள்) திராவிடர்களோடு கடும் போர்புரிய வேண்டி இருந்தது. இது தொடர்பான செய்திகள் ருக் வேத சுலோகங்களில் காணலாம்.
        ஆரியமத வேதங்களிலும் சாத்திரங்களிலும், இதிகாச, புராணங்களிலும் ஆரியர்கள் தேவர்கள் என்றும் ஆரியரல்லாதார் திராவிடர்கள் குரங்குகள், அசுரர்கள், இயக்கர்கள், இராட்சதர்கள் என்றும் எழுதி வந்தனர்.
         இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யுக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதை சித்தரிப்பதாகும். தென்னிந்தியாவில் வாழ்ந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதிவைகப்பட்டிருக்கிறது.
     :-- பி.சிதம்பரம்பிள்ளை--- திராவிடரும் ஆரியரும் பக்கம் – 4  
         இராமாயணக் கதையில் உட்பொருள் என்ன வென்றால் ஆரிய நாகரிகத்திறக்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் அவற்றின் தலைவர்களை இராமன் இராவணன் ஆகியவர்களுக்கு இடையே நடந்த போராகும்.
      :-- ராதாகுமுத் முகர்ஜி எழுதிய இந்து நாகரிகம் பக்கம் – 141 
          இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் வாழ்ந்த ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்.
      :-- ரொமேஷ் சந்திரதத் எழுதிய பண்டைய இந்தியாவின் நாகரிகம் பக்கம் – 139—141. 
                        தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
      :-- சுவாமி விவேகானந்தர் அவர்களின் – சொற்பொழிவுகள், கட்டுரைகள் இராமாயணம் பக்கம் – 587—589
                      ஆரியன் என்கிற பதம் ( சொல் ) இந்தியாவின் புராதனக் குடிமக்களிடம் இருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர்கள் பயன் படுத்திக் கொண்ட பதம் ஆகும். தஸ்யுக்கள் என்பது இந்திய புராதனக் குடிமக்களுக்கு ஆரியர்கள் கொடுத்த பெயராகும்.
       :-- 1922 --  ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட பழைய இந்தியாவின் வராலாறு என்னும் நூல்.
        அவர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனாதால் ஆரியரல்லாதாருடைய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி நேர்ந்தது.
       :-- பணடார்கரின் கட்டுரைகள் தொகுதி --- 3 பக்கம் – 10   
        இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தஸ்யுக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென்னிந்தியர்கள்) வடஇந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.
        :--- பி.தி. சீனிவாச அய்யங்கார் எழுதிய இந்திய வரலாறு முதல் பாகம்—10 
         தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள் என்னெனில் ஆரியர்கள் வடக்கேயிருந்து வந்தவர்கள்.
        :-- பாக்கர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய தென்னிந்தியாவும் இந்தியக்கலையும் பக்கம் –
          திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்கரத்தால் குரங்கள் என்றும் இராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள் ஆனால் இப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்கள்) பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்
         :-- ஜோசி சந்தர்தம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் பக்கம் – 15
           ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள் களையும் பூசித்தவர்கள் பின்பற்றியவர்களும் தங்களைத் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் இடையில் விடாப் பகை இருந்து கொண்டே வந்தது.
         :-- ஏஸி. தாஸ் எழுதிய ரிக்வேத காலத்த இந்தியா பக்கம் – 151
          ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை நூல்களில் தஸ்யுக்கள் என்றும் தானவர்கள் என்றும் இராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியர்கள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் ஏற்பட்ட இழப்பினால் இப்படி எழுதினார்கள்.
          :-- சி. எஸ். சீனிவாசராகவாச்சாரி மற்றும் எம்.எஸ். இராமசாமி அய்யங்கார் எழுதிய இந்திய வரலாறு முதல் பாகம் இந்தியா என்னும் தலைப்பில் பக்கம்—16—17  
           ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கனவாய் வழியாக நுழைந்து இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடம் இருந்து பல நாகரிகங்களை கற்றுக் கொண்டார்கள்.
             :-- எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சுருக்க வரலாறு பக்கம் – 105 
          சாதிப்பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்மந்தப்பட்டவர்கள்.கடைசி வகுப்பார் (சூத்திரர்) இந்தியாவின் புராதன குடிகள்.
            :-- புதிய சகாப்த கலைக்களஞ்சியம் 1925 --  பக்கம் 273  
            இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக்
கைப்பாற்றியதையும் உணர்த்தும் நூல்
           :-- சி.ஜே. வர்க்கி எழுதிய வரலாற்றுப் பாகுபாடு பக்கம் – 15 
           பொதுவாக கூறவேண்டும் என்றால் பிராமணர்கள் கல்வியை தங்களுக்கே சொந்த மாக்கிக் கொண்டு அந்த நிலைமையை முறை கேடாக பயன் படுத்தி தங்கள் விருப்பம் போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விபரங்களையும் உட்படுத்தி கட்டுக் கதைகள் அனைத்தும் வேண்டு மென்றே கெட்ட எண்ணத்துடன் திறமையாக பிறரை அழுத்தி அடிமைப் படுத்தி தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவையாகும்.
         :-- கென்றி பெரிட்ஜ் எழுதிய விரிவான இந்திய வரலாறு முதல் பக்கம் – 15
இராம, இராவண போரானது ஆரிய—திராவிடர்களுக்கு இடையில் நடந்த போர்க் கதையாகும்.
          :-- பண்டிதர் ஜவகர்லால் நேரு எழுதிய – DISCOVERI OF INDIA
        இராமாயணத்தில் வரும் தமிழர்கள் பெயர்களை இழி பொருள்தரும் பெயர்களாக அதனை எழுதிய வால்மீகி மாற்றி எழுதியுள்ளார். அன்றைய இலங்கையை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசையும் தன் புகழை வைத்து இராவணன் மனைவியின் பெயர் வண்டார்குழலி என்பதாகும். வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும் பூக்கள் அணிந்த கூந்தலையுடையவள் என்பது அதன் பொருள். ஆனால் வடநாட்டு கவிஞர் வால்மீகி மண்டோதரி என்று பெரிய வயிறு உடையவள் ( மண்டு-பெரிய – உதரி – வயிறு ) என இழிவாக எழுதிவைத்துவிட்டார். அது போலவே சூர்ப்பனகையின் இயற்பெயர் காமவல்லி ஆகும் ஆனால் வால்மீகி சூர்ப்ப என்றால் முறம், நகா என்றால் பல்லையுடையவள் அதாவது முறப்பல்லி என்று இழிவு படுத்தி எழுதி உள்ளார்.
     இராவணனின் தம்பி கும்பகர்ணனின் பெயர் குடக்காது அதாவது குடம் போன்ற காதுகளை உடையவன் ( கும்பம்—குடம்) கர்நான் காதுகளை உடையவன் எனப் பலித்து எழுதி விட்டார். ஆரியர்கள் இவ்வாறு தமிழினத்து மன்னர்கள், அரசியர்கள், வீரர்கள் பெயர்களை இழித்தும் பழித்தும் பெயர் சூட்டி விட்டனர். பக்தி மயக்கத்தில் இருந்த தமிழன் அதனை ஏற்றுக் கொண்டான் ஆரியர்களை நம்பி ஏமாந்தான். இன்றும் ஏமாந்து வருகிறான் என்பது மிகையல்ல.
     இருக்கு வேத காலத்தில் ஆரியர்கள் இந்திரன், அக்கினி, வருணன், சோமன் ஆகியோரே பெரிய தெய்வங்களாக வழிபட்டார்கள். பிற்காலத்தில் தான் உருத்திரன் விஷ்ணு போன்ற தெய்வங்களை உருவாக்கி வழிபட்டனர். இருக்கு வேதத்தில் அக்னியிடம் வேண்டு கோள் கூறும் போது “ ஏ அக்கினியே எங்களை காற்றிலும் நீரிலும் உள்ள ருத்திரன்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுவாயாக என்று கேட்பதில் இருந்து அன்றைய நாளில் அவர்கள் ருத்திரன் என்பது தங்களின் மறைமுக எதிரிகளான நோயை உண்டாக்கக் கூடிய ஒருவித காரணிக்கு இட்ட பெயராக உள்ளது ( இது பற்றி முன் பகுதியில் பண்டிட் கோபாலஜ்சார்லுவின் கருத்துரையில் பார்க்கவும்.) இப்பெயரே பிற்காலத்தில் ருத்திரன் என்று ஒரு தெய்வத்திற்கும் பின் அதே ருத்திரன் மீது தமிழர்களின் இலிங்க வழிபாட்டில் சிவன் பெயரை சூட்டிவிட்டனர். இதே போல் கணங்கள் (கூட்டம்) அதிபதி ( தலைவன்) என்பதை இணைத்து கணபதி என்று ஒரு தெய்வத்தை படைத்து  விட்டனர். இது போல் இராமாயணம் வால்மீகி எழுதியது, கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய ஸ்கந்த புராணம் ( ஸ்கந்தம் என்றால் விந்து என்று பொருள் அது மருவி கந்தன் என்று ஆகியது இக் கந்தனையே தமிழர் வழிபாட்டு இறைவனான முருகனை இணைத்து விட்டனர் பழனி முருகன் கோயிலின் சிலை அமைப்பில் கையில் தண்டு ( தடி ) வைத்து இருப்பதும் வேல் இல்லாது இருப்பது அறியலாம் முருகன் என்பது தமிழர் தலைவனாக இருந்த ஒருவரின் வடிவம் என்று நம்பப்படுகிறது. இது போல் தஞ்சையில் உள்ள ஒரு கோவிலில் சுப்பிரமணியர் என்னும் தெய்வத்திற்கு வாகனமாக யானை வடித்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.( பரணிதரன் எழுதிய அருணாச்சல மகிமை ) இது போன்ற ஆரியர்கள் தமிழரின் பண்பாட்டில் கலந்து விட்டனர்.
சித்தர்களின் சித்தாந்தம் தோன்றியது பற்றி :---
        சித்தர்களின் கடவுள் நிலை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் சில விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். நாம் இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்து வருகிறோம். எதையும் ஆய்ந்து அறிதல் வேண்டும். நாம் சித்தர்களை மிக உன்னத நிலையில் வைத்துப் போற்றி வருகிறோம். வரலாற்றில் அவர்கள் பங்கு மிக முக்கியமானது. இருந்த போதிலும் அவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அவர்களின் கொள்கைகள் தமிழரின் கொள்கைகளில் கலந்துள்ளதா என்பதும் ஆய்வுக்குரிய கருத்தாகும். அது போல் இன்றைய வளர்ச்சியடைந்த நிலையில் அவர்களின் மருத்துவக் கருத்துக்களும் ஒப்பு நோக்க வேண்டுவது. சித்த மருத்துவத்தின் பரிணாம வளர்ச்சிக்கு துணை செய்யும் என்ற நம்பிக்கையில் சித்தர் கருத்துக்களையும் மேற்கொண்ட தொகுதிகளில் விவரித்து வருகிறேன்.
     தமிழரின் வாழ்வியலில் ஆரியர் கலப்புக்கு முன் உள்ள சங்கப் பாடல்களில் இத்தகைய தத்துவ இயல்புகளும், கடவுள் கொள்கைகளும் பின்பற்றப் படவில்லை. என்பதை தொல் சங்க இலக்கியங்களில் வழியாக அறியலாம். சித்தர்கள் என்பாரில் அகத்தியர், திருமூலர் இருவரும் பேரிடம் வகிக்கின்றனர். இவர்களில் திருமூலரில் இருந்து அறிவது பொருத்தமாக இருக்கும். திருமூலர் நவநாதச் சித்தர்கள் என்பதும் கைலாய வர்க்கத்தினர் என்பதும் சித்தமருத்துவ நூல் வாயிலாக அறியப்படுகிறது. கைலாயம் என்பது இமயமலையை குறிப்பதாகும். இவர்கள் அவ்வழி வந்தவர்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். மற்றும் இவர் தன்னைத் தமிழ் அறிந்து கொண்டதை தன்பாடல்களில் தெரிவிக்கிறார். இவரது காலம் சுமார் ( கி.பி.இருநூறு )ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தியதாக  கருதப்படுகிறது. இதனால் ஆரியர் கலப்பிற்கு முன் நமது மருத்துவத்தின் நிலை என்ன என்பது ஆய்வுக்குரியதாகும். அதுபோல் தங்கம் செய்வது போன்ற கருத்துக்கள் நாகர்ச்சுணன் சித்தர் வழியாக மேற்குலகு வாதிகளின் தொடர்பின் மூலமாக வந்து இருக்க வேண்டும். இதைச் சித்தர்கள் தங்கள் கொள்கைகளை மக்கள் முன் கொண்டு செல்ல பயன் படுத்திக் கொண்டுள்ளனர். சித்தர் நூல்களில் வாதிமகன் வைத்தியன் என்ற சொற்றொடரை பயன் படுத்துவதில் இருந்து அறியலாம். சித்தர்கள் நேரடியாக விக்கராக ஆராதனை சடங்கு சம்பிராதயங்களை எதிர்க்காமல்  மறை முகமாக எதிர் கொண்டும் தங்கள் கருத்துக்களை புகுத்தினர். நம் உடலின் ஒவ்வொரு இடங்களிலும் கணபதி வாலை, பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு, லட்சுமி, ருத்திரன், ருத்திரி, என்று ஒவ்வொரு ஆதார இடங்களிலும் குறிப்பிட்டு அவர்களின் செயல் குறித்தும் சொல்லி பின் அந்நிலையில் இருந்து மாற்றி ஜீவாத்மா – பரமாத்மா என்ற கருத்தாக்கத்தில் கொண்டு சென்று விடுகின்றனர்.
      இவர்கள் கொள்கைகளுக்கு ஆதாரமாக இருப்பதை கி.மூ.200—100ல் தோன்றிய ஸ்வேதாஸ்வர உபநிஷத காலத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த உபநிஷதம், ஈசா—சாந்தோக்கிய – பிரகதாரன்யகம் – இவை மூன்றும் முதல் கட்ட ( கி.மூ. 700 ) உபநிடதங்கள் ஆகும். அடுத்து ஐயத்திரேயம், தைத்தியம், இரண்டும் இரண்டாம் காலக் கட்ட ( கி.மூ. 600—500  ) உபநிஷத்களாகும். அடுத்து பிரஸ்ஸனம், கேனம், கதா, முண்டகம், மான்டுக்கியம் இவை ஐந்தும் மூன்றாம் காலக்கட்ட ( கி.மூ.500—400 ) உபநிஷத்களாகும். அடுத்து கவ்ஷிதகி, மைத்ரி, ஸ்வேதாஸ்வரம் இவை மூன்றும் இறுதிக் காலக் கட்ட ( கி.மூ.200—100 ) உபநிடதமாகும்.
     இந்த சுவேதாஸ்வர உபநிடதம் கடைசி பதிமூன்றாவது உபநிடதமாகும், இறுதியானதும் ஆகும். இது தோன்றிய காலத்தில் நாட்டில் சைவ சம்பிரதாயம் நிலவியிருந்ததைத் தெரிந்து கொள்ளலாம். ருத்திரனின் ( சிவனின் ) மகிமை, சாங்கிய தத்துவ இயலின் இயற்கை—--ஜீவன்----கடவுள், ஆகிய பெரும் சித்தாந்தம், யோகம் முதலியவை ஸ்வேதாஸ்வர உபநிடதத்தின் முக்கிய விசயங்கள் ஆகும். இதற்கு முன் இந்நாட்டில் வேத கால வழக்கில் இல்லாத ருத்திரனை (சிவனியத்தை) மையமாக் கொண்டு தோன்றிய சைவ சம்பிராதயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
     சம்ஸ்கிருத இலக்கண வல்லுனரான பாணினியின் காலத்தில் ( கி.மூ.400 ) ஈஸ்வரன் என்னும் சொல் அரசனுக்கு பதிலாக பயன் படுத்தப்பட்டது. குப்தமன்னர்கள் காலத்தில் ( கி.பி. 400-600 ) தாம்பிரப் பட்டயங்களிலும், கள் வெட்டுக்களிலும் அரசனுக்குரிய விருதுகளிலும் பரேமேச்வரன் என்பதும் சேர்ந்து இருந்தது. கி.பி. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் பாரசிக மன்னர்களும் குப்த அரசர்களும் தாங்கள் பேரரசர்களாக மலர்ந்த போது புதிய தெய்வ வழிபாடுகள் புராணங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் இருந்து வேத காலத்திலிருந்து வந்து கொண்டு இருந்த வழிபாட்டு தெய்வங்களான தேவர்கள், இந்திரன், வருணன் போன்றோர் மாற்றி அவர்களுக்குப் பதிலாக பாரசிகர்களின் இஷ்ட தெய்வமான சிவன் குப்தர்களின் விருப்ப தெய்வமான விஷ்ணுவும் சர்வ வல்லமை உள்ளவர்களாக ஆக்கப்பட்டனர். இப் புதிய ஏற்பாட்டை அறிந்து கொள்ள பாபிலோனிய மர்துக் பற்றிக் கூறிய தெல்லாம் இங்கேயும் கதைகளாக கற்பனை செய்யப் படுகின்றன. இந்து மதத்தை ஆழ்ந்து நோக்கினால் கடவுள் வழிபாடு பல பரிணாம மாற்றங்களை கடந்து வந்ததை அறியலாம். எத்தனையோ கடவுளர்கள் வழிபாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டும் தாழ்ந்த நிலைக்கும் தள்ளப்பட்டனர். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற கூற்றுக்கு இணங்க அரசர்களால் கடைப்பிடிக்கப் பட்ட கடவுளர்கள் வழிபாட்டையே பெரும் பான்மை மக்கள் கடைப்பிடித்தனர். கி.மூ. ஐநூறு வாக்கில் இன்றைய சிவனையும், விஷ்ணுவையும் எண்ணிப்பார்ப் பார் இல்லை.
ஸ்வேதாவர உபநிஷதம் :---
      இது பற்றி முன் கூறிய உபநிசதங்களில் கடைசி 13 வது உபநிசதமாகும். இதில் சிறிய சிறிய ஆறு அத்தியாயங்கள் உள்ளன. எல்லாமும் செய்யுள் வடிவில் இருக்கின்றன. முதல் அத்தியாயத்தில் அத்வைத பிரமத்திர்க்குப் பதில் முப்பெரும் சித்தாந்தமான இயற்கை --- ஜீவன் --- கடவுள் ( பசு – பதி – பாசம் ) வலியுறுத்தப் பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாத்தில் யோகம் வர்ணிக்கப் பட்டுள்ளது. மூன்றாம் அத்தியாயத்தில் சீவாத்துமா, பரமாத்துமா குறித்தும் சைவ சம்பிரதாயம், துவைதம் குறித்தும் விபரங்கள் உள்ளன பல சுலோகங்களைப் பின்னால் பகவத்கீதை அப்படியே எடுத்துக் கொண்டுள்ளது. நான்காம் அத்தியாத்தில் முப்பெரும் சித்தாந்தமும் ஞானமும் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் அத்தியாத்தில் கபில ரிஷி பற்றியும் ஜீவாத்மாவின் உருவ வர்ணனையும் உள்ளன. ஆறாம் அத்தியாத்தில் முப்பெரும் சித்தாந்தம் சிருஷ்டி பிரம்மம் ஞானம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
       இவ் உபநிடதத்தில் ஒரு இடத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது “ பழங்காலத்தில் தோன்றிய ரிஷி கபிலரை எல்லா ஞானங்களுடன் எவர் ஏற்றுக் கொள்கிறார்களோ.”... புத்தருக்குப் பின்னால் பிறந்த சாங்கிய தத்துவ இயலின் நிறுவனரான கபிலருக்கு பிறகே ஸ்வேதாஸ்வர உபநிஷதம் தோன்றியது தெரிகிறது. கி.மூ.- 600---700  ஆண்டுகளைச் சேர்ந்த பழைய உபநிஷத்துக்களை காட்டிலும் இது மிகவும் பிற்காலத்தில் தோன்றியதாகும். கீழ்க்காணும் மேற்கோளால் இது மேலும் தெளிவாகும்.
        பழைய யுகத்தில் வேதத்தில் இந்த பரம ஞானம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஞானத்தை அமைதியற்ற மனிதனுக்கு உபதேசிக்கக் கூடாது. தனது மகனுக்கோ தவிர வேறெவர்க்கும் அதைக் கற்பிக்க கூடாது. இது கி.மூ. 700 ல் தோன்றிய சாந்தோக்ய உபநிசத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காலத்தை மேற்கண்ட மேற்கோள் பழைய யுகம் என்று குறிப்பிடுகிறது.
(க) ஜீவன் – கடவுள் – இயற்கை சித்தாந்தம் :--
        முண்டக உபநிஷதம் புத்தர் காலத்திய துறவிகள் உபநிஷதம் என்றும் அதிலே முப்பெரும் சித்தாந்தம் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. இவ்விஷயத்தை விளக்க கீழ்க்காணும் பல வாக்கியங்களை நாம் பார்க்கலாம். இவ் உபநிஷத்தின் பெயர் தெரியாத ஆசிரியரின் நோக்கம் முப்பெரும் சித்தாந்தத்தை வலியுறுத்துவது தான் என்பது இவற்றில் இருந்து தெரிகிறது.
        அந்த பிரம சக்கரத்தில் அன்னப் பறவை (ஜீவன்) சுற்றித்திரிகிறது. அது பிரம்ம ஞானம் பெற்று அந்தப் பிரமத்திலேயே இணைந்து அமுதமயமான முக்தியடைகிறது.
        ஞானியான பிரமமும் அஞாநியான ஜீவனும் இரண்டுமே பிறப்பில்லாத வைகளாகும். அவற்றில் ஒன்று கடவுளும், மற்றொன்று கடவுளல்லாத அடிமையுமாகும். ஒன்று பிறப்பில்லாத இயற்கையாகும். அது ஜீவன் அனுபவிக்கும் பல்வேறு பொருள்கள் நிறைந்தது. ஆன்மா அல்லது பிரமன் எல்லையற்றதும் பல்வேறு உருவங்களுடையதும், செயலற்றதுமாகும் மூன்றையும் கோர்த்துப் பிரமம் இருக்கிறது. இயற்கை அழிவுடையது மேலும் ஜீவாத்மா ஒரு ஆட்சி செலுத்துகிறார். ஜீவாத்மாவுக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பிரமன் அறியத்தகுந்தது. இதைத் தவிர வேறெதுவும் அறியத்தகுந்தது இல்லை. ஜீவனையும், இயற்கையையும், பிரமத்தையும் அறிவது என்பது முப்பெரும் பிரம்மன் என்று தரப்பட்டது.
         சிவப்பு – வெள்ளை – கருப்பு நிறங்களில் ஒரே உருவமுள்ள மக்களைப் படைத்துக் கொண்டு இருக்கும் இயற்கையில், ஜீவன் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு தன்னை மறந்திருக்கிறது. ஆனால் அது அனுபவித்த சுகபோகங்களைக் கொண்டு இந்த இயற்கையைப் பிரம்மம் விட்டு விடுகிறது. “இரண்டு தோழமைப் பறவைகளான ஜீவனும், கடவுளும் ஒரே மரத்தை அனைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று பழத்தைத் தின்கிறது, மற்றொன்று பழத்தைச் சாப்பிடாமல் நாலாதிசைகளிலும் ஒளிவிடுகிறது. மாயக் காராணான கடவுள் இவ்வுலகத்தைச் சிருஷ்டிக்கிறான். அதில் மற்றொன்று மாயையில் கட்டுண்டு கிடக்கிறது. இயற்கை மாயையை என்பதும் மகேஸ்வரன் மாயக்காரன் என்பதுவும் தெரிந்து கொள்”
         பல ஜீவன்களுக்கு மத்தியில் ஒரு ஜீவன், பல உயிர்களுக்கு மத்தியில் ஓர் உயிர் பலரின் கோரிக்கைகளை நிறை வேற்றுகின்றன. ஜீவன்களின் எஜமானனான தலைவன் நற்குனங்களின் இருப்பிடமானவன். உலக நிலைமைக்கும் தளைகளுக்கும் முக்திக்கும் காரணமாவான்.
         ஸ்வேதாஸ்வர உபநிசதத்தையும் பகவத்கீதையையும் இணைத்து ஆராய்ந்தால், கீதாசிரியரின் கையில் ஸ்வேதாஸ்வர உபநிஷதம் இருந்தது என்பது தெரிகிறது. கீதாசிரியன் இவ் உபநிஷத்தில் இருந்து பயனடைந்தது மட்டும் அல்லாமல் இதன் நடையையும் எடுத்துக் கொண்டு, கீதையை இயற்றியவரின் பெயரில்லாமல் வாசுதேவனான கிருஷ்ணனின் பெயரை அத்துடன் இணைத்து மகா கெட்டிக்காரத்தனம் காட்டியிருப்பது தெரிகிறது. சைவர்களுக்கு எதிரான வகையில் வைணவர்களுக்கும் ஒரு மகத்தான நூலாக கீதையை தாயார் செய்ய வேண்டும் என்பதே கீதையை எழுதியவரின் முக்கிய நோக்கமாக தெரிகிறது. கி.மூ. முதல் நூற்றாண்டில் தோன்றிய ஸ்வேதாஸ்வர உபநிஷத்திற்கு பின்னால் நான்கைந்து நூற்றாண்டுகலுக்குப் பிறகு தோன்றிய பகவத் கீதை மிகக் காலந்தாழ்ந்து வந்தாலும் மக்களின் அமோக ஆதரவைப் பெறுவதில் கீதாசிரியன் எண்ணம் வெற்றியே பெற்றது. வட இந்தியாவில் கீதை வைணவர்களுக்கு முக்கியத்துவம் வரும்படி செய்வதில் மாபெரும் வெற்றி பெற்றது.
சைவ சித்தாந்தம் :--
     ஸ்வேதாஸ்வர உபநிஷத்தின் முப்பெரும் சித்தாந்தத்தில் கடவுள் அல்லது பிரம்மத்துக்குப் பதிலாக இந்துக்களின் முப்பெரும் தேவர்களில்  ஒருவரான ருத்திரர் அல்லது மகேஸ்வரருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
      “ ஒரேயொரு ருத்திரர் இருக்கிறார் அவர் இவ்வுலகங்களைத் தனது அதிகாரத்தால் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.”
         “ மாயை இயற்கையாகும், மாயக்காரன் மகேஸ்வரனாகும் எல்லா உயிர்களிலும் மறைந்துள்ள சிவனை அறிந்து கொண்டு ஜீவன் எல்லா மாய வலைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறது.”
         பிரம்மம் – சைவ உபநிஷதமான ஸ்வேதாஸ்வர உபநிஷதம் பிரம்மம் என்றால் தனது இஷ்ட தேவதையான “ சிவன் “ என்று பொருள் சொல்லுகிறது. பிரமத்தின் உருவத்தை வர்ணிக்க இதுவும் பழைய உபநிஷத்துக்களின் உதவியை எடுத்துக் கொள்கிறது. எனினும் பல இடங்களில் அது தெளிவாகவே சொல்கிறது.
        “ பிரம்மத்துக்கு முன்னாலோ, பின்னாலோ ஒன்றுமே இல்லை. அதைக் காட்டிலும் சூட்சமமானதோ, மகத்தானதோ ஏதும் இல்லை. சொர்க்க லோகத்தில் அது ஒன்றே தனியாக அசைவற்று நின்றிருக்கிறது. இவ்வுலகமெல்லாம் அந்த புருஷன் நிறைந்திருக்கிறான்.
          இந்த உலகம் அனைத்தும் நிரந்தரமாக எவனால் சூழப்பட்டுள்ளதோ காலத்திற்குக் காலமாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் எல்லாம் அறிந்தவனாய் யார் இருக்கிறானோ, அவனால் இயக்கப்பட்ட செயலாலயே இங்கே நிலம், நீர், நெருப்பு முதலியவை உண்டாகின்றன. அவன் கடவுள்களுக் கெல்லாம் பரமேஸ்வரன். தேவர்களுக் கெல்லாம் பரமதேவன். பசுக்களின் சொந்தக்காரர்களான பசு பதிகளுக்கெல்லாம் பரம பதியாவான் தொழுகைக்குரிய உலகநாதனான அத்தேவனை நாம் அறிந்து கொள்வோமாக ! அவனுக்குக் காரண காரியங்கள் எவையுமில்லை. அவனுக்குச் சமமானவர்களோ, சிறந்தவர்களோ எவருமில்லை. அவன் பிரம்மாவை முதலில் படைத்து அவர் கரங்களில் வேதங்களைத் தருபவனாகும்.
ஜீவாத்மா :--- முப்பெரும் சித்தாந்தத்தில் ஏற்கனவே ஜீவாத்மா கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்வேதாஸ்வர உபநிஷதம் ஜீவாத்மாவைக் கடவுளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் தீவிரமாக முனைந்திருக்கிறது. இருப்பினும் பழைய உபநிஷத்துக்கள் எடுத்து கூறிய பிரம்ம – அத்வைதத்தை மறுக்கும் துணிவு அதற்கு இல்லை. அதனாலேயே “த்ரயம்....... பிராஹ்மமேதத் “ என்பதிலும் ( மூன்று .... இது பிரம்மமாகும் ) திரிவிதம் பிராஹ்மமேதத் என்பதிலும் ஜீவன், கடவுள், இயற்கை மூன்றையும் ஒன்றென்று கூறி ஒன்றுபடுத்த விரும்பியது ஜீவனில் பால் வேற்றுமை இல்லை.
     “அது பெண்ணுமல்ல, ஆணுமல்ல, இரண்டும் அல்லாதுமல்ல, எந்த எந்த உடலை அது ஏற்றுக் கொள்கிறதோ அதனுடன் இணைந்து விடுகிறது.”
     ஜீவன் மிகவும் நுணுக்கமானது, அதன் அளவு :--
    “கேசத்தின் நுனியை நூறு பாகங்களாகச் செய்து, அதில் ஒரு பாகத்தை மீண்டும் நூறு பகுதிகளாகப் பிரித்தால் அந்த ஒரு பாகத்தின் அளவு ஜீவனாகும்.”
சிருஷ்டி :---ஸ்வேதாஸ்வர உபநிஷதம் சிருஷ்டியை மாயவலை என்று குறிபிட்டாலும், பிரம்மம் காரண கர்த்தா அல்ல என்றும் ஐயம் தோன்றாமல் செய்வதற்காக “ ஒரு தேவன் முக்கியமான இயற்கையில் தோன்றிய நூலிழை களினால் சகஜமாகவே உலகத்தைச் சுற்றியிருக்கிறான் “ என்று கூறுகிறது.
முக்தி :-- ஸ்வேதாஸ்வர உபநிஷதம் முக்தியைப் பெற ஞானத்தை வலியுறுத்துகிறது. இருந்தாலும் “ முக்தியைக் கோரும் அந்த தேவனை சரணடைகிறேன் ” என்னும் வாக்கியத்தின் மூலம் அது சரணாகதி என்னும் சொல்லை பகவத் கீதைக்கு வழிகாட்டியாக உதவுகிறது. வைணவர்களின் பஞ்சராத்ர ஆகம மந்திரங்களைப் போல, அக்காலத்திய சைவ ஆகம மந்திரங்களில் கூட சரணாகதி தத்துவுவம் இருந்திருக்கலாம். ரகசியமான கடவுள் தத்துவமும் சரணாகதி தர்மத்தின் பக்கம் தான் அழைத்துச் செல்கிறது. இருப்பினும் பகவத் கீதை சொல்லிய எல்லாத் தர்மங்களையும் விட்டு சிந்திக்காமல் நேரே வந்து என்னைச் சரணடைந்து விடு, நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் பாதுகாக்கிறேன் என்கிறது. ( இது மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்துகிற சொல்லாகும். இதன் மூலம் கிருஷ்ன பகத்தர்களிடம் அடிமைத்தனத்தை மறைமுகமாக திணிக்கிறது.” அதனாலேயே ஸ்வேதாஸ்வர உபநிஷதம் கீழ்க்கண்டவாறு கூறியது.
“ஜீவன் தேவனை அறிந்து கொண்டு எல்லா மாய வலைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறது. “
“மனிதர்கள் தோலைப் போலவே வானத்தைச் சுருட்ட முடியும் போதுதான், தேவனை அறிந்து கொள்ளாமலேயே துன்பம் முடிவடைந்துவிடும்.
யோகம் :-- வேதங்களில் யோகத்தின் பெயர்  குறிப்பிடப் படவில்லை. இன்று “யோகம்” என்னும் சொல்லுக்கு என்ன பொருள் கொள்ளப் படுகிறதோ, அந்தப் பொருள் பழைய உபநிசதங்களில் இல்லை. ஸ்வேதாஸ்வர  உபநிசதத்தில் நாம் யோகம் வர்ணிக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். அதற்கு முன்னால் புத்தரின் உபதேசங்களில் யோகத்தின் வர்ணனை காணக்கிடக்கிறது. பின்னால் தோன்றிய பகவத்கீதையில் சாங்கிய யோகம் [சாங்கிய யோகம் :இது மகரிஷி கபிலரின் புகழ்பெற்ற தத்துவமாகும். இதில் உயிரற்ற இயற்கையும், உயிருள்ள புருசனுமே (கடவுளுமே) உலகத்தின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன.] இணைத்துக் கொள்ளப்பட்டது. ஸ்வேதாஸ்வர  உபநிஷத்துதான் கீதைக்கு வழிகாட்டியாகவும் அடிப்படையாகவும் உள்ளது. அது இயற்கை, புருஷன் (கடவுள்) என்பவற்றை மட்டுமல்லாமல், கபிலரிஷியைக் கூடக் குறிப்பிட்டு அவரை தன்னவராக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அது கடவுளை ஒப்புக்கொள்ளாத சாங்கிய தத்துவத்தை, கடவுளை ஒப்புக் கொள்ளும் தத்துவமாகச் சித்தரித்து உள்ளது. பிற்காலத்தில் பகவத்கீதையை எழுதியவர் இவ்விஷயத்தை நான்கு பயன் படுத்திக் கொண்டார். ( வரலாற்றின் நெடுகில் நாம் பார்ப்போமானால் ஆரியம் சந்தர்ப்பவாத செயல்களில் மிகத் திறமையாக செயல் பட்டு வருவது அறியலாம் ) அது சாங்கியத்தையும், யோகத்தையும், ( யோகம் : இது பதஞ்சலியின் புகழ் பெற்ற தத்துவமாகும். இதில் மனதை ஒரு நிலைப்படுத்தி, கடவுளில் ஒன்றிடும் முறை சொல்லப்பட்டிருக்கிறது.) இந்த விசயத்தில் கீதை தனக்கு சாதகமாக “அறிவற்றவர்கள் தான் சாங்கியத்தையும், யோகத்தையும் வெவ்வேறானவை என்று கூறுவார்கள் என்று பிரகடனப் படுத்தியது.
    ஸ்வேதாஸ்வர உபநிஷத்தின் யோக முறையை பகவத்கீதை கீழ்க்கானு மாறு எடுத்துக் கொண்டது:
   “ 










மூன்று இடங்களில் உடலைச் சமமாக உயர்நிலைப் படுத்திக் கொண்டு பிரம்மம் என்னும் படகின் உதவியைக் கொண்டு இதயத்துக் குள் மனத்தால் புலன்களைத் தடுத்து நிறுத்தி ஞானிகலானவர்கள் எல்லாப் பயங்கரச் சுழல்களையும் கடக்க வேண்டும். அம்முயற்சியில் ஈடுபட்டு உயிர்களைத் தடுத்து, அவை பலவீனமான பிறகு, மூக்கினால் சுவாசிக்க வேண்டும். கட்டுக்கடங்காத குதிரைகள் பூட்டிய தேரைப் போல் ஞானிகள் சற்றும் அசந்திராமல், மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகளற்ற பிரதேசம், புனிதச் சூழ்நிலை, கற்களோ, நெருப்போ, மணலோ இல்லாத இடம், சொல் துணையையும், நீர்த்துனையையும் மனத்திர்க்குகந்தவையாகக் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆனால் கண்களைக் கவராதவையாக அவைகளைப் பார்த்துக் கொண்டு தனிமையான குகையில் யோகத்தைப் பயில வேண்டும். யோகத்தில் பிரம்மத்தை வெளிப்படுத்தும் இவ்வுருவங்கள் முதலில் வருகின்றன, பனித்திரை, புகை, சூரியன், நெருப்பு, காற்று, மின்மினிப் பூச்சி, மின்சாரம் வைடுரியம் சந்திரன், யோக குணங்கள் இயங்கத் தொடங்கி விட்டால், யோகம்மென்னும் நெருப்பு மயமான அந்த யோகிக்கு நோயோ முதுமையோ, மரணமோ ஏற்படுவது இல்லை. உடலில் பளுவின்மையும், உடல் நலமும், பற்றற்ற தன்மையும், நிறத்தில் மெருகும், குரலில் இனிமையும், நல்ல மனமும், மல மூத்திரங்கள் குறைந்தும் யோகத்தின் துவக்க நிலையில் காணப்படுகின்றன. யோகி விளக்கைப் போல யோகத்துடன் கலந்து ஆன்மசத்தியால் பிரம்ம தத்துவத்தைத் தரிசிக்கும் போது எல்லாத் தத்துவங்களைவிடப் புனிதமான பிறப்பில்லாத, நிரந்திரமான தேவனை அறிந்து கொண்டு எல்லா மாய வலைகளில்லிருந்தும் விடுதலை பெற்று விடுகிறான். மோட்சத்தை பெற ஞானமும் யோகமும் போலவே குருநாதரும் மிக இன்றியமையாதவராவர். ஆனால் இந்தக் குருநாதர் வேதங்களும் உபநிஷதங்களும் எடுத்துக் கூறிய கல்வி கற்ப்பிக்கும் குருநாதர் அல்ல, இவர் கடவுளுக்கு அடுத்தபடியில் உள்ளவர். இவ்வாறு சுவேதாஸ்வர உபநிஷதம் குரு பற்றிக் கூறுகிறது. தேவனில் பரமபக்தி இருக்க வேண்டும். அதேபோல் குருவினிடத்திலும் பக்தி செலுத்த வேண்டும். அவருடைய போதனையால் தான் பிரமதத்துவம் அறியப்படுகிறது.
      இதில் இருந்து யோகம் எந்த வழியாக சுவேதாஸ்வர உபநிஷதம் கீதைக்கும் சங்கரருக்கும் மற்றும் கபிலரின் சங்கியோகம் மாற்றப்பட்டு ஆரியத்தை வலுப்படுத்த உதவியது என்பதை அறியலாம்.




பொளத்தம் :---  
      தத்துவ இயலில் ஆதி சங்கரரை மறைமுக பவுத்தர் என்றும் கூறுவதுண்டு, காரணம் அவர் புத்தரின் பல சித்தாந்தங்களை எடுத்துக் கொண்டு மறை முகமாக ஆதரித்தார். பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்பியது. சாதி வரம்புகளைத் தகர்த்தது. நிறத்தால் சொல்லப்பட்ட வேற்று மைகளை நீக்கியது. ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது. ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் சமாமான தகுதி வழங்கப்பட்டது.மக்களின் அனைத்துப் பிரிவினரும் ஏறக்குறைய பங்கிட்டுக் கொள்ளத்தக்க வகையில் பொருளாதார வளத்தைக் கொண்டு வந்தது. பவுத்த சமயம் ஓங்கியிருந்த காலத்தில் அனுபவித்த உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கற்றறிந்த விழிப்புணர்ச்சி கொண்டிருந்த மக்கட் பிரிவினர் விருப்ப மில்லாதவர்களாக இருந்தனர். பார்ப்பனத் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சிக்கலாக அது இருந்தது.
       பவுத்தத்தின் வீழ்ச்சியும் ஆரியத்தின் வெற்றியும் இந்தியச் சமுகத்தில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியத்தில் வியப்பேதும் இல்லை. பவுத்த -----சாங்கிய ஆசிரியர்களால் மக்களிடையே பொருள் முதல் வாதப் பார்வை உருவாக்கப்பட்டிருந்தது, அதனால் கற்றறிந்த பலர் பார்ப்பனர் வலையில் விழ மறுத்துப் பார்ப்பனியக் கோட்பாடுகள் குறித்துப் பலப்பல ஐயப்பாடுகளை எழுப்பக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுக்கு உரிய வகையில் பதில் சொல்லத் தகுந்த ஒரு தத்துவத்தை உருவாக்கத் தவறினால் அவர்களின் வெற்றி நீடித்து நிலைக்க முடியாது என்று உணர்ந்த ஆரியத் தலைவர்கள் செய்வது  அறியாது  திகைத்தனர்.
    உறுதிப்பாடற்ற அந்த நிலையைச் சமாளிக்கும் வகையில் முதற்கட்டமாகப் பார்ப்பனர்கள் வேத நெறியையும், சடங்குகளையும் தீவிரமாக, உறுதியாகவும் பின்பற்றத் தொடங்கியதன் மூலம் பழைமையான வேத நெறிகளைப் புதுப்பிக்க முயன்றனர்.
    மனு, வாத்ஸ்யாயனர், பராசரர் ஆகியோரும் வேறு சிலரும் மேற் சொன்ன நடைமுறைகளைத் தீவிரமாக வலியுறுத்தினர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சாங்கியக் கோட்பாடுகளைத் தங்கள் உள்ளத்தில் ஏத்திக் கொண்டிருந்த அறிவாளிகளைத் தங்கள் பால் ஈர்ப்பதற்கு பார்ப்பனர்கள் தங்கள் புனித நூல்களில் திருத்தங்களையும், மாற்றங்களையும் சேர்க்கைகளையும் செய்யத் தொடங்கினர். புனித நூல்களில் செய்த திருத்தங்களும் நாட்டில் நிகழ்ந்திருந்த புரட்சியின் அரை கூவலை எதிர் கொள்ளப் போது மானவையாக இல்லை. இந்திய மக்களின் இழிநிலைக்குத் தீர்வு, பார்ப்பனிய எதிர்ப்புத்தான் என்பதில் உறுதியாக இருந்தவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் புதிய கருத்தாக்கம் ஒன்றை உருவாக்குவது இன்றியமையாதது. என்பதைப் பார்ப்பனர்கள் உணர்ந்தனர்.
    அந்தத் தேவையை நிறைவு செய்யும் வகையில் புனித நூல்களுக்குப் பல்வேறு உரை விளக்கங்கள் வரையப்பட்டன, கி.பி. இரண்டாம் நூற்றண்டில் எரிநட்சத்திரம் போல் ஒளிவீசித் தோன்றிய பத்ராயனார் என்பவர் எழுதிய பிரம்ம சூத்திரம் அறிவாளிகளின் கவனத்தைக் கவர்ந்தது. கடவுள், ஆத்மா, பிரபஞ்சம் (இயற்கை) ஆகியவை பற்றி முக்கியமான உபநிசதங்களில் காணப்பட்ட முரண் பாடுகளுக்கு விளக்கம் தர முயன்றனர். மேலும் ஒன்றுக் கொன்று இணக்கமாக அமையும் வகையில் அவற்றை வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். பத்ராயனார் வேதத் தத்துவத்தை மென்மையாக விமர்சனம் செய்தார். ஆனால் அவருடைய தாக்குதல் அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் இக்கட்டை உருவாக்கி வந்த பொருள் முதல்வாதிகளை நோக்கியே இருந்தது.
   பத்ராயனரின் நூல் 555 – சூத்திரங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பிரம்மமே அனைத்துக்கும் மேலான உண்மையாகும்  என்ற கொள்கையில் தொடங்கிப் படிப்படியாகப் பிரபஞ்ச ஆற்றலாகிய பிரமத்தின் ஒரு பகுதியே ஜீவன் என்ற கருத்தை மையப்படுத்துவதாக அந்த நூல் அமைந்தது. அந்த நூலின் பெரும்பகுதி பகுத்தறிவாளர்கள் – பொருள் முதல்வாதிகள் ஆகியோரின் கொள்கைகளை மறுப்பதாக அமைந்திருந்தது. குறிப்பாகப் பத்ராயனரை ஆழமாகக் கவலைக்குள்ளாக்கிய சாங்கியத் தத்துவத்தை மறுப்பதாக அந்நூல் இருந்தது.
   சாங்கிய தத்துவ ஆசிரியர்களின் செல்வாக்கை வீழ்த்திடப் பத்ராயனர் பெருமுயற்சி மேற்கொண்டார் அவர்களைத் தமது முதல் எதிரிகளாகக் கருதினார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது பொருள் முதல்வாதக் கருத்துக்கள் மக்கள் உள்ளத்தில் அவரது காலம் வரை ஆழமாகப் பதிந்திருந்தது. என்பதை நாம் உணர முடியும்.
  புதிய பார்ப்பனத்தின் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் எழுப்பிய மறுப்புக்களைத் திடமாக எதிர் கொள்ள முடியாமல் பத்ராயனர் திணறினார். முதன்மையான சில உபநிஷத்களை எழுதியவர்களைப் பற்றி ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெவ்வேறு கருத்துக்களைக் கூறினார். அவர் கூறியதுபற்றி ஐயப்பட்டவர்கள் திறனாய்வாளர்கள் ஆகியோரைத் திருப்திப்படுத்தும் வகையில் போதிய ஆதாரங்களை அவர் காட்டவில்லை.
    பிரம்மச் சூத்திரங்கள் புதிய பார்ப்பனியத்தின் முதன்மையான படைப்பாகச் சொல்லப்படுகிறது. அது ஆச்சாரச் சிந்தனைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணியாற்றுவது. ஆனால் பகுத்தறிவாளர்களும், படிப்பறிவாளர்களும் பிரம்ம சூத்திரங்களின் தாக்கத்தால் மாறிவிடவில்லை, தொடர்ந்து புதிய பார்ப்பனியக் கோட்பாட்டு பற்றியும் ஐயப்பாடுகளையும் வினாக்களையும் எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
    உபநிஷதங்களின் தத்துவத்தை விளக்கவும் அதன் மீது எழுப்பப்படுகின்ற ஐயப்பாடுகளை நீக்கவும் வல்ல ஆசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குக் கொஞ்சம் முன்பின்னாக அத்தகைய தத்துவ ஆசிரியர் ஒருவர் தோன்றினார். அவர் பகவத் கீதையை இயற்றினார். பவுத்தத்திற்குப் பிந்திய இந்தியாவில் ஆரிய சமயக் ( இந்து ) கோட்பாடுகளையும் ஆரிய சமயச் சார்புடைய வாழ்க்கை முறையினையும் வளர்த்தெடுப்பதில் உறுதி யானதாகவும் வரலாற்று வழிகாட்டியாகவும் பிராமணர்களுக்கு பகவத் கீதை விளங்கியது.
      பார்ப்பனக் கொள்கை கோட்பாடுகள் உபநிஷத்களில்  விவாதிக்கப்பட்டு விலக்கப்பட்டவையாக இருந்தாலும் அவற்றைப்பற்றி வினாக்களை எழுப்புகின்ற அறிவாளிகளுக்குக் கூடுதலாக விளக்கங்களைத் தரவேண்டிய நிலையில்தான் இருந்தன. அந்தக் கோட்பாடுகள் வேதாந்தத் தத்துவத்தில் தூவப்பட்டன. பத்ராயனரின் முயற்சி எதிர்ப்பாளர்களுக்கு ஈடுகொடுக்க இயலாததாக இருந்தது. ஆனால் 700  எளிய செய்யுட்களாலான பகவத் கீதை எதிர்ப்பாளர்களைச் சமாளிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தது. ஒரு புனித நூல் என்ற வகையில் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்று சாதனை படைத்தது.
     பவுத்த தத்துவ அறிஞரான தர்மகீர்த்தி (கி.பி.600 )  பின்னர் சாந்த ரட்சிதர், கமலசீலர், ஞானஸ்ரீ, போன்ற பவுத்த தத்துவாசிரியர்களைப் பார்க்கிறோம். அவர்களைப் போலவே பிராமணர்களில் ஆதிசங்கரரும், அவரைவிட உயர்ந்தவர்களான உதயனார், கங்கேஷர் போன்ற நியாய இயலார்களும், பார்த்தசாரதி போன்ற  மீமாம்ஸ இயலாளரும், வாசஸ்பதி, ஸ்ரீஹர்ஷர், ராமானுஜர் போன்ற வேதாந்ததிகளும் தோன்றினர். இவர்கள் அனைவரையும் விடக் காச்மீரத்தைச் சேர்ந்த சைவரான வசுகுப்தர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் பவுத்தர்களின் விஞ்ஞான வாதத்தைக் கொச்சைப் படுத்தாமல் அதை அலைபாயும் அழிவுடை விஞ்ஞானமாக ஏற்றுக் கொண்டார். பவுத்தர்களின் ஆலய விஞானத்துக்குச் ( கூட்டு உருவத்திலுள்ள விஞ்ஞானத்துக்கு ) சிவனின் பெயரைச் சூட்டி தனது தத்துவ இயலுக்கு அடிக்கல் நாட்டினார். உபநிஷத்துக்களை இயற்றிய தத்துவாசிரியர்களின் கருத்துக்களையும், பாதராயணரின் கருத்துக்களையும் ஏற்கனவேயே விவரித்துள்ளோம். இவர்களுடைய கருத்துக்களை விசிஷ்டாத்வைத இயலாலாரான ராமானுஜர், மற்றவர்களைவிட நியாய உணர்ச்சியுடன் விவரித்திருக்கிறார். பாதராயனர் மற்ற தத்துவ ஆசிரியர்களின் கண்டனத்திலிருந்து குறிப்பாக பவுத்தர்களின் தாக்குதலிலிருந்து உபநிஷத் – தத்துவ இயலை பாதுகாக்கத் தனது நூலை எழுதினார். நியாயம், வைசேஷிக வாதங்கள் பிரசாரத்தில் இருந்தன. அவைகளுக்கு எதிரிடையாகப் பவுத்தர்களின் எதிர் வாதங்களும் கிளம்பின. உபநிஷத்தின் வேதாந்த வாதம் நடைமுறையில் இருந்தது. பவுத்தர்கள் அதை மறுத்துரைத்துக் கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக இப்படி வாத விவாதங்கள் நடந்து வந்தன. இவைகளிலிருந்து சம்வாதம் என்னும் பேச்சுவார்த்தை ஆரம்பமாயிற்று. பழைய நியாய வைசேஷிக வாதங்களையும் திக்நாகர், தர்மகீர்த்தி முதலிய பவுத்த தத்துவ அறிஞர்களின் எதிர் வாதங்களையும் இணைத்து கி.பி.1200 – ல்  கங்கேசர் ஒரு புதிய தர்க்க சாஸ்திரத்தை – நவ்யா நியாயம், தத்துவ சிந்தாமணி ஆகிய நூல்களின் வாயிலாகத் தோற்றுவித்தார். அவைகளில் பழைய நியாய வைசேஷிகங்களின் பல வலுவற்ற கொள்கைகளை விட்டு விடும் முயற்சி செய்யப்பட்டது. வசுகுப்தர் தன்னுடைய சைவ சித்தாந்தத்தில் பிராமணர்களின் கடவுளான சிவனையும், பவுத்தர்களின் அழிவுடை விஞ்ஞானத்தையும் இணைத்து ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கினார். உபநிஷத்துக்களும், பாதராயணரும் கூட வாத, எதிர்வாதம் இல்லாமல்  தமது கருத்துக்களை நிலை நிறுத்த முடியவில்லை. இதனாலேயே கவுடபாதரும் புத்தரின் சீடர்களான நாகார்ஜுனர், அசங்கர் ஆகியோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றினார், கௌடபாதர் அசங்கரைத்  தொட்டும்  நாகார்ஜுனரின் சூனிய வாதத்தை நெருங்கியிருக்கிறார். அவர் தவிதாம்பர் ( மனிதர்களில் சிறந்தவர் ) சம்புத்தர் ( நற்புத்தியுடையவர் ) என்று சொல்லப்பட்ட புத்தரிடம் தனது பக்தியைத் தெளிவாகத் தெரிவிக்கிறார். கவுடபாதரின் சீடருக்குச் சீடரான சங்கரர், அசங்கரின் கருத்துக்களுக்குச் சமீபத்தில் இருக்கிறார். அத்துடன் அவர் தன்னை யாரும் பவுத்தர் என்று சொல்லி விடக்கூடாதே என்று பெருமுயற்சியும் எடுத்துக் கொள்கிறார். கவுடபாதரின் சீடருக்குச் சீடரான சங்கரர் அசங்கரின் கருத்துக்களுக்குச் சமீபத்தில் இருக்கிறார். அத்துடன அவர் தன்னை யாரும் பவுத்தர் என்று சொல்லி விடக்கூடாதே என்று பெருமுயற்சியும் எடுத்துக் கொள்கிறார்.
     சம்ஸ்கிருத மொழியில் காளிதாசர், பவபூபதி, பாசர் போன்ற கவிஞர்களும்,  திக்நாதர், உத்யோத்கர், குமரிலர், தர்மகீர்த்தி போன்ற தத்துவ அறிஞர்களும் தோன்றிய சிலகாலத்திற்குப் பின்னர் சங்கரர் பிறந்தார். இந்தியாவில் அக்காலத்தில் பன்நெடுங்கால அடிமைத்தனத்தையும், பிறர் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் ஏற்றுக் கொண்ட காலமாகும். மத்தியில் அதிகாரங்களை குவித்து வைத்திருந்த ஹர்சவர்த்தணனின் பேரரசு அழிந்து விட்டிருந்தது. புராதன கிராமக் குடியரசுகள். பிராந்தியங்கள், ஜாதிகள் ஆகியவைகளிடையே வளர்ந்து கொண்டிருந்த போட்டி மனப்பான்மை உள்நாட்டுப் பூசலை அதிகப் படுத்திக் கொண்டு இருந்தது. அத்துடன் வெளிநாட்டுப் படையெடுப்புக்கு வழி வகுத்துக் கொண்டிருந்தது. கி.பி.7ம்  நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் உலகத்தின் இரு மாடு மேய்க்கும் ஊர்சுற்றி இனத்தவரான திபேத்தியரும், அரேபியரும் துணிவுள்ள கொடூரமான வீரர்களைத் திரட்டிக் கொண்டு இரு பெரும் ஆதிக்க வெறியர்களாக நாகரிகம் படைத்த, நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சிபுரியப் புறப்பட்டு விட்டனர். மேற்கண்டவர்களின் முதல் தாக்குதலுக்கு பிற்பட்ட காலத்தில் கவுடபாதரும், சங்கரரும் தோன்றினர். டிஸ்ரோங் தேசன் ஆட்சிக் காலத்தில் இந்திய பவுத்த இலக்கியம், தத்துவ இயல் ஆகியவைகளின் மொழி பெயர்ப்புகளால் திபெத்திய மொழியைச் செழுமைப்படுத்திக் கொண்டிருந்தனர். நாலந்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தத்துவ அறிஞரான சாந்தரட்சிதர் தனது அந்திம காலத்தில் திபெத்துக்குச் சென்று அங்குள்ள அநாகரிகக் கூட்டத்தினரைத் தனது துன்ப வாதத்தத்துவ இயலும் நாகரிகக் கல்வியாலும் தன்வயப்படுத்திக் கொண்டிருந்தார்.
      அந்தக் காலத்தில் இந்தியாவில் மந்திர தந்திரங்களும் அதிகமாகவே பரவியிருந்தன. கி.பி. 768—809ல் இருந்த தர்மபால் அரசரின் சமகாலத்தவராகிய சரகபாதர் கி.பி. 800  போன்ற தாந்திரிகர்களும், சித்தர்களும் தமது கவர்ச்சிகர இந்திக் கவிதைகளாலும் மக்களையும் ஆட்சியாளர்களையும் தம்பால் ஈர்த்துக் கொண்டிருந்தனர். பன்னெடுங் காலமாகவே மதம் நன்னெறி என்பவற்றின் பெயரால் மனிதனின் இயற்கையான தேவைகளைக் குறிப்பாகக் காமத்தை  திருப்த்திப் படுத்திக் கொள்வதற்குப் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. பிரமச்சரியம், புலனடக்கம் ஆகியவைகளின் புகழ்பாடி, புகழ் பெறலாம் மென்ற கருத்துக்களை காட்டி மக்களை தங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு செயப்பட்டது. இதன் பலனாகவே தந்திர முறை, மது, மாமிசம், உடலுறவு முத்திரை (மதுக் கிண்ணம் வைப்பதற்குக் கைகளால் செய்யப்படும் குறிப்பிட்ட அசைவுகள் ) இந்த ஐந்தையும் முக்தி பெறுவதற்கான தலை சிறந்த சாதனங்கள் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கிற்று. மக்கள் இந்த நன்னடத்தை விதிகளை ஏற்றுக் கொள்ள சிரமப்பட்டனர். இதனால் இரட்டை நன்னடத்தையை கொண்டுவந்தது. தாந்திரிக முறையில் மேற் சொன்ன ஐந்து முறைகளையும் பயன்படுத்துவது. வெளியுலகத்திற்காக ஒருவித செயலுமாக நிலவிய காலத்தில் சங்கராச்சாரியைப் போன்ற இரட்டைத் தத்துவாசிரியர்கள் தோன்றியதில் வியப்பில்லை.
      பொருளாதார முறையில் அக்காலத்தில் நிலச்சுவான்தார்களும், மடாதிபதிகளும், அடிமைகளும், வாழ்ந்த சமுதாயமாகும். இவர்களிடையே வணிகர்களும், பணக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நலன்களும் நிலச்சுவான்தார்களின் மடாதிபதிகளின் நலன்களிலிருந்து வேறுபட்டதல்ல. அவர்களைப் போலவே இவர்களும் இரட்டை நன்னடத்தையில் மூழ்கியிருந்தனர்.
     ஆதிசங்கரரின் தத்துவத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள அவருக்கு முன்னவரான கவுடபாதரிடம். செல்லவேண்டும். கி.பி. 5 ம் நூற்றாண்டில் கவுடபாதர் வாழ்ந்திருந்தார். கவுடபாதரின் மகத்தான சிருஷ்டி சங்கரர் என்று கூறலாம். சங்கரரின் குரு கோவிந்தராக இருந்தாலும் சங்கரர் கவுடபாதரின் கருத்துக்களை அதிகம் பயன் படுத்திக் கொண்டார். கவுடபாதரின் மாண்டூக்ய காரிகையில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. அதில் முதல் அத்தியாயம் மட்டுமே மாண்டூக்கிய உபநிஷத்துடன் தொடர்புடையது. மற்ற மூன்று அத்தியாங்களில் அவர் தனது தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
     மாண்டூக்கிய உபநிஷத்தின் இந்த விளக்கவுரையில் கவுடபாதர், அந்த உபநிஷதத்தைத் தனது தத்துவத் தோடல்லாமல், புத்தரிடம் தனக்குள்ள பக்தியையும் மறைக்காமல் பிரகடனப்படுத்துகிறார். அந்தநூலின் நான்காவது அத்தியாயம், பவுத்தத்துவமான விஞ்ஞான வாத அத்தியாயமேயாகும். அதன் முதல் விளக்கத்திலேயே கவுடபாதர் கூறுகிறார். “வானத்தைப் போலவே சூனியமானவையாகும். என்பதை அறிந்து கொண்ட மனிதரில் சிறந்தவருக்கு வணங்குகிறேன்.” இதே அத்தியாயத்தின் பத்தொன்பதாவது விளக்கத்திலும் மீண்டும் புத்தரின் பெயர் வருகிறது. புத்தருடைய உபதேசம் குறித்தும் அவர் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பவுத்த மதத்தின் ஒரு பிரிவான மகாயானமும் குறிப்பிடப்படுகிறது. மற்றும் நாகர்ஜுனரைப் போலவே எல்லாப் பொருள்களுமே ஒளிவு மறைவில்லாமல் இயற்கையாக இருக்கின்றன என்றும் இதைப் புத்தரும் முக்தி பெற்றவர்களும் அறிவார்கள் என்றும் கூறுகிறார். கடைசி விளக்கத்தில் அவர் புத்தருக்கு வணக்கம் செலுத்தி நூலை முடிக்கிறார்.
       சங்கரர் மாண்டூக்கிய உபநிஷத்தின் மேல் விரிவுரை எழுதும்போது இந்த தெளிவான பவுத்தப் பிரதிபலிப்புகளை விலக்க வீணான முயற்சி செய்துள்ளார். கவுடபாதர் மாண்டூக்கிய உபநிஷத்தையே விளக்கவுரை எழுத தேர்ந்தேடுத்தற்குச் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகத் தெரிகின்றன. (அ) மாண்டூக்கிய உபநிஷதம் மிகச் சிறிய உபநிஷதமாகும். அதனால் தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட வாய்ப்பிருக்கும். (ஆ) மாண்டூக்கிய உபநிஷதத்தில் “ ஓம் “ குறித்தும், அதன் நான்கு எழுத்துக்களுடன் ஆன்மாவின் நான்குவித நிலைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இதில் கவுடபாதரின் மாத்யமிக யோகசாரக் கருத்துக்கள் கொச்சைப்படுத்தும் அபாயம் இல்லை.(இ) இதில் ஆன்மாவிற்காகக் காண முடியாதது, உருவமில்லாதது ,நடைமுறைப்படுத்த முடியாதது, புரியமுடியாதது, சிந்திக்க முடியாதது போன்ற சொற்கள் வந்துள்ளன. இவை நாகார்ஜுனரின் மாத்யமிக தத்துவத்திற்கும் பொருந்துகின்றன. பவுத்தத் தத்துவத்தை வலுவுள்ளதாக வைத்து அதனுடன் உபநிஷதத்தைத் தொடர்புபடுத்த கவுடபாதர் முயற்சி செய்தார்.
      சூனிய வாதத்தை ஏற்றுக் கொள்ள அழிவுடையது, அழிவில்லாதது என்கிற சிக்கலில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை. சங்கரரும் பவுத்தத் தத்துவக் கருத்துக்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவை உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டவையே என்று நிருபிக்கப் விரும்பினார். அதோடு அவர் தனது கருத்துக்களை அறிவுக்குப் பொருந்துவனவாகவும் இருக்க விரும்பினார். இதனால் தான் அவர் யோகசார விஞ்ஞான வாதத்தைப் பிரகடனப் படுத்தினாலும் சங்கரர் அழிவுடையது, அழிவில்லாதது என்பவைகளில் எதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் அழிவற்ற ஆன்மா வாதத்தை ஏற்றுக் கொண்டு தன்னைத் தூய பிராமணத் தத்துவ ஆசிரியராக மாற்றிக் கொள்ள முயற்சித்தார்.
       கவுடபாதரின் கருத்துக்களைக் அடிப்படையாகக் கொண்டே சங்கரர் தனது தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்தினார் “உலகம் இல்லை” எந்தப் பொருளும் தானாகவோ மற்றதில் இருந்தோ தோன்றுவது இல்லை. இருக்கும் பொருளோ, இல்லாத பொருளோ, இருந்தும் இல்லாத பொருள் நிகழ காலத்திலும் அப்படியே இருக்கிறது. அது பொய்யானதைப் போலவே இருக்கிறது. பொய்யாகவே காணப்படுகிறது.
       பொருள்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவை பொய்யான ஞானத்தால் அப்படித் தெரிகிறதே தவிர உண்மையில் அப்படித் தோன்றுவது இல்லை. அவற்றின் தோற்றம் மாயை உருவமானது. மாயைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கனவில் மனம் மாயையினால் பார்க்கக் கூடியதாகவும் காட்சியாகவும் செயல் படுவதைப் போலவே விழிப்பு நிலையிலும் கூட மனம் மாயையால் இரண்டு உருவங்களில் செயல்படுகிறது.
       கனவிலான ஜீவனும், மாயையான ஜீவனும் பிறப்பதும், இருப்பதுமாகத் தென்படுவதைப் போல் இந்த எல்லா ஜீவன்களும் இருக்கவும் இருக்கின்றன.  இல்லாமலும் இருக்கின்றன.
        அஞானியானவன் உண்மையை அறிவது இல்லை. அவன் அஞ்ஞானத்தால் சூழப்பட்டிருப்பதால் கடவுள் ( பரம தத்துவம் ) எப்பொழுதுமே மறைந்திருந்து அவனைத் தன்னைத் தொடவிடுவது இல்லை. அவரைப் பார்த்தவனே எல்லாமும் பார்த்தவனாவான் 
         சங்கரரின் மாயாவாதத்துக்கு தேவையான அனைத்தும் மேற்கண்ட கவுடபாதரின் கருத்தில் உள்ளது, பின் ஏன் விஞ்ஞான வாதம்? கவுடபாதர் கீழ்கண்டவற்றை எடுத்துரைக்கிறார்? (அ) ஒரு விஞ்ஞானத் தத்துவம் இருக்கிறது. அது சங்கரரின் பிரம்மத்தை விட நாகார்ஜுனரின் சூனிய வாதத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. (ஆ) உலகம் வெறும் மாயையாகும். (இ) ஜீவன் இல்லை பிறப்பும், செய்வினையை அனுபவிப்பதும் எதற்குமே இல்லை. 
          கவுடபாதரின் இக்கருத்துக்கள் சங்கராரின் பிரம்மம் உண்மையானது உலகம் பொய்யானது, ஜீவன் பிரமமேயாகும் என்பதிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது. அது பவுத்தர்களின் சூனியவாதத்திற்கு அருகில் உள்ளது. அந்தக் காலத்தில் பவுத்தர்கள் பிராமணர்கள் ஜைனர்கள் அனைவருமே அதிக பட்சமானவர்களைச் சந்நியாசியாக்குவதர்க்கு போட்டி போட்டுக் கொண்டு இருந்த காலமாகும். கோவிந்தர் என்னும் சந்நியாசி சங்கரரை தனது சீடராக்கிக் கொண்டார். அவர் குருவாக இருந்தாலும் அவருக்கு கவுடபாதரின் கருத்துக்கள் மிகவும் துணை புரிந்தது. சங்கர திக்விஜயங்களில் அவர் புரிந்த பெரும் தர்க்க சர்ச்சைகள் பற்றியும் அவர் நிகழ்த்தியதாக அற்புதங்கள் பற்றியும் கதை கதையாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சமயங்களும் தங்களின் குருவைப் பற்றி மிகைபட சொல்வது இயல்புதான். முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சங்கரர் வேதத்தின் மீதும் பத்து முக்கிய உபநிஷத்துக்களின் மீது சிறந்த விரிவுரை எழுதி இருப்பது அவரின் அறிவாற்றலுக்கு சிகரமாகும். ஆனால் சங்கரரின் சமகாலத்தவரான சாந்தரட்சிதர், அவருக்குப் பின் வந்த கமலசீலர்( கி.பி.850 ) ஜிதாரி (கி.பி. 1ooo ) போன்ற அறிஞர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பவுத்தர்களின் கருத்துக்களில் இருந்து சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த ராகிசியத்தை முதலில் சங்கரரின் வேதாந்த பாஷ்யத்துக்கு விரிவுரை எழுதிய வாசஸ்பதி மிஸ்ரா தெரிந்து கொண்டார். இந்த ரகசியம் நீண்டகாலமாக வெளிவராமலேயே இருந்து வந்தது. துருக்கியரின் படையெடுப்பில் இருந்து தம்மை பாதுகாக்க தத்துவ அறிஞர்கள் இந்தியாவை விட்டு சென்ற பின்னர் தான் இந்த ரகசியம் வெளி உலகுக்கு தெரிந்தது. சங்கரர் எல்லா நூல்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், வேதாந்த சூத்திரங்களில் முதல் நான்கு சூத்திரங்களுக்கு எழுதிய விளக்கவுரையில் அவர் மிகவும் சுதந்திரமாகச் செயல் பட்டுள்ளார். பவுத்தர்களின் “ பாதுகாத்த உண்மையையும் “ – “ பரமார்த்த சத்தியத்தையும்” தனது முக்கிய ஆயுதங்களாக கொண்டு பிரமத்தை மட்டுமே ஒரேயொரு உண்மைப் பொருளாகக் கருதி அவர் நடை முறை உண்மைகளாக அறிவாலும் அறிவுக்கு ஆதிதமானதாலும் அடையக்குடிய பிராமணச் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டார்.
      வேதங்களின் சொல்லே சய அத்தாட்சி உடையதாகும். மற்ற நேரிடை அத்தாட்சியும், அனுமான அத்தாட்சியும் வேதச் சொல்லின் உதவியால் மட்டுமே அத்தாட்சிகளாக முடியும். “மீமாம்ஸ” தத்துவ இயலார்களின் இக் குருட்டுப் பிடியை நடைமுறையில் சங்கரரும் முரட்டுப் பிடியாகப் பிடித்துக் கொண்டார். தர்க்கம் செய்யும் (வாதம் செய்யும் ) ஒருவன் தனது வாத பலத்தால் ஒரு விஷயத்தை நிரூபிக்கிறான். அவனைக்காட்டிலும் அதிகத் திறமையுள்ள மற்றொருவன், முதலாமவன் சொல்லியதைத் தவறான தென்று நிருபித்து விடுகிறான். ஆகவே நாம் தர்க்கத்தில் எந்த ஒரு நிலையான இடத்திலும் நின்று விட முடியாது. உபநிஷத்தின் மூலமாகவே நாம் உண்மையை அடைய முடியும். உபநிஷத்துக்களின் கருத்தைப் புரிந்து கொள்வதற்காகவே வாதத்திறமையை பயன் படுத்திக் கொள்ளலாம். சங்கரரின் கருத்தில் வேதாந்த சித்தாந்தங்களின் உண்மை தர்க்கத்தையோ அறிவையோ சார்ந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக அவை உபநிஷத்துக்களை மட்டுமே சார்ந்திருக்ககின்றன. ஆகவே பிரமாணத்தைக் குறித்துச் சங்கரரின் கருத்துக்களும், ஜைமினி, குமரிலர் போன்றோர்களின் கருத்துக்களும் ஒன்றேயாகும்.
       அனந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அஞானத்தாலேயே பல்வேறு வேற்றுமைகள் காணப்படுகின்றன. அதனாலேயே பிறப்பு, முதுமை, இறப்பு முதலிய உலகத் துன்பங்கள் ஏற்படுகின்றன. இந்த அனைத்துத் துன்பங்களின் வேரை அறுத்து எரிய ஆன்மா ஒன்றே உண்மையானது என்னும் ஞானம் அவசியமாகும்.ஆன்மாவின் இந்த இணைப்பையே ஆத்மா – பரமாத்மா இரண்டையும் ஒன்றாக நோக்குவது முக்கிய நோக்கமாகும் என்று சங்கரர் கூறுகிறார். அந்தப் பிரம்மம் உண்மையானதும் உணர்ச்சிமயமானதும், ஆனந்த மயமானதுமாகும். உண்மையும், உணர்ச்சியும், ஆனந்தமும் பிரமத்தின் குணங்களாகும் என்றாலும் இதுவும் சரியல்ல. ஏனெனில் குணங்கள் – குணங்களுடையது என்னும் கற்பனை வேற்றுமையும் வேற்றுமை எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே அது குணங்களற்ற உண்மை உருவாகும். மனம் சம்மந்தமான விசயங்களும் உடல் சம்மந்தமானவைகள் மறைந்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்குள் மாற்றமில்லாத ஒரு பரமதத்துவம் பொதிந்து உள்ளது. வெளி உலக பொருட்களின் உண்மையைத் தேடிக்கண்டு பிடிக்க மற்ற எல்லாத் தத்துவ இயலும் அத்தாட்ச்சிகளை நாடுகின்றன. ஆனால் வேதாந்தம் (உபநிஷத்துக்களும், ஆரண்யங்களும் ) வெளியுலகக் காட்சிகளின் ( பொருட்களின் ) உள்ளிருக்கும் பரம சத்தியத்தைத் தேடுகிறது. இதனாலேயே வேதாந்தத்தக்கு முன் மற்ற எல்லச் சாஸ்த்திரங்களும் துச்சமானவையே.
     பிரம்மம் என்னும் ஒரு தத்துவம் மட்டுமே இருக்கிறது. மற்ற வேற்றுமைகள் எல்லாம் தவறான கருத்துக்களாகும். இதை ஒப்புக் கொண்டால் பிரமத்திலிருந்து வேறுபட்ட ஜீவன் என்னும் கருத்து சரியென்று படுவதில்லை. “நான் அறிகிறேன்” இங்கே அறியும் நான் என்பதிலிருந்து ஜீவன் நிரூபணமாகிறது என்று சொல்வது சரியல்ல ஜீவன் என்ற உணர்வும் அதிலிருந்து தோன்றும் ஞானமும் வெறும் பிரமையேயாகும். சிப்பியைப் பார்த்து வெள்ளி என்ற பிரமையும் கயிற்றைக் கண்டு பாம்பென்ற பிரமையும் பாலைவன மணலில் நீரென்ற பிரமையும் ஏற்படுவதைப் போன்றதே ஜீவன் என்னும் ஞானமும் வெறும் பிரமையேயாகும். அறிந்தவன் ஞானம் அறியத் தகுந்தது என்னும் வேற்றுமைகளை விட்டு அனுபவத்தை மட்டும்மே நம்மால் உணர இயலும். ஏனெனில் வேற்றுமைகளுக்கு முதலும் முடிவும் இல்லாததால் நிகழ் காலத்தில் அவற்றுக்கு இடமில்லாததால் அனுபவம் ஒன்றே முக்காலத்திலும் ஒன்றாகவே இருக்கும் அனுபவம் மட்டுமே பிரம்மாமாகும். ஆகவே பிரம்மம் தவிர வேற்றுமையைத் தோற்றுவிக்கக் கூடிய நான் மனிதன் போன்ற கருத்து வெறும் பிரமை மட்டுமேயாகும். ஞானத்தின் செயல் புரிபவனையே அறிந்தவன் என்கிறோம். செயலாற்றுபவன் சலனமில்லாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சலனமுள்ள ஜீவனுக்கு எல்லாச் சலனங்களுக்கு இடையேயும் உள்ள மாற்ற மற்ற ஆன்ம தத்துவத்தில் எப்படி இடம் இருக்க முடியும்? வெளி உலகப் பொருட்களிலாமல் எவரையும் அறிந்தவன் என்று சொல்ல மாட்டோம். அறியக்கூடியது, காட்சி, உலகம் இவைகளெல்லாம் வெறும் பிரமைகளே. நான் அறிகிறேன் என்னும் அனுபவம் எல்லா நிலைமைகளிலும் ஏற்படுவது இல்லை. ஆழ்ந்த உறக்கத்திலும், மூர்ச்சையிலும் இவ்வனுபவம் ஏற்படுவதில்லை. ஆனால் ஆன்மாவின் நான் என்பதற்ற அனுபவம் அந்நிலைகளில் இருக்கிறது. ஆகவே நான் என்னும் எண்ணமும் அதிலிருந்து ஜீவனின் கற்பனையும் தவறானவையாகும். ஒரு கண்ணாடியில் நமது முகமோ, சந்திரனின் பிரதி பிம்பமோ காணப்படுகிறது. ஆனால் அது உண்மையான முகமோ சந்திரனோ அல்ல வென்று எல்லோருக்குமே தெரியும். அவை வெறும் பிரமையே இதே போல் குணங்களற்ற பிரமத்தில் நான் என்பதோ அறிந்தவன் என்னும் என்னமோ அஞ்ஞானத்தில் (அறிவு மங்கிய நிலையில் ) தோன்றுபவையே.. அவை வெறும் பிரமையே. உண்மையில் பிரமத்தில் அறிந்தவன் ஜீவன் என்ற எண்ணங்களைத் தோன்றச் செய்யும் தாயே இந்த அஞ்ஞானமாகும். பிரமத்தை மறைத்திருக்கும் அஞ்ஞானத்திரை ஜீவனைத் தோற்றுவிக்கிறது.
      பிரமத்தைத் தவிர வேறெந்தத் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாத அத்வைத வேதந்திகளிடத்தில் இந்த அஞ்ஞானம் என்பது எங்கிருந்து வந்து விட்டது? அவித்ய என்பது அஞ்ஞான உருவமானது: பிரம்மம் ஞான உருவானது இரண்டும் ஒளியும், இருளும் போலவே ஒன்றுக்கொன்று பூரணமாக எதிரிடையானவை; ஒன்று மற்றொன்றுடன் சேர்ந்திருக்காதவை. பிரமத்தின் மேல் அஞ்ஞானத்திரை விழுவது, ஒளியின் மேல் இருளின் திரை விழுவது போலாகும். பொருள் உலகத்தைப் பற்றிய அர்த்தமற்ற பேச்சால் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு அத்வைதிகளின் ஒரே பதில்தான் அளிக்க இயலும் உபநிஷத்துக்கள் கூறியதுதான் உண்மையாகும்.
      பிரமாண சாஸ்த்திர ( அத்தாட்சி இயல் ) த்தின் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், காட்சிகள் நிறைந்த உலகம் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறதென்பது தெரிய வரும். உலகம் மாறிக் கொண்டே இருப்பதிலிருந்து அது இதற்கு முன்பு இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பது தெரிய வருகிறது. இப்படியாக அது எல்லாக் காலங்களிலும் இருக்கிறது என்கிற வாதம் தவறானதாகி விடுகிறது. உண்மையில் உலகம் முக்காலங்களிலும் இருக்கவில்லை உலகம் இருக்கிறது என்பதில் உலகத்தின் ஊகம் பிரமையை அடிப்படையாகக் கொண்டதாகும். இருக்கிறது (சத்) என்பது பிரமத்தின் சொந்த உருவமாகும். இருக்கிறது என்பது இல்லாவிட்டால் உலகமே தென்படாது. ஆகவே உலகம் என்னும் பிரமையை உண்டாக்குவது பிரமமேயாகும். பாம்பென்ற பிரமையை உண்டக்குகின்ற  கயிற்றை போல், வெள்ளி என்ற பிரமையை தோன்றச் செய்யும் சிப்பியைப் போல் இதுவும் ஆகும்.
       முதலிலும் கடைசியிலும் இல்லை, நிகழ்காலத்திலும் அதே போல் என்பதின்படி இவ்வுலகம் வாஸ்த்துவத்தில் (உண்மையில்) இல்லவே இல்லை. அப்படியிருந்தும் இருப்பது போல் ஏன் தோறுகிறது? அது தான் மாயை என்பது. வித்தை செய்து காட்டுகிறவன் ஒரு வினாடிக்குள் பல ரூபாய்களைச் செய்து காட்டுகிறான் அவையெல்லாம் உண்மையான ரூபாய்களா? அவை உண்மையான ரூபாய்களாக இருந்தால் அவன் வேடிக்கைகாட்டி ஒவ்வொரு காசுக்கும் கையேந்த வேண்டியது இல்லை அவை என்ன ரூபாய்கள்? மாயை மாயையைத் தவிர வேறில்லை! இதே போல் உலகமும் மாயையே! தாயும் மாயையே, தந்தையும் மாயையே மனைவியும் மாயை, நல்லது மாயை, கெட்டதும் மாயை பசியால் துடித்துக் கொண்டு இருக்கும் வயிறும் மாயை சோம்பேறி பணக்காரரின் புடைத்துக் கொண்டிருக்கும் தொந்தியும் முரட்டு மீசையும் மாயை, சாட்டையால் அடித்து இரத்த வெள்ளத்தில் துடிக்கும் அடிமையும் மாயை, நிரபராதியை ஈவிரக்கமில்லாமல் சாட்டையால் விளாசும் ஆண்டானும் மாயை, திருடனும் மாயை செல்வந்தனும் மாயை அடிமை இந்தியாவும் மாயை இவ்வாறு உலகம் ஒரு மாயை வேறொன்றுமில்லை. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும் அக்கிரமங்களையும் அநியாயங் களையும் தொடாமல் அப்படியே பாதுகாக்கும் வலுவான ஆயுதமாக விளங்கும் சங்கரரின் மாயா வாதம் இதுதான்!
     இந்த வேதாந்தக் கருத்துக்கு நம் சட்டை முனிநாதறின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. அதை பார்த்து பின் செல்வோம்.















ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தையுண்ணும்  
பத்திநின்ற  சாலமதுதான் தீயையுண்ணும்  
பாங்கான தீச்சென்று காலையுண்ணும்
வெந்துநின்ற கால் சென்று வின்னையுண்ணும்
விழுந்ததுதப்பா சடமென்ற வேதாந்தம் பேசும்  
முத்திகண்டு கூடுவது எந்தக்காலம்
மூடரே மதுவையுண்டு மேலேபாரே                                                         
                :-- சட்டை முனி முன் ஞானம் – 100
     இதில் ஓங்காரம் மண்ணாகிய (பிரிதிவி) தை தன்னுள் எடுத்துக் கொள்ளும். அந்த மண்ணானது நீரில்(அப்பு) கலந்து விடும், இந்த நீரானது தீயில் (நெருப்பு) கலந்து விடும், தீயனாது காற்றில் (வாயு) கலந்து விடும், இந்தக் காற்றானது ஆகாயத்தில் கலந்து விடும் என்று வேதாந்தமானது சொல்லும். இது மனிதனின் இறப்புக்குப் பின் நம் உடலை புதைப்பதால் நம் உடலுக்கு நடக்கும் மாற்றத்தைக் குறிப்பதாகும். இவ்வாறு நாம் வேதாந்தம் பேசிக் கொண்டு இருந்தால் நாம் எப்போது முக்தி அடைவது. இனிப் பிறவாது இருப்பதற்கு வழி என்ன? எது எதோடு சேர்ந்தால் என்ன நாம் உயிரோடு இருக்கும் போதே நம் உடலில் வாசியோகத்தால் உண்டாகும் அமுதமாகிய மதுவை உண்டு பரம் பொருளை நோக்கி மனதைச் செலுத்தி முக்தி அடையச் சொல்கிறார். இதன் மூலம் சங்கரர் போன்ற வேதாந்திகளின் கருத்தால் முக்தி அடைய முடியாது என்பதை பரிகசிக்கிறார்.
    இது போல் திரு மூலரின் ஒரு பாடலை பார்ப்போம்.














அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரிசு எய்திப்விரிந்து உயிராய் நிற்கும்
அப்பரிசு ஏது என்று புகழும் மனிதர்கள்
அப்பரிசே இருள்மூடி நின்றாரே
                        :---- திருமந்திரம் 218  
உலகில் 8400000 – லட்சத்திற்கும் ( இவர்காலத்தில் லட்சம் என்ற சொல் கிடையாது) அதிகமான உயிர்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. இதை நம்பாத மனிதர்கள் தங்களை அறியாமை என்னும் இருளில் இருந்து வருகின்றனர் என்கிறார். சங்கரரின்  எல்லாம் மாயை என்னும் கருத்தானது நடை முறையில் இருந்து வரும் ஐம்புலன் வழியாக உணர்வுகளை மறுத்து கற்பனை வாதத்திற்கு கொண்டு செல்கிறது. இதையே ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்கள் குறிப்பிடுகிறார். 
    மாயை பிரமத்தை எப்படிச் சுற்றிக் கொண்டிருக்கிறது? சங்கரர் இந்தக் கேள்வியையே தவறாகத் தெரிவிக்கிறார். உண்மையில் சுற்றிக் கொண்டு இருப்பது என்பதே இல்லை. பிரம்மம் நிலையானது சலனமற்றது என்று சொல்லப்பட்டு பிரமத்தின் மீது வேறெதும் முத்திரை பதிக்க முடியாது. அப்படி இருக்கும் போது அதைச் சுற்றிக் கொண்டிருப்பதென்று எப்படிச் சொல்ல முடியும்? மாயையில் உண்மை எதுவும் இல்லை. உண்மை (அத்வைத பிரமம்) தோன்றியவுடனே, அஞ்ஞானம் மறைந்து விடுகிறது. மாயை என்றால் என்ன ? அது விளக்கமுடியாதது என்று மட்டுமே இக்கேள்விக்குப் பதிலளிக்க முடியும். பொருளே இல்லாத போது, அதை உண்மை என்று சொல்ல இயலாது. உலகம் – ஜீவன் ஆகியவை களிடையே உள்ள வேற்றுமைகள் நமக்குத் தெரிகின்றன. எனவே அவற்றைப் பூரணமாக பொய் என்றும் சொல்லிவிட முடியாது. இப்படியாக அவற்றை உண்மையிலிருந்தும், பொய்யிலிருந்தும் விளக்க முடியாதென்று கூறலாம்.
உருவம் வளர்ந்திடும் ஒன்திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே
                     :--- திருமந்திரம் -- 294
உயிருக்கு உருவம் இல்லை தாயின் வயிற்றில் கரு கூடியபின் உருவமாக வளர்கிறது. இதை அறிந்தவர் இல்லை. இது மாயையின் செயல். என்று கூறுவதில் இருந்து நம் ஐம்புலனுக்கு (கண்) தென்படாத பொருளை மாயை என்று சொல்கிறார். இதிலிருந்து சங்கரரின் எல்லாம் மாயை என்ற வாதம் வேறு படுவது அறியலாம்.  
இட்டான் அறிந்திலன் ஏற்றலன் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவருக்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன், இம் மாயையின் கீழ்மை எவ்வாறே
                      :-- திருமந்திரம் – 295
கரு உண்டானதை அதற்குக் காரணமாக இருந்த ஆண், பெண் இருவரும் அறியவில்லை. பிரமனும் அவர்களுக்கு சொல்லவில்லை, அங்கு சாட்சியாக உள்ள பிரமனும் உணர்த்த வில்லை இது மாயையின் செயல் என்று சொல்கிறார். இவ் இரு பாடல்களின் வாயிலாகவும் திருமூலர் அருவமாக எதார்த்த நிலையில் இந்த உடலின் ஐம்புலனுக்கு தெரியாதவற்றை மாயையின் செயல் என்று கருதுவதை அறியலாம்.
முக்தி :-- முக்தி, மோட்சம் என்பது பற்றிக் கேள்வி எழுப்பினால் சங்கரர், அடிமைத்தளைகளுக்கு முக்தியிலை என்று மறுத்து விடுகிறார். ஆனால் தாந்திரிகர்களின் அக்காலத்திய இரட்டை நன்னடத்தை போலவே சங்கரரும் தனது இரட்டை சித்தாந்தத்தை வெற்றிகரமாக பயன்படுத்துகிறார். அதனாலேயே அவர் நடைமுறை உண்மை உருவத்தில் அடிமைத்தளைகளையும் முக்தியையும் ஒப்புக் கொள்ள நிராகரிக்கவில்லை. அஞ்ஞானம் (அறிவின்மை) தான் அடிமைத் தளைகலாகும், அதனாலேயே ஜீவனுக்கு பிரமை உண்டாகிறது. ”எஞ்சியில்லாத நிரந்தரமான புனிதமான அறிவார்ந்த முக்தி பெற்ற சுய ஒளியுள்ள ஆன்மாவான பிரம்மம் நான் “ என்ற ஞானம் தோன்றும் போது அஞ்ஞானம் மறைந்து விடுகிறது. இதைத்தான் முக்தி என்கிறோம். பிரம்மம் வேறல்ல இது தான் ஞானமாகும் இந்த ஞானத்தை (அறிவை) அடைந்த ஜீவன் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று விடுகிறது. ஒன்றுடன் இணைந்து இருக்கிறோம் என்னும் ஞானமே (அறிவே) பிரமையாகும், உண்மையான ஞானம் உண்டாகும் போது இந்தப் பிரமை இருப்பதில்லை “நான் பிரம்மம்” என்கின்ற உபநிஷத்தின் மாபெரும் வாக்கியம் மட்டுமே எல்லாவற்றையும் விட மகத்தான உண்மையாகும்.
        நடை முறையில் அடிமைத் தளையை ஒப்புக் கொண்டால் அதிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு வழிகள் சொல்ல வேண்டிவரும் சங்கரர் இங்கே அசல் துவைத்த வாதியைப் போல் நான்கு வழிகள் கூறினார்.
(அ) சாஸ்வதமான – சாஸ்வதமற்ற (நிரந்தரமான, நிரந்திரமற்ற) பொருளின் வித்தியாசத்தை அறிவது.
(ஆ) இந்த உலகத்தின், மறு உலகத்தின் பலன்களை அனுபவிக்காமல் தனித்து நிற்பது.
(இ) மனத்தையும், புலனையும் கட்டுப் படுத்துதல் தியாக மனப்பான்மை, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் பக்தி மனத்தை ஒருநிலைப் படுத்துதல்.
(ஈ) முக்தி பெறவேண்டும் என்ற தீவிர கோரிக்கை.
    சங்கரரின் தத்துவ இயலை மேலெழுந்த வாரியாகக் காணும் போது, அவர் பிரம்மத் தத்துவத்தை ஏற்றுக் கொள்கிறார் என்பதும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட ஆத்மஞானம் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதும் தெரிகிறது. ஆனால் துருவிப் பார்த்தால் சங்கரரின் சித்தாந்தமான மாயாவாதம் பவுத்த ஆசிரியரான நாகர்ச்சுனரின் சூனிய வாதம் தவிர வேறல்ல என்பது தெரியும். சங்கரர் தத்துவத்துக்கு அடிப்படையானவரான கவுடபாதர் --- புத்தர், நாகர்ச்சுனர் ஆகியோரின் தத்துவத்தை நேரிடையாகப் பின் பற்று வராவார். “கண்டன் கண்ட காத்யா” ராமர் துதி போன்ற ஒரு சில விசயங்கள் தவிர, பவுத்தர்களின் சூனிய வாத நூலாகவே இருக்கிறது. அதனாலேயே ராமானுஜரின் வேதத்தின் விளக்க நூலான “சுருத் பிரகாசிகா” வின் ஆசிரியரான பரங்குசதாஸ் “ வியாசர்” கூறுகிறார்.
சங்கரரின் சீடர்களே! பவுத்தர்களுக்கு வேதங்கள் பொய்யானவை போல், உங்களுக்கும் வேதங்கள் பொய்யானவை பவுத்தர்களுக்கு வேதங்கள் பிரமாணங்கள் (அத்தாட்சிகள்) அல்ல என்பது போல உங்களுக்கும் வேதங்கள் பிரமாணங்கள் அல்ல உங்களிருவருக்கும் ஜீவன் பொய்யானது. அதேபோல் ஞானமும் அதன் பலனான முக்தியும் கூடப் பொய்யானவை. இப்படியாக நீங்களும், பவுத்தர்களும் சகோதரர்களே ஆவீர்கள். இதனாலேயே சங்கரர் மறைமுகப் பவுத்தர் என்று சொல்லப்படுகிறார்.
     இக் கருத்துக்களையெல்லாம் பார்க்கும் போது ஒவ்வொருவரும்  தங்களின் கால சூழ்நிலைக்கு ஏற்றார் போலும் தங்களுக்கு முன் உள்ளவர்களின் கருத்தோட்டங்களையும் எடுத்துக் கொண்டு தங்கள் கற்பனைவளங்களை பெருக்கிக் கொண்டார்கள் என்பது தெரியவரும் இதுவே உண்மை கடவுள் என்ற ஒருவரையோ அல்லது ஒரு பொருளையோ அந்தக் கடவுள் கருத்தையோ அவர்கள் மனக் கற்பனையிலேயே கண்டு  வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த வழியில் சித்தர்களும் வேறு பட்டவர்கள் அல்ல அவர்கள் சிறிது மாறுபட்டு கற்பனை வாதத்தை விட்டு யோகம் என்னும் செயல் பயிற்சியையும் இணைத்துக் கொண்டு உள்ளார்கள். வெளியில் உள்ள சகுன வழிபாட்டை (உருவ வழிபாடு) மறுத்தும் அவற்றை தங்கள் உடலின் சில பகுதிகளுக்கு பெயரிட்டும் அவற்றின் வழியாக மாந்தர்களிடம் தங்கள் கருத்தோட்டங்களை புகுத்தி பின் ஏகம், ஒன்றே, என்று ஒரு காரணக் கடவுளை வெளிப்படுத்தி அதைத் தங்களின் உடல் உணர்வு ரீதியாக கொண்டு சென்றுள்ளனர். 
பதி பல ஆவது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து, ஒன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர், நெஞ்சினுள் வாடுகின்றாரே
                              :-- திருமந்திரம் – 32 
  உலக மக்கள் பழங்காலம் முதல் இறைவன் பல உள்ளதாக நம்புகிறனர். இதற்காக பலவித வழிபாடு முறைகளை செய்கின்றனர். பலவிதமாக பாடல்களும், துதிகளும் செய்து வழிபடுகின்றனர். ஆனால் இவர்கள் இறைவன் ஒருவனே என்றும் உணராமல் மதி கெட்டு வருந்துகின்றனர்.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப் பொருள், சொல்லவும்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே
                              :-- திருமந்திரம் – 66
நான் பெற்ற இன்பத்தை இவ்வுலக மக்கள் அனைவரும் பெற்று இன்புற வேண்டும். இவ்வுலகம் அறிந்திராத பரவெளி மறை பொருளை என் உடலில் அடைந்த உணர்வுறும் பொருளை இடையறாது தியானித்தால் தியானிக்க இறை பொருளானது அருள் தரும்.
இணங்கி நின்றான், எங்குமாகி நின்றானும்
பிணங்கி நின்றான், பின் முன் ஆகிநின்றானும்
உணங்கி நின்றான், அமராபதி நாதன்;
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே
                                   :--- திருமந்திரம் – 27 
தொடர்ந்து நின்றானைத் தொழுமின்; தொழுதால்,
படர்ந்து நின்றான், பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான், கமல மலர் மேலே
புனர்ந்திருந்தான், அடிப்புண்ணியன் ஆமே
  உயிர்களோடு இசைந்து நின்று, எங்கும் எப்பொருளிலும் உள்ளன் மாறுபட்டு பலவாக உலகிற்கு முதலும் முடிவுமாக உள்ளவனும் தேவர்களாலும் வணங்கப்படுபவன். தன்னை வணங்கி நிற்கும் அடியார்க்கு வழிகாட்டியாக வருவான். நம்மைத் தொடர்ந்து நம்முள் இருப்பவனை வணங்கவும் அவ்வாறு வணங்குவதால் அண்டம் நிறைந்து அதனைக் கடந்தும் இருக்கும் இறைவன் நம் தலை உச்சியில் உள்ள ஆயிரம் இதழ்களை உடைய தாமரை (சகஸ்ராரம்) இதழ் போல் பிரிவுகளை உடைய (மூளை) தளத்தில் புத்தியாக இருப்பவன் ஆமே .                   
       மேற்கண்ட  பாடல்களும் திருமந்திரத்தின் கடவுள் வாழ்த்து என்ற இயலில் வருவதாகும் இதில் இருந்து திருமூலர் தன் வழிபாட்டுக் கருத்தினை அறிய உதவும். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின், அரசர்களின், சமயச் செல்வாக்கினுக்கு ஏற்பவே தங்கள் கருத்துக்களை சொல்ல முடியும் இவரது கருத்துக்களை தொடர்ந்து பார்ப்போமானால் நேரிடையாக விக்கராக ஆராதனை பக்தி வழியை எதிற்காமலும் ஒருவித மென்மைப் போக்கை வெளிப்படுத்துவதை அறியலாம். ஆனால் சில சித்தர்கள் நேரிடைத் தாக்குதலை தொடுப்பதையும் சித்தர் நூல்களில் பார்க்கலாம். அவ்வாறு உள்ளவர்களில் சிவவாக்கியரின் கிழ்க்கண்ட இரு பாடலை மட்டும் பார்ப்போம்.
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாலிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இறைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூலவந்த எத்தனை
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மை தன்னை யார் அறியவல்லாரே
விண்டவேதப் பொருளையன்றி வேறு கூறவகையிலார்
கண்டகோயில் தெய்வம் என்று கைஎடுப்பதில்லையே
  இவரின் கருத்து நேரடிக் கருத்தாக இருக்கிறது இது போல் சித்தர்கள் அனைவருமே சில நிலைகளில் மாறு படுகின்றனரே தவிர மற்றபடி யோகம் மூலம் சேர்க்கை அதுவே முடிவு என்பதில் ஒன்று படுகின்றனர்.
இனி திருமூலர் தன்வரலாறு பற்றி சொல்கிறார் :--
சந்தி எனத்தக்க தாமரை வான் – முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் எனக்கே” என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் – அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே
                           :-- திருமந்திரம் – 26 
அந்தி நேரத்தில் வானத்தில் தோன்றும் சிவப்பு நிறம் போலும், சிலவேளைகளில் தாமரை நிறத்தை ஒத்தும் தோன்றும் என் ஈசனுடைய அருள் எனக்கு வாய்க்க அவனை நாள்தோறும் என் சிந்தையில் வைத்து போற்றும் அவன் எப்பொழுதும் என் நினைவில் உள்ளான்.
விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கு அரும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தோமே
                              :-- திருமந்திரம் – 70 
உண்மையானவனும் சோதி சொருபனும் பரம்பொருளும் எனக்கு பெரும் அளவிலான     ஆனந்தத்தை தருபவனும் இன்பமயமான என் நந்தியின் வழிகாட்டுதல் படி கயிலை (இமயமமலை) வழியாக நாங்கள் வந்தோம்.
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர்: சிவயோகமாமுனி,
மன்று தொழுத பஞ்சலி, வியாக்கிரன்
என்றிவர், என்னுடன் எண்மரும் ஆமே
     நந்தியின் அன்பை பெற்றவர்கள் நாதர்கள் என்பர் அவர்கள் நந்திகள் என்னும் நால்வர் சிவயோகமாமுனி, வியாக்கரமபாதர், இவர்களுடன் நானும் சேர்ந்து எண்மர் ஆவோம். என்று கூறுகிறார் இது குறித்து முன் தொகுதியில் சொல்லியுள்ளது கண்டு கொள்க.
நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றேன்:
நந்தி அருளாலே மூலனை நாடினேன்:
நந்தி அருளா அது என்செய்யும் நாட்டினில்?
நந்தி வழிகாட்டிட நான் இருந்தேன்.
நந்தி ஆகிய இறைவன் அன்பினால் நாதர் என்னும் பேர் பெற்றேன், அவர் அருளால் மூலனாகிய அவரை தெரிந்து கொள்ள அவரையே நாடினேன். அவர் அருள் இல்லாவிட்டால் நாட்டில் என்ன செய்ய முடியும். அவர் வழிகாட்டிட நான் வந்திருந்தேன். ( இப்பாடலில் மூலனை நாடினேன். என்பதை மூலன் என்னும் இடையன் உடலில் புகுந்து கொண்டதாக ஒரு கருத்து சொலப்படுகிறது. இது பற்றி முன் தொகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அது விஞ்ஞான பூர்வமாக சாத்தியப் பாடாத ஒன்று. புராணங்களிலும் சில நூல்களிலும் மிகைப் படுத்தப் பட்ட செய்திகளாகும் இது போல் போகர் சத்தகான்டம் ( 7000 ) போன்ற நூல்களில் நீராவிக் கப்பல், ஆகாயக் கப்பல் செய்ததாக சொல்லப்பட்டுள்ள செய்திகள் போன்றதே. ) நம்வர்கள் பழமை, பண்பாடு என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு பழம்பெருமை பேசியே எதார்த்தத்தை மறுக்கின்றனர். வேதங்கள், அதன்பின் உபநிஷத்துக்கள், புராண இதிகாசங்கள் என்று பார்த்தோமானால் காலந்தோறும் பல மாற்றங்களை அடைந்து வந்து இருப்பதையும் காணலாம். அவர்களின் காலங்களை உற்று நோக்கினால் கருத்துக்கள் மாறுபடுவது ஒருவருக் கொருவர் விவாதங்களை மேற்கொண்டாதால் புதிய கருத்துக்கள் தோன்றியதையும் பார்க்கலாம். பிற்காலத்தில் ஆதிக்க மனப்பான்மைக்கு ஆட்பட்டதற்கு பின் அவை வெறித்தனமான உயிர்பலிகளையும் கொண்டதாகவும். ஆய்வு மனப்பான்மை அறிவை பயன் படுத்துவதும் குறைந்து விட்டது. இவையே நாம் பார்த்துவரும் செய்திகளில் இருந்து அறியலாம்.
பெற்றமும் மானும் மழுவும் பிரிவு அற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசத்து
அறமும் நல்கி, அடியேன் சிரத்தினில்
நாற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே
                              :--- திருமந்துரம் – 56
காளையும், மானும், மழுவும், எப்போதும் கொண்டு இருப்பதாக காணப்படுவான் கற்பனையில் (மாயை) இருந்து படைக்கப்பட்டவன். ஆனால் எங்கும் உள்ள உயிரினங்களில் இருந்து இயங்குபவன் என் சிரத்தில் (தலையில் அறிவாக) இருந்து நற்பயன்களை அளிக்கிறான். இதில் உருவ வழிபாடு கற்பனை என்பதை சொல்கிறார். 
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களின்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நிற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே
                                  :--- திருமந்திரம் – 57
      
        வேதங்களில் உடல் சிறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த உடலை எனக்கு தந்து உயிரின் உயிராய் நின்ற படைப்புத் தலைவனாகிய இறைவன் எனக்கு அளித்த வாழ்வியலாகும்
இருக்கில் இருக்கும் எண் இலிகோடி
இருக்கின்ற மூலத்தில் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி, உரோமம் ஒளிவிடும் தானே
                          .                :---  திருமந்திரம் ---  58                 
     யோகம் பயின்றால் எண்ணில்லாத காலம் வாழ்வதற்கான வாழ்வு தொடரும் இந்த உடலில் இருக்கின்ற மூலாதாரத்தில் சூரியகலை, சந்திரகலை என்னும் சுவாசப் பயிற்சியின் மூலம் அக்கினி கலையை எழுப்பிட நம் உடல் மயிர்க்கால்கள் தோறும் ஒளிபெறும்.
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே;
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.
                            :-- திருமந்திரம் – 62   
     இவ் உடம்புடன் பல ஆண்டுகள் இருந்தேன் இரவு பகல் அற்ற இடத்தில் நம் உடலில் இரவு பகல் அற்ற இடமாக சித்தர்கள் சிதாகாசம் அல்லது ஆயிரம் இதழ் தாமரையாகிய (மூளை) துரியாதீதம் என்னும் இடத்தில் இருந்தேன் (விந்தணுவாக)
     இதையே திருவள்ளுவ நாதார் ஞானவெட்டியானில் கருவாக உண்டானபின் இருக்கும் நிலை பற்றி கூறுவதையும் பார்ப்போம்.
ஓட்டுப் பலகை ஒருசாண் சிறுவீட்டில்
முட்டி வளர்ந்து முனையடியில் – நட்டு
அனந்த கம்பத்தடியில் அகத்தியனை கண்டு
இன்பமுடன் யான் வளர்ந்தேன்.
       தாயின் கருவறையில் (சிறுவீடு) உள்ளே (அகத்தில் இருக்கும் ஈசன்) இருக்கும் இறைவனைக் கண்டு வளர்ந்தேன் இது பிரமாவின் இருப்பிடமாக கருதப்படும்  சுவாதிட்டானாமாகும்.
வானவர் என்றும், மனிதர் இவர் என்றும்
தேன்அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஒரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வுதானே
                             :-- திருமந்திரம்--- 107  
வானவர் (தேவர்) என்றும், மனிதர் இவர் என்றும் படைப்பது சிவனே ஆவான். அவனைவிட வேறு தெய்வம் இல்லை என்று உணர்தல் வேண்டும்.
பரத்திலே ஒன்றாய், உள்ளே புறமாகி,
வரத்தினுள் மாயவனாகி, அயனாகி
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி
கரத்தினுள் நின்ற கழிவு செய்தானே
                               :-- திருமந்திரம் – 109
பரம்பொருள் என்ற நோக்கில் ஒருவனே தேவனாகி உள்ளும், புறமுமாக இருந்தும், வரம் தரும் நிலையில் திருமால், பிரமன், உருத்திரன் என்று பலவித கடவுளர் நிலையாகி மக்களுக்கு வினையகற்றி    நின்றான்.
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒருகூறு மருவியும் அங்கு உளன;
கோன் ஒரு கூறு உடலுல் நின்று உயிர்க்கின்ற;
தான் ஒரு கூறு சமயன் ஆமே.
                                 ;-- திருமந்திரம் – 111
பரம்பொருளானது பரவெளியில் இருந்து என் இருவினை (நற்செயல் – தீச்செயல்) களுக்கு ஏற்ப உடலைக் கொடுத்து என் வாழ்வுக்கு பாதுகாப்பு அளித்து என் உள்நின்று  காக்கின்றான். எனக்கு ஒப்பற்ற இன்பத்தை தந்து தன்னை எனக்கு காட்டி என் குற்றங்களை நீக்கினான்.
அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீராழம் போல
அறிவு அறிவுள்ளே ஆழ்ந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரம் ஆமே
                             :-- திருமந்திரம் –117
உயிர்களின் அறிவு பொறி புலன்களில் கட்டுண்டு அவற்றின் மயக்கத்திலிருந்து விடுபடும் வழியறியாது துன்புறும். எது போல் என்றால் ஆழமான குளத்தில் மூழ்கிச் கரையேற வழியறியாமல் இருப்பதைப் போல. அந்த நிலையில் இருந்து மீட்டு இறைவன் பால் கலப்பித்து நல்லது செய்பவன் குருபரனாமே.
     அறிவு என்பது என்ன? நாம் வாழ்வியலில் நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது என்று நம் கண், காது, மூக்கு, வாய், உடல் உணர்வு என்ற செயல்களின் பால் அறியப்பட்டு நம் மூலையில் பதியப்பட்டுள்ள அனுபவங்களின் தொகுப்பில் இருந்து வெளிப்படுவது ஆகும். இது மனிதர் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அவர்களின் அனுபவங்களை பொறுத்தே அறிவு வெளிப்படும் நாம் யார் கூறினாலும் அதை நாம் சீர்தூக்கி பார்த்து முடிவுகள் எடுக்கவேண்டும். நம் முன்னோர்கள் குரு என்று யார் கூறினாலும்  எப்பொருள் எத்தனமைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. குரு கூறினாலும் நாம் அந்த அனுபவத்தை பெற்றால் தான் அது உண்மையாகும்.
சிவயோகமாவது, சித்து – அசித்து என்று
தவயோகத்துள் புக்குத், தன ஒளி தாயது;
அவயோகம் சாராது, அவன்பதி போகம்
நவயோகம்; நந்தி நமக்கு அளித்தானே
                                  :-- திருமந்திரம் – 120
சரியை, கிரியை, யோகம், என்பவை என்று பிறரால் முன்பு கூறப்பட்டவை எல்லாம் நன்மை அளிக்காது. அவ்வாரின்றி உயிரானது (ஆன்மா) சிவத்துடன் ஒன்றி தன்  உணர்வில் இணையப் பெற்று பயிலும் இப்புது யோகம் சிவானந்தத்தை அளிக்கும். இதை அருளியவர் நந்தியம் பெருமான். சரியை, கிரியை பற்றிய திருமூலரின் கருத்திற்கு ஏற்ப அகப்பேய் சித்தரின் பாடலைப் பார்ப்போம்.
சரியை ஆகாதே ----------- அகப்பேய்
சாலோகம் கண்டாயே
கிரியை செய்தாலும் ----- அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை
                       :-- 25
இது போல் வால்மீகர் சூத்திரம் – 16 ல் இருந்து சரியை, கிரியை பற்றி பார்ப்போம்.
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர்
   அவரவர் கண்டதையெல்லாம் சரிதை என்பார்
ஆமப்பா கல்லை செம்பை தெய்வம் என்று
     உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
ஆமப்பா யோகமென்று காய்கனியைத் தின்று
     வாய்பேசா ஊமைகள் போல் திரிவார்கள்
ஆமப்பா ஞானமென விண்டு மேலும்
      காக்கை பித்தன் மிருகம் கத்துவாரே.------------ -------- இவ்வாறு சித்தர்கள் சரிதை, யோகம் பற்றி கூறியுள்ளனர். சரியை, கிரியை என்றால் என்ன என்று பார்ப்போம். சைவசித்தாந்த கருத்துப்படி கடவுளை அணுகுவதற்கு நான்கு வழிகள் அல்லது படி நிலைகள் சொல்லப்படுகிறது. அது சரியைவழி, கிரியைவழி, யோகவழி, ஞானவழி, என்று வகைப்படுத்துகின்றனர்.
சரியை :-- சரியைஎன்றால் அன்பின் துணையோடு திருக்கோவில்களில் இறை பணிக்கு உதவுதல். தொண்டு செய்தல். அதாவது ஆலயங்களை தூய்மை படுத்துதல், கூட்டிக் கழுவி விடுதல் பூத் தொடுத்துக் கொடுத்தல் போன்ற பனிகளை அர்ப்பணிப் போடு செய்தல்.
கிரியை :-- கிரியை என்றால் தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று அதை விடாமல் பயிற்சி செய்து மனம் அதில் வசப்படுதல் ஆகும். இதில் பல்வேறு சக்கரங்கள் எந்திரங்கள் வரைதல் அதன் மூலம் உபாசன மூர்த்திகளை கற்பனையாக கருதி வழிபடுதல்.
சரியை, கிரியையில் மற்றும் இதில் சில உட் பிரிவுகளும் சொலப்படுகிறது.
                                                 :-- விக்கிபீடியா
சரியை, கிரியை, யோகம் – இவை மூன்றும் பயிற்சியில் பூரணத்துவம் பெற்ற பின் ஞானம் என்பது --- சிவானந்த போதம் கூறுகிறது.
மன்னுயிரும், தன்னுயிர் போல் என்னுவது சரியை என்றும்
மனு நீதி குரு மொழி தப்பாது அதன் வழி நடப்பது கிரியை என்றும்
ஒன்றும் இல்லை எல்லாம் சூன்யம் என்று மனம் ஒதுங்குவது ஞானம் என்றும் நிஜானந்த போதம் கூறுகிறது.
இனி வால்மீகர் சூத்திரம் ஞானம் – 16 ல் வரும் பாடலையும் பார்ப்போம் :--
அறிந்து கொள்ளும் பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்.
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்
பிசகாமல் நின்றதுவே ஞானமார்க்கம்
அறிந்து உடல் புகின்ற பிராணவாய்வு
மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகி சேர்ந்தான் சித்தன்
சிவசிவ அவனவன் என்று உரைக்கலாமே.
       மேற்கண்ட பாடலையும் முன் கூறிய விளக்கங்களையும் சரியை கிரியை      பற்றிய முன் திருமூலர் (120), அகப்பேய் சித்தரின் பாடல், வால்மீகர் சூத்திரம் பாடலையும் பார்த்து பின் மேற்கண்ட வால்மீகரின் பாடலையும் பார்த்தால் சித்தர்களின் செயல் வழி விளங்கும் இன்னும் பல சித்தர்களின் பாடல் களையும் இங்கு எழுதினால் விரிவடையும் என்பதாலும் அவ்வவ் இடங்களில் தேவையானதை எடுத்துக் கொள்ளுவோம் பிராணாயாமம் என்னும் பயிற்சியில் ஈடுபடும் போது காற்றை உள் இழுக்கும்போது நடைபெறும் செயலே சரியை ஆகும் அதன்பின் அந்தக் காற்றானது உடலில் உள் சென்று நூரையீரல் என்னும் பிராணமய கோசத்தில் தங்கி  (கும்பகத்தின் போது) அங்கு செயல் புரிந்து ஆக்சிஜன் என்னும் பிரானவாய்வை எடுத்துக் கொண்டு புரியும் செயலை கிரியை என்றும் ( கிரியை என்றால் செயல் என்றும் பொருள் படும் ) அந்த பிராணமய கோசத்தில் இருந்து பிரிந்து வரும் காற்றின் செயலை யோக வழி என்றும் இந்த செயலின் அடிப்படையில் மனமானது ஒரே வழியில் சிந்திக்கும் செயல் ஞான வழி என்றும் அந்த பிரனானை எடுத்துக் கொண்டு செயல் புரியும் பிராணமய கோசம் சிவசக்தி ( நாத, விந்து – நாதம் என்பது சத்தியையும் விந்து என்பது சிவனையும் குறிப்பதாகும்) அடங்கும் இருப்பிடமாகும். இதை அறிந்து கொண்டவன் சித்தன் என்று சொல்வது சரியாகும். இது பற்றி விரிவாக பின் பார்ப்போம்.     
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்தமுடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர், நிமலர், நிராமயர், நீள்பர
முத்தர்,தம் முத்தி முதல் முப்பத்தாறே
                                :-- திருமந்திரம் --- 123
சித்தர்கள் என்போர், இங்கேயே சிவலோகத்தைக் கண்டோர் ஓங்காரா நாதத்தை (ஒலியை) உணர்ந்து அதன் முடிவாகிய விந்து நாத அனுபவத்தை பெற்றோர் அழிவற்றவர். மனக்கவலையற்றவர், வினையற்றவர், என்றும் நின்று நிலவும் பேரானந்த பெருவாழ்வில் உள்ளோர். அவரது இவ் வீடு (உடல்) பேற்றிற்கு அடிப்படை காரணம் முப்பத்தாறு தத்துவங்கள் ஆகும்.
முப்பதும் ஆறும் படி முத்தி யோனியா
ஒப்பிலா ஆனந்தத்து உள் ஒளிபுக்கு
செப்ப அரிய சிவம்கண்டு, தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந்தாரே
                           :--- திருமந்திரம் --- 124
சித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களை வீடு பேற்றுக்குப் பயன்படுத்தினர். முத்தி என்ற உயர்நிலையை அடையும் ஏணிக்கு முப்பத்தாறு தத்துவங்களும் படிகளாக அமைத்து ஏறினர். ஏறி தம் உயிரின் உள்ளேயே விளங்கும் இறை ஒளியைக் கண்டு அந்தக் கால் வழியை பிடித்துக் கொண்டு பல உணர்வு நிலைகளைக் கடந்து சிவதுரியத்தில் ஒன்றி உணர்வு பெற்று தெளிவு பெற்றனர். அக்காட்சியில் சமாதிகூடி பரமாக இருந்தனர்.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு கருதி முடிந்த இடம்
சோம்பர் கண்டார் அச்சுருதிக்கன் தூக்கமே
                             :-- 126
அவத்தைகள் ஐந்தையும் காட்டுகின்றார்; பணிசெயதும் செயலற்றவராகவே உள்ள சித்தர் சாக்கிர உணர்வு (விழிப்பு நிலை) நிலையிலும் அவர்கள் இறை எண்ணத்திலேயே கருத்தூன்றி இருப்பார்கள். அவர்கள் தூங்குவது என்பதும் சுழுத்தி நிலையில் (அரைத்தூக்க நிலை) தான் இது ஐம்புலன்களும் செயல் குறைந்து ஆத்மா (மனம்) தன்னை மறந்த நிலையில் இருப்பது. இதுவே தூங்காமல் தூங்கிச் சுகம் பெருவதென்பது. இதற்கு மேல் உயிராகிய ஆன்மா எவ்வித மன எண்ணங்களும் அற்று ஐம்புலன்களின் உணர்வு நிலைகளும் ஒடுங்கி பரமானந்த நிலையில் இருந்து இன்புறுவது. இந்த முடிவானது (சுருதி) வேதங்களுக்கும் அப்பாற்பட்ட நிலை துரியாதீதம் என்று கூறப்படும்.
சாக்கிரம் – விழிப்புநிலை, சொப்பனம் – (கனவு நிலை), சுசுப்தி (சுழுத்தி) – அரைத் தூக்க நிலை, துரியம் --- இறை உணர்வோடு இருத்தல், துரியாதீதம் – எவ்வித எண்ணங்களும் உணர்வுகளும் அற்று ஒன்றிய நிலை இதில் பாகுபாடு இல்லாமல் எதைக் கருதி யோகம் செய்தார்களோ அதுவாகவே இருப்பது ( சமாதி நிலை ) இதில் தொடர்ந்து இருந்தால் இருபத்தோரு நாட்களுக்கு மேல் உயிர் என்று சொலப்படும் ஆன்மா ஸ்தூல உடலை விட்டு பிரிந்து விடும். இதுவே முத்தி அடைதல் என்பதாகும்.
தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே
                                   :-- திருமந்திரம் – 127
     யோகநிலையில் பிராணாய அப்பியாசத்தில் ஆதாரங்களைக் கடந்து பரம்பொருளையே எண்ணி வேறு நினைவில்லாமல் இருப்பது இந்த நிலையில் நான் மேற் கூறியவாறு ஐம்புலன்களும் தங்களின் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணர்தல் என்ற புறச் செயல்கள் எதிலும் ஈடுபடாமல் உணர்வு குறைந்த நிலையில் மதி மயக்கம் என்ற நிலையில் இருப்பது. இது பற்றி விளக்கி  சொல்ல முடியாது. இதை ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்தின் மூலமாக மட்டுமே உணரமுடியும். இந்த உணர்வு நிலை என்பது ஒரு போதை தரும் நிலையாகும் நாம் அந்த நிலையிலேயே இருக்கமாட்டோமா என்று நம்மை ஏங்கச் செய்யும் நிலையாகும். எனது முப்பதாவது வயதில் நான் தீவிரமான பயிற்சியில் இருந்த போது நான் பெற்ற நிலை என்பது கூறுவது என்றால் இப்படிக் கூறலாம். ஒருவன் போதை பொருள்களை சாப்பிட்டு விட்டு நம் ஐம்புலன்களின் செயல் குறைந்து இருக்கும் நிலை போன்றது என்று ஒருவாறு சொல்லலாம். எப்படி போதைப் பொருளுக்கு ஒருவன் அடிமையாகி திரும்பத் திரும்ப அந்த செயல்களில் ஈடுபட விரும்புகிறானோ அதைப் போன்றதே. நம்மை அந்த யோக நிலையில் ஈடு படச் செய்யும். நான் அப்போது தான் திருமணமாகி மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இருந்ததால் உற்றார் மற்று குடும்பத்தாரின் கட்டுப்பாட்டால் தீவிரப் பயற்சியை குறைக்க நேர்ந்தது. எனது யோகப் பயிற்சியின் மூலம் கிடைக்கப் பெற்றதன் பயனாக நான் பெற்ற அனுபவங்களின் செயல்களைக் கொண்டே இந்த தொடரில் எழுதி வருகிறேன். இவை பற்றி விரிவாக பின் பார்ப்போம். மற்றும் ப்ரியங்க யோகம் பற்றியும் பார்ப்போம் யோகத்திற்கு இயம நியம நிலைகளே அஸ்த்திவாரமாகும். அஸ்த்திவாரம் சரியாக பலமாக இருந்தால் கட்டிடத்தை உயர்த்தலாம் அதில் தவறு இழைத்தால் உயர் நிலையை அடைய முடியாது இது பற்றி முன் தொகுதியல் திருவள்ளுவ நாதரின் பஞ்சரத்தினம் – 500 ல் இருந்து ஒரு பாடலைக் குறிப்பிட்டு இருப்பேன் என்பதை யோகம் பழகும் ஒவ்வருவரும் புரிந்து கொள்ளவேண்டும். சித்தர் பாடல்கள் அனைத்தும் இதையே வலியுறுத்துகிறது. இதற்காகவே பல்வேறு உதாரனங்களையும் புராண உருவக கதைகளை சொல்லியும், தத்துவங்கள் என்றும் உடல் உறுப்புக்களின் செயல்கள் பற்றியும் கூறி நம் மனத்தை பக்குவப் படுத்தவும் யோகநிலையில் அதீத சக்திகள் பற்றியும் சொல்லி நமக்கு ஆர்வத்தை உண்டாக்கி நம்மை செயல் பட வைக்கின்றனர். மற்றும் இவ் யோகப்பியாசத்தின் போது உண்டாகும் உடல் உபாதைகள் பற்றியும் கவனாமாக இருக்கவேண்டும்.
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உண்மை காண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர், மாணிக்கம்
                                    :-- திருமந்திரம் – 128 
அறிவுக்கு எல்லை உண்டா அது இவ்வளவு தான் என்றும் யாரும் சொல்ல முடியாது, நாம் ஐம்புலன்களின் வழியாக பெறப்படும் அனுபவங்களைக் கொண்டு சிந்திக்க சிந்திக்க அதுவளர்ந்து கொண்டே இருக்கும் அதற்கு முடிவில்லை. இவ்வாறான அறிவைத் தருபவன் யார் அது அந்த சிவனே (பரம்பொருளே) ஆவான் நம்முள் சூக்கும நிலையில் நடனம் ஆடுகிறவனை, அந்தபரம் பொருளை  யாவர்க்கும் ஒப்ப வெய்யில் பரப்பும் சூரியன் போன்றவன் வலமாக ஒளிவிடும் மாணிக்க மணி போன்றவன்.         
ஊனாய்,உயிராய்,உணர்வு – அங்கியாய், முன்னம்
சேனாய் வான் ஓங்கி, திறுருவே அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்து
ஆள்முழுதும் அண்டமும் ஆக நின்றானே
                             :--- திருமந்திரம் – 179
உடலாகவும் உடலை இயக்கம் உயிராகவும் அதற்கு உணவாகவும் வானம் நிறைந்த சூரியன் குளிர்ந்த தன்மையுள்ள சந்திரன் அண்டம் இவைகள் கடந்து எல்லாப் பொருள்களின் முடிவாக இறைவன் உள்ளான்.
தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்துமான் ஆமே
                               :--- திருமந்திரம் – 195
       ஐம்பூதங்களும் இணைந்த பொருளான இந்த உடலுக்கு சிவத்தில் சத்தி இணைந்து உயிருக்கு சக்தி துணையாக இருப்பாள்.
புண்ணிய நந்தி பொருந்தும் உலகு எங்கும்
மண் இயல்பு ஆகி வளர்ந்திடும் சக்தியும்
தண் இயல்பு ஆகி தாரணி முழுதுமாய்,
கண் இயல்பு ஆகிக் கலந்து எழும் பூவிலே
                                :-- திருமந்திரம் – 198
     இறை பொருள் உலகம் எங்கும் பறந்து இருக்கும் மண்ணில் அதன் தன்மையாகவும், இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பொருள்களில் ஐம்பூதங்களின் இயல்பாக சக்தி தன்  செயலால் கலந்து இருக்கின்றாள்.
நீரகத்து இன்பம் பிறக்கும், நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும், அக்காற்று இடை
ஒர்வுடை நலுயிர், பாதம் ஒலி சக்தி
நீர் இடை மண்ணில் நிலை பிறப்பு ஆமே
                           :-- திருமந்திரம் – 199
நம் உடலில் பூதங்களின் செயல்களாக நீரில் சுவையாகவும், நெருப்பில் ஒளியாகவும்
காற்றில் உடல் இயக்கத்திற்கு தேவையான பிராணனாகவும், ஆகாயத்திற்கு ஒலியாகவும், மண்ணிற்கு உடல் திண்மையாகவும் ஐம்பூதங்களின் செயல் வெளிப்படும்.
உண்டு உலகு எழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரனான் தன்னொடும்
பண்டு இவ்வுலகம் படிக்கும் பொருளே
                                                                                 :--திருமந்திரம் --200
     திருமால், பிரமன், ருத்திரன் இம்மூவரும் காரணக் கடவுளர் என்பர் இவர்களையும் படைப்பவன் பரம் பொருளே. பரம் பொருளானது வெளி உலக செயல் களின் வெளிப்பாடாக படைத்தல், காத்தல், அழித்தல் என்று ஒவ்வொரு செயலுக்கும் ஒருவராக இருந்து தன்னைக் காரணப் பொருளாக உலகுக்கு அளிக்கிறது.
நின்ற உயிர் ஆக்கும் நிமலன், என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல்
முந்துயர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே
:--- திருமந்துரம் – 205
     எல்லா உயிர்களையும் படைத்த இறைவன் என்னையும் படைத்து இவ்வுடம்பிலேயே எனுயிருடன் ஒன்றி நிற்கும் காலத்தில் யோகசாதனைக்கு முன்பு துன்பம் தந்த இதே உடம்பு, அதன் பின்பு நன்மை தரும் வகையில் பிராண வாய்வை நல்லா நெறியில் இயங்கச் செய்து சுழுமுனை நாடியில் இயங்குகின்றான்,
உற்றமுப்பால் ஒன்று மையால் உதயமாம்
மற்றைய மூன்றும் மாமாயோதயம் விந்து
பெற்ற அந்நாதம் பரையில் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு அதே
                              :-- திருமந்திரம் – 210
மாயை மூன்று – அது சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை எனப்படும். இவற்றுள் அசுத்த மாயையில் இருந்து – பிரகிருதி மாயையும் அதனின்று ஆன்ம தத்துவம் இருபத்தினான்கும் பிறக்கும். மாயை என்பது சுத்தமாயை அதற்கு மேல் உள்ள விந்து நாதத்தில் பிறக்கும் நாதம் பராசக்தியிடம் பிறக்கும் ஆதலால் எல்லாம் சத்தி – சிவன் விளையாட்டாகும்.
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதிஎன்
போகாத சத்தியுள் போந்து, உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரண் மால் பிரமனாய்
ஆகாயம் பூமியும் காண அளித்தலே
                        :-- திருமந்திரம் – 211    
   ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐம்பூதங்களும் முறையே சதாசிவன், மயேசுரன், உருத்திரன், திருமால், பிரமன் ஐவரும் இவ் ஐம் பூதங்களுக்கும் தலைவராக நின்று இயக்குகின்றனர்.
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண்திசை ஆதி
ஒன்தின் பதம் செய்த ஊம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே
                                    :-- திருமந்திரம்—233
   கொண்டால் என்றால் தெற்கு என்று ஒரு பொருள் உள்ளது. நமது தலை உச்சிப்பகுதி வடதிசையாகக் கொண்டால் வடக்கு உயர்ந்தும் தெற்கு தாழ்ந்தும் இருப்பதைக் கொண்டு நம் உடலின் கீழே உள்ள பகுதியான மூலாதாரத்தில் குண்டலியின் இருப்பிடமாக அமையும் அதையே ஓம குண்டமாகக் கருதி அதில் நம் மனத்தை திருப்பி ஓம் என்று சொல்லிவர குண்டலி கனலாக (உஷ்ணமாக) மேல் நோக்கி எழுவாள் இதற்கு எட்டுத்திசையிலும் பொருள்களை படைத்த பரம் காரணமாகும்.
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்;
வைத்த சங்காரம் சாக்கிராதீதம்ஆம்;
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்;
உய்த்த சங்காரம் பரண் அருள் உண்மையே
                                    :-- திருமந்திரம் – 235  
நித்த சங்காரத்தில் எதனையும் அறியாத நிலை உள்ளது. இறப்பு நிலையில் என்பது உணர்வு அல்லது விழிப்பு நிலை கடந்து செயல் ஒழிந்த நிலையாகும் சுத்த சங்காரத்தில் இறையருள் வாய்க்கும் போது உயிர் தனது தொழில் என ஒன்றும் இல்லை எல்லாம் இறைவன் செயலாகக் காணுதல்.  
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்;
வைத்த சங்காரம் மாயா சங்காரமாம்;
சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வதால்;
உய்த்த சங்காரக் சிவன் அருள் உண்மையே;
                                    :--- திருமந்திரம் – 236
நித்த சங்காரத்தில் தூல உடலை விட்டுச் சூக்கும ( தூல உடல் கண்ணால் பார்க்கப்படுமுடல் – சூக்கும உடல் கண்ணால் பார்க்க முடியாத உடல் ) உடல் பிரியும். சங்காரம் என்பது அழித்தல் ஆகும். சுத்த சங்காரம் என்பது மனம் கடந்த நிலையை அடைதல். உய்த்த சங்கரம் என்பது இறை அருளுடன் இணைதல் ஆகும்.
உள்ளத்து ஒருவனை உள் உரு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்க ஒருவனை
உள்ளமும் தானுமுடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே
                              :-- திருமந்திரம் – 240 
மனத்தில் நிற்கும் ஒருவன் உள்ளே நிறைந்த ஒளியை நம் மனம் விட்டு சிறிதும் பிரியாதவனை அவன் நம் உடலில் அவன் இருப்பினும் நமது மனம் அவனது உருவத்தினை அறிவது இல்லை.
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் விந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறியாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாரே
:-- திருமந்திரம் – 242  
உருத்திரன், திருமால், பிரமன் என்ற மூவரும் சிவ பரம் பொருள் நம் உடலுக்கு அளித்த உயிரையும் அவன் செய்யும் மறைப்பையும் அறியாதவர் ஆவர்.
காண்கின்ற கண் ஒளிகாதல் செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்று ஆதியைப்
பூண் படு நாவுடை நெஞ்சம் உணர்த்திட்டுச்
கேன்படு பொய்கைச் செயல் அனையாரே
                              :-- திருமந்திரம் –243 
யோகப் பயிற்சியால் கண்கள் ஒளி பெறுகின்றமையால் அக் கண்ணொளிக்கு காரனம்  இறைவன் சோதி வடிவாகப் புருவ மத்தியில் எழுந்தருளுவதே என்று உணர்ந்து அவனுக்கு அன்பு செய்து, ஆண், பெண், அலி இந்த மூன்று வடிவமும் மேற் கொண்டு நிற்கும் அவனைத் தலை உச்சியில் ஆயிரம் இதழ் தாமரையில் கண்டு கலத்தலைச் செய்யாது மாந்தர் வீணே நாளைக் கழிக்கின்றனரே.
ஆறும் அறியாத அண்டத் திருவுரு
பார் முதலாகப் பயிலும் கட்டத்திலே
நீரினில் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சேராமல் காணும் சுகம் அறிந்தேன்
                              :-- திருமந்திரம்--- 259  
   அண்டமே திரு உடலாக என்று சொல்லும் வண்ணம் உள்ள இறைவனது கண் காணாத உடல் நிலம் முதலான ஐம்பூதச் சேர்க்கை ஆகிய உடம்பில் நீரில் கலந்த பால் போல உள்ள தன்மை உணர்ந்து இன்புற்றேன்.
இது போல் சிவவாக்கியரின் ஒரு பாடலைப் பார்ப்போம்:-
நாலுவேத மோதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுநெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார அகத்துள்ளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனவிலும் உம்மதில்லையே
                                          :-- சிவவாக்கியம் – 16
ருக், யசுர், சாமம், அதர்வணம், என்று சொல்லப்படும் நாலுவித சாத்திரங்களும் படித்து பல கிரியைகளும் செய்கிறீர் ஆனால் பாலில் நெய் எவ்வாறு கலந்து உள்ளதோ அது போல் இறைவன் நம் உடல் உள்ளேயே கலந்து இருப்பதை பாவிகளே அறிந்து அறிவுடையவராக மாட்டீர்கள் என்று சொல்கிறார் சித்தர்களின் கருத்துக்கள் பெரும் பாலும் ஒருங்கிணைந்து செல்கின்றனர். ஆனால் திருமூலர் தனது யோக வழியை முத்திக்கு வலியுறுத்தி கூறினாலும் உருவ வெளிப்பாடு பத்தி வழிபாடு போன்றவற்றை அரவணைத்துச் செல்கிறார். ஆனால் சிவவாக்கியர் போன்ற சில சித்தர்கள் நேரடியாக பார்ப்பனியக் சடங்கு கிரியைகளை சாடுகின்றனர். இது அவர்களின் காலச் சூழலில் ஏற்பட்ட பட்டறிவின் வெளிப்பாடுகளே தவிர வேறில்லை.
அறியீர் உடம்பினின் ஆகிய ஆறும்
பிரியீர் அதனில் பெருகும் குணங்கள்
செரியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே
                              :-- திருமந்திரம் – 278 
உடம்பில் இருக்கும் ஆறு ஆதாரங்கள் பற்றி அறியவில்ல ( மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு  ஆதாரங்களாகும் ) அதன் செயல்களை அறிய நாம் மனதை அந்த இடங்களில் செலுத்தி தியானித்தால் வெளிப்படும் இதை எல்லாம் அறியுமாறு பத்து மாதத்தில் உடம்பு பிறந்தது.
உடல் வைத்தவாறும் உயிர்வைத்தவாறும்
மடிவித்த ஒன்பது வாய்தலும் வைத்து
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி
கடை வைத்த ஈசனைக் கைகலந்தேனே
                              :-- திருமந்திரம் --  279
      உடலை உண்டாக்கியும், அதில் உயிர் உண்டாக்கியும் அதில் ஒன்பது வாசல்கள் வைத்தும் உடலில் மூலாதாரத்தில் இருந்து தலை உச்சியில் ஆயிரம் இதழ் தாமரை நிலையில் குண்டலியை எழுப்பினால் அந்த உஷ்ணம் சென்றடைந்து பிரமரந்திர வாயிலாகிய வாயிலையும் வைத்தான். இதன் மூலம் நான் இறைவனை கூடினேன்.
பூவுடன் மொட்டுப் பொருந்த உலந்தபின்
கா உடைத் தீயும் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாயப்
பாருடல் எங்கும்பறந்து எட்டும் பற்றாமே
                                    :-- திருமந்திரம் – 281
சுக்கிலத்தில் உள்ள கருவிற்கு காரணமான விந்து (உயிரணு) சுரோநிதத்தில் உள்ள நாதத்துடன் (முட்டை) கலந்தபின் அதனுடன் உஷ்ணம் கலந்து உடல் ஒரு பைபோல் மூடப்பட்டு இருக்கும் அது நீரில் குமுளி போல் அந்தக் கருவைச் சுற்றி படர்ந்து இருக்கும். இந்த முறையில் கரு பிறந்த பின் அந்த உடலில் தன்மாத்திரைகள் ஐந்தும், கரணங்கள் மூன்றும் கூடியதாக பிறக்கும்.
மத்தளி ஒன்றுள்ளே தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே
                                    :-- திருமந்திரம் – 363
    உடலை மத்தளமாகவும் அதில் இயங்கும் மூச்சுக் காற்றை இடை, பிங்கலை   (இடது ,வலது ) இயக்கத்தை இரண்டு தாளமாகவும் உருவகித்து சொல்லி உள்ளார் அதாவது நம் உடலில் இயங்கும் மூச்சுக் காற்றை ஒழுங்கு படுத்தினால் நம் உடலில் இயங்கும் உயிரானது உடலானதில் இருந்து வாழ்வியலை நடத்தும் இல்லை எனில் அது இயங்கும் சூழல் இல்லாவிடில் இந்த உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடும் நந்தியை
வேம் கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாதே
                              :-- திருமந்திரம் – 364 
   நம் உடலை அணு அணுவாக வேகச் செய்யும் மூச்சுக்காற்றை சுழுமுனை வழியாக மேல் ஆதாரங்களுக்கு ஏற்றி மூலக் கணலையும் அதனுடன் அக்கனலை நெற்றியில் (சந்திர மண்டலம்) ஏற்றி குளிர்வித்து மூச்சை “வேகாக் கால்” ஆக்கும் உபாயம் அறியாதோர் உடம்பை ( இறப்பின் பின் ) உடம்பை வெந்தொழியும் களம் என்று கருதுவர். ஆனால் நம் உடலுள் விளையாடும் நடன நாதனை அவர்கள் அறியார் அவனால் இயக்கும் உயிரையும் அறியார்.
அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
துணை துணை வைத்ததின் உட்பொருள் ஆனா
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை துணை ஆயது ஓர் தூய்நெறி ஆமே
                                    :--- திருமந்திரம்  -- 371
யோகியாரின் மூலக்கனல் அவர் தம் புருவ மத்தியில் சென்று சுடர் விடும் போது அதன் உள் ஒளியால் உள்ளே இறைவனே நமக்குத் துணை. உயிர்களுள் ஆண், பெண் என இரண்டு வகை படித்து ஒன்றுக்கு ஒன்று துணை என்று வைத்ததன் நோக்கம் ஆண் பெண் இருவரும் உடலுறவின் போது அந்த உள் ஒளியை அவர்கள் உணர வேண்டும். ( இவ்வாறு இயங்குவது பரியங்க யோகமாகும். )
நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே என்று
மைநின்று அறியும்வகை அறியார்கட்கு
மைநின்று அவில்தறு மந்திரம் ஆம் என்று
செய்நின்ற செல்வம் மதி அது ஆமே
                              :-- திருமந்திரம் – 372 
அறியாமையில் மூழ்கி இருப்பினும் அந்த இருளை நீக்கி நம்முள் விளங்கும் சுடரை அறிந்து காண்பவருக்கு மனிதரின் இருளை ஓட்டி மகிழ் விக்கும் இன்பச் சொல்லாகும்
பாழிஅகலுள் எரியும் திருபோல் இட்டு
ஊழி அகமும் உருவினை நோய் பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினை சுடுமாறே
                              :-- திருமந்திரம் – 374
   அகல் விளக்கில் எரியும் திரியைப் போல சுடர் விடும் போது எவ்வாறு இருள் விலகுகிறதோ அது போல்  ஊழிக்காலமாகச் சேர்க்கப்பட்டு, புதையல் தோண்டி எடுத்தார் போல வந்து வருத்துகின்ற வினைத் துன்பங்கள் பல மூலாதாரத்தில் கனல் எழுந்து நெற்றியில் சுடராய் தோன்றினால் அவ்வினைத் துன்பம் நீங்கும்
வரையிடை நின்று இழி வான்நீர் அருவி
உரை இல்லை,உள்ளத்து – அகத்து நின்ற ஊரும்;
நுரையில்லை, மாசுஇல்லை, நுண்ணிது தென் – நீர்
கரை இல்லை, எந்தை கழுமணி ஆறே
                                    :-- திருமந்திரம் – 404
யோகியின் தலையில் இருந்து விழும் அமுதம் பற்றிக் சொல்ல வார்த்தையில்லை அது எப்படி வருகிறது என்றால் நமது உள்ளத்தில் எழுகின்ற உணர்வு காரணமாக வருகிறது. அது தெளிந்து மாசு மறுவற்று தெளிவானது அது நம் உடலில் இறை அருளால் உருவானது.
உள்ளத்தின் உள்ளே உள தீர்த்தங்கள்
மெல்லக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலாரே
                              :-- திருமந்திரம் – 405 
உடம்பின் உள்ளே ஊரும் அமுதம் போன்ற தீர்த்தங்கள் பல உண்டு அதில் மூழ்கினால் இருவினை செயல்களும் நீங்கும் அதை விடுத்து வெளியில் கோவில் குளங்கள் என்று யாத்திரை செய்தால் என்ன செய்யும் தனது மனத்துக் கண் உள்ள குற்றங்களை நீக்கி உள் நோக்கி பார்க்கும் அறிவு இல்லாறே.
இது போல் கருத்துள்ள சிவவாக்கியரின் பாடலைப் பார்ப்போம்:--

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே
ஆவதும் அறிவது இல்லை இல்லை இல்லையே
                                    :-- சிவவாக்கியம் – 35  
தளி அறிவாளர்க்குக் தண்ணி தாய்த் தோன்றும்;
குளிஅறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்;
வழி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்;
தெறி அறிவாளர் தம் சிந்தனையுளானே
                              :-- திருமந்திரம் – 406   
நம் உடலிலேயே இறைவனைக் காண்பவர்க்கு அவன் தன்னுள் குளிர்ந்து விளங்குவான். இவை அல்லாது வெளியில் கோயில் குளங்களில் புனித நீர் என்று ஆடிப் பார்ப்பவர்களுக்கு தோன்ற மாட்டான். மூச்சுக் காற்றுப் பற்றி அறிந்தோர்க்கு அவர்கள் முயற்சிக்கு தகுந்தார் போல் காணக் கிடைக்கும் ஆனால் தெளிவான சிந்தனை உள்ளோர்க்கு அவர் சிந்தனையில் நீங்காமல் உள்ளான்.
இருக்கு நாலு வேதமும் எழுத்தையற வோதிலும்
பொறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே
                                    :-- சிவவாக்கியர் – 38  
  சிவவாக்கியரின் மேற்கண்ட இருபாடல் களையும் படித்தால் திரு மூலரின் கருத்துக்கு ஒன்றிப் போவதைக் காணலாம். கோவிலுக்கு போவதும் அங்குள்ள புனித குளங்களில் நீராடுவதாலும் கும்பிடுவதாலும் பிரயோசனம் இல்லை அதை விடுத்து நம் மனத்துக்குள் உள்ளதைத் தேடுங்கள் என்றும் நான்கு வேதங்கள் என்று சொல்லப்படும்  இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், புராணங்கள் என்று பல படித்து அறிந்தாலும் உடல் முழுக்க திருநீறு பூசி வாய் ஓயாமல் மந்திரங்களையும் நாமங்களையும் கூறினாலும் அதில் இறைவனைக் காண இயலாது அதை விடுத்து மனதை உள் முகமாக செலுத்தி ஒன்றிக் கலந்து பார்க்க முடிந்தால் இறைவனாகிய சோதியைக் சேரலாம் பார்க்கலாம்.
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தின் ஆறும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தருள் ஆமே
                                    :-- திருமந்திரம் – 407 
     உயிருனர்வால் உள்ளத்து உள்ளே உணரப்படும் இறைவனை வெளி ஆரவாரத்தால் யாரும் கலந்து அறிய இயலாது. அவ்வாறு தீர்த்தத்தை ஆடுவதால்  (கங்கை, காவேரி, பிரயாகை, மாகாமாக குளங்களில் நீராடுவதால்) அவர்கள் நினைக்கும் பாவங்கள் நீங்காது அது பள்ளத்துக்குள் இருக்கும் நீரானது எப்படி வெளியேற முடியாதோ அது போல் தங்கிவிடும்.
ஞானவெட்டியானில் இருந்து சில பாடல்களைப் பார்ப்போம்:--
தீர்த்தம் ஆடிக் கொள்வீர் மிக அறிந்தவர்போல்
செபதப சாஸ்திரங்கள் ஓதிக் கொள்வீர்  
யாத்திரை தீர்த்தங்கள் நதிகள் ஆடி நாள் தோறும்  
அலைந்து அலைந்து சுற்றி அலையுறீர்
மாற்றியே  பிறப்போம் என்று பொய்ப் பிரட்டு
வாய் சமத்து சாஸ்த்திரம்  சொல் மடையர்களே
பாத்திரா பாத்திரம்  அறியா பாவிகள் தான்
பாடுபட்டுங் கூற்றரியா மாடுகள் தான் .
                        :-- ஞானவெட்டியான் – 48
சித்தமுடன் செபதபங்கள் செயதொம் என்பார்
செப்புகிறேன் அவர்களுட சேதி எல்லாம்
கர்த்தனுடைய பாதமலர் நினைக்க மாட்டார்
காடு சுற்றியோடியபின் கலங்குவார்கள்
நித்தியமுடன் நிஷ்டையிலும் நிற்கமாட்டார்கள்
நிலத்தினுள்ள ஆசையெல்லாம் நினைத்துக் கொள்வார்
சத்தமுடன் தேவாரம் கூகை போலுஞ்சதா
நித்தியம் ஓதிக் குடிகெடுப் பாராண்டே
                              :-- ஞானவெட்டியான் --- 552  
    எல்லாம் தெரிந்தவர் போல் பல நூல்கள் ( வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் உபநிஷதங்கள் ) படித்தும் காசி, கயா பத்திரிநாத் என்று பல ஊர்கள் சுற்றியும் அங்குள்ள நீர் நிலைகளில் குளித்தும் நாள் தோறும் சுற்றி அலைவார்கள் மறுபிறப்பு பற்றி எல்லாம் பொய்பிரட்டு பேசி திரியும் முட்டாள்கள் உண்மை எது பொய் எது என்று தெரியாத மாடுகள் இறைவனுடைய  அடியை அறிய இயலாமல் நித்தியமும் யோக நிலையில் நின்று செயல்பட மாட்டார்கள் .உலக ஆசைகளை எல்லாம் மறக்க மாட்டார்கள் தினசரி தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களை சத்தம் போட்டு ஆந்தை இரவில் எப்படி கத்திக் கொண்டு திரியுமோ அது போல் திரிவார்கள் இவர்கள் உழைக்காமல் தன்வீட்டிற்கும் பிரயோசனம் இல்லாமல் மற்றவரையும் படிக்கச் சொல்லி கெடுப்பார்கள் என்று சித்தர்கள் சொல்கின்றனர்.
அறிவுஆர் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வளங்கொள்
மறிவார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறி ஆர் புனல் மூழ்க புண்ணியன் ஆமே
                                    :-- திருமந்திரம்—408  
உண்மையான இறைவனை அடைய விரும்பும் அன்பன் தன் உடம்பில் இறைவன் வாழும் இடமாகிய ஆயிரம் இதழ் தாமரையில் உள்ள சோதி உருவான இறைவனை யோக சாதனை  செயலால் மனத்தை செலுத்தி கங்கையை போல் பிரவாகம் கொண்டு விளங்கும் பேரின்ப சோதியில் மூழ்குபவன் புண்ணியன் ஆவான்.
கடலில் கெடுத்துக் குளத்தில் காண்டல்
உடலுற்றுத்தேடுவார் தம்மை ஒப்பார் இல்
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே
                              :-- திருமந்திரம் – 409 
   உலகியலார் பொருளை கடலில் தொலைத்து விட்டு ஊர்க் குளத்தில் தேடுவதைப் போல் சிலர் இறைவனை நம் உடலில் தேடி உண்மை அறியாமல் வீணாக வெளியில் தேடி அலைகின்றனர். இந்தக் கருத்துக் ஒப்ப காகபுசுன்டரின் ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
பார்த்து தீபலிங்கத்தைப் பணியாமற்றான்
வீரப்பா மணியாட்டிப் பூசைசெய்து
வீனர்கள்தான் கத்தபம் போற் கதறுவார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
செத்த பிணம் போலாச்சு தெளிந்துபாரு
காரப்பா மனம் கொண்டு பரத்தினுடே
கண்டவரே கைலாச தேகந்தானே
                        :-- காக புசுண்டர் – 23
லிங்கம் மற்றும் உருவகச் சிலைகளை வைத்து அதற்கு மலர் தூவி பூசை செய்வார்கள் ஆனால் நம் உடலில் உள்ளே சோதிவடிவில் லிங்கம் உள்ளதை அறிந்து பனிய மாட்டார்கள் வீணாக சிலைகளுக்கு மணியாட்டியும் மந்திரங்களை கழுதை கத்துவது போல் கத்தி  பூக்களையும் போடுவார்கள்.  ஒரு செடியில் இருந்து ஒரு பூவைக் கிள்ளும் போது அது செத்த பிணம் போல அதன் உயி சக்தி போய்விடும் எனவே இதை எல்லாம் ஆய்ந்து தெரிந்து பார் பின் மனதை பரத்தினுள் ( பரவெளியில் ) செலுத்தி உண்மை அறியும் போது உன் தேகம் இறைவன் இருக்கும் உடலாகும்.
கலந்தது நீர் – அது உடம்பில் கருக்கும்;
கலந்தது நீர் – அது உடம்பில் சிவக்கும்;
கலந்தது நீர் – அது உடம்பில் வெளுக்கும்;
கலந்தது நீர் – அனல் காற்று – அது ஆமே
                              :-- திருமந்திரம் – 410  
    நம் உடலில் இரத்தமானது பல மாசுக்களை கொண்டநிலையில் கருத்து இருக்கும். பின் அந்த இரத்தமானது பிராணமய கோசம் போன்ற கோசங்களின் வழியாக செல்லும் போது சுத்தப்படுத்தப் பட்டு சிவந்த நிறம் பெறுகிறது. பின் அந்த இரத்தமானது சுக்கிலம் என்ற வெண்மையான பொருளாக மாறுகிறது. இவை எல்லாம் நம் உடலில் அன்னரசம் என்றும் அப்பு என்று சொலப்படும் நீரும் நம் சுவாசத்தின் மூலம் பெறப்படுகின்ற காற்றும் உடலில் நடக்கும் மாற்றத்தின் மூலம் பெறப்படும் நெருப்பின் செயலினால் ஆவதாகும். ( உடலில் ஏற்படும் இரசாயனச் செயல்களை முன் சொலியுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவை பற்றியெல்லாம் சித்த மருத்துவத்தில் அகத்தியர் என்ற பாகத்தில் பார்ப்போம்,)
தான் தவம் செய்வது ஆம் செய்தவத்து அவ்வழி
மான் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே
                              :-- திருமந்திரம் – 424
  இயற்கை சார்ந்தவற்றை தெய்வமாக வழிபடுகிறவர்களும்( மரம், இடி, கல் நெருப்பு போன்றவற்றை ) மனிதர்களை தெய்வமாக ( இராமன், கிருஷ்ணன், சாயிபாப, நித்தியானந்த போன்ற மனித வடிவினர்கள் ) நினைத்து தெய்வ நிலையில் வழி படுகிறவர்களுக்கும் இறுதியில் மரணம் நேரிடும். எனவே நம்முள் இருக்கும் உண்மை தெய்வத்தை தவம் செய்து கண்டு வணங்க வேண்டும்.
இக் கருத்தை வலியுறுத்தும் நந்தீஸ்வரரின் பாடலைப் பார்ப்போம் :--
வரிசை என்ற பூரணமே தெய்வம் தெய்வம்
மகத்தான பூரணமே கெதி என்றெண்ணி
உரிமையுடன் நின்றவனே சித்தன் சித்தன்
யோகி அவன் பரதேசி ஞானி தேசிகன்
வரிசை என்ற அண்டரண்ட பதம் கடந்து
கண்ணிமைக்குள் சுற்றிவர மனம் ஒடி
நெறியுடன் கான் போருக்கு இவனே யோகன்
நெறி தப்பிச் சென்றவனே பயன் ஆமே
                            :-- நந்திச்வரர் கருக்கிடை – 300/ 192  
    பூரணமே தெய்வம் என்று எண்ணி அதே நிலைபாட்டில் இருப்பவனே சித்தன் என்றும் ஞானி என்றும் யோகி, பரதேசி என்று பலவாறாக இருப்பார். இவ்வாறு ஒரு நெறியுடன் நம் உடலில் இறைவனைக் காண்பான். யோக நெறி தப்பிச் சென்றால் பேயனாகி திரிவர்.
புணர்ச்சியுள் ஆயிலைமேல் அன்புபோல
உணரச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்குக்
கொணர்ச்சி இலாது குலாவி உலாவி
அனைத்தாலும் இன்பம் அது இது ஆமே
                              :-- திருமந்திரம் – 450 
நாம் உடலுறவின் போது நம் மனத்தை வேறு வழிகளில் செலுத்தாது காம உணர்வேடு ஒன்றி இன்புருகிறோமோ அதுபோல் இறைவனிடம் அன்பு கொண்டு அவனோடு ஒன்றிக் கலந்து இருக்க வல்லார்க்கு அவர்களுக்குள்ளேயே இருக்கும் இறைவனிடம் கூடி மகிழும் இன்பம் இன்னதென்று சொல்ல இயலாத அனுபவமாகும்.
விட்டுப் பிடிப்பது மேதகு சோதியைத்;
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் ஏன் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே
                        :-- திருமந்திரம்  456 

      நம் உடலில் சோதி உருவம் தொடர்ந்து தோன்றாது ஆயினும் இறைவனது பெருமையை நினைவில் வைத்து, யோக சாதனையைத் தொடர்வேன் என் உயிராக உள்ள அவனைக் கலந்து தேன் போலும் இன்பத்தை அனுபவித்தாலே அவனுக்குச் செய்யும் அபிசேகம் ஆகும்.
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கொள் ஒன்று பற்றினால் கூட பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றாரே
                        :-- திருமந்திரம் – 462
      நம் உடலில் மூலாதாரத்தில் உள்ள சுழுமுனை நாடியைப் பற்றி ஆயிரம் இதழ் தாமரை நிலையினை அடைய முயலாதவர்கள், பாலில் மாசு பற்றினால் அது எவ்வாறு கெட்டு விடுமோ அதுபோல பிரவழிகளை பின் பற்றி நடந்தால் பயன் அடைய மாட்டார்கள். ஒரு கோலை (கம்பை) எடுத்தால் எப்படி பறவைகள் ஓடுவது போல பிற மயக்கம் தரும் வழிமுறைகளை கொண்டு மயங்குகின்றார்களே.
வைச்சு உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வா;
மெய்ச் சுழுன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சி உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே
                              : -- திருமந்திரம் – 476
    நம் மனத்தால் தியானப் பொருளாக உணரப்பட்டது போலவே நாம் பலர் சொல்லி, கேள்விப்பட்ட இறைவன் பலவடிவங்களில் அவை ஒன்றுக்கு ஒன்று இணையாது. நம் உடலை வழி நடத்திச் செல்லும் ஐம்பொறிகள் (ஆணி) நிலை குலைந்து ( அது இறை நாட்டம் இல்லா பிற வழிகளில் ) தளர்ந்தாலும் அவ் இறைவனை தொடர்ந்து உயர் உணர்வால் பின் பற்றினால் அவனை அடைதலும் இயலும்.
தொடர்ந்து எழும் சுற்றம் வினையினும் தீய,
கடந்தது ஓர் ஆவி கழிவதன் முன்னே
உடந்துஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித்
தொடந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே
                              :-- திருமந்திரம் – 502
நமக்கு சுற்றத்தாரின் மேல் வைக்கும் பாசம் ஆனது நமது முன் வினையை விடத் தீமைபயக்கும் இவ்வாறு பாச வாழ்வில் பல காலங்களைக் கடந்து உயிர் பிரிவதற்கு முன்பு பாசத்தை விட்டு இறை உணர்வு என்ற விளக்கை ஏந்தி தொடர்ந்து சாதனை செய்தால் பாசமானது நீங்கிவிடும்.   
சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவானந்தத்து ஒவ்வாத தேறலைச்
சுத்த – அது உண்ணாச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீல்க்காலே
                              :-- திருமந்திரம் – 505
  அன்பினால் உள்ளம் உருகி சமாதியில் சிவத்துடன் ஒத்து உணர்ந்து இறை உணர்வை அனுபவிப்பதே பேரின்பமாகும். அதற்கு முன்னர் சாதாரண நிலையில் நாள் தோறும் இரவும் பகலும் முறையே விழிப்பு நிலையிலும் உறங்கும் நிலையிலும் இருக்கும் போது கீழ்ப்பட்ட நிலையே.
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அர ஆனந்தத் தேறல் பருகார்;
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டும் அடித்தேனே
                              :-- திருமந்திரம் – 511
இரவு பகல் தோன்றாத இடமான துரிய நிலையில் மனத்தைச் செலுத்தி வேறு நினைவில்லாமல் (பராக்குப் பாராமல் ) அந்த இன்பத்தை அனுபவிக்காதார் சிலர் இருப்பார். ஆனால் நான் அந்த இடத்தில் மனத்தைச் இறைவன் நினைவில் ஒன்றி இரவு, பகல் மன வேறுபாடுகள் இன்றி இன்புற்றேன்.
யோகிகள் கால் கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர்; எண்சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவளிந்தோரே
                                    :-- திருமந்திரம் – 515  
     யோகிகள் காற்றை ஒழுங்காக அளவு விதிப்படி மூக்கில் இழுத்தும் வெளியிட்டும் செய்து மனத்தை நெற்றியில் உள்ள ஆக்கினை என்னும் சக்கரத்தில் செலுத்தி அதனால் ஏற்படும் இன்பம் என்னும் போதையை உய்த்துனர்வர். ஆனால் சிலர் அணிமாதி சித்திகாலாகிய சித்து விளையாட்டுகளில் ஆசை கொண்டு இறைவனை அடையும் வழிதனில் இருந்து தவறி எப்படி கள் என்னும் போதைப் பொருளை உண்டவர் மயங்கிக் கிடப்பரோ அது போல உலகியல் ஆசை கொண்டு வழி தவறியவர் ஆவர். ( இயம, நியம அடிப்படை வழிகளை சரியாகக் கடை பிடிப்பவர்கள் அணிமாதி சித்திகளில் மனதை செலுத்தமாட்டர்கள் )
உண்ணீர் அமுதம் உறும் ஊரளைத் திறந்து;
எண்ணீர் குரவின் இணையடித் தாமரை;
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண் – ஆற்றோடே சென்று கால்வழி காணுமே
                              :-- திருமந்திரம் – 516
   இறைவன் அன்பினை எண்ணி அவன் பால் மனத்தை செலுத்தி அங்குள்ள இன்பம் பயக்கும் அமுதம் ஊறும் ஊற்றைத் திறந்து உண்ணுங்கள். அவ்வாறு சென்றால் நமக்கு முத்தி அளிக்கு துரியாதீத சமாதி வழியைக் காட்டும்.
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்நின்ற ஞானம் உணரார்;
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தலிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே.
                              :-- திருமந்திரம் – 518   
     நம்மில் பலர் விரதங்கள் இருந்து தன்னை வருத்திக் கொள்வோரும், தேவர்கள், அசுரர், போன்றவர்களும் உண்மையான அறிவை உணராதவர்கள் இறைவன் என்னும் அமுதத்தில் திளைத்து இருக்குமனுபவத்தை அவன் மேல் அன்பு கொண்டோர் அன்றி பிறரால் அவன் அருளைப் பெற இயலாது.
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவியும்;
தேற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒளிவது மாகமை ஆமே
                        :-- திருமந்திரம் – 530
யோகநெறியில் சாதனை செய்வோரின் உடலில் உள்ள அனாகதச் சக்கரத்தில் குண்டலி சத்தி பொருந்தி நிற்கும். அப்பொழுது அது மனிபூரகத்தையும் ஆக்ஞையையும் தொட்டுக் கொண்டு இருக்கும் அவ்வேளையில் மனம் பல்வேறு எண்ணங்களில் பின்னிக் கொண்டு திரியும் அப்பொழுது சாதகன் பொறுமையுடன் இருந்து யோக நெறியில் வலுவிடாமல் இருக்கவேண்டும். மணிபூரகம் விஷ்ணு நிலையாகும் அது தான் நாபி என்று அழைக்கப்படும் தொப்புள் நிலையைக் குறிப்பதாகும் இந்த நிலையிலும் இதற்கு கீல் உள்ள சுவாதிட்டானம் பிரம்ம நிலையம் ஆண்மை, பெண்மை உறுப்புக்களை குறிக்கும் இடங்களாகும் இவ்விடங்களில் மனம் சஞ்சரித்து செல்லும் போது மிகக் கவனமாக கடந்து செல்லவேண்டும். திரும்பத் திரும்ப இயம நியம நெறிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். இல்லையேல் நாம் யோக வழியில் இருந்து மாறுபட்டு சிற்றின்ப செயல்களில் நம்மை செலுத்திவிடும் இக்காலங்களில் நமது உடலும் அதிகக் கவர்ச்சி நிலை அதிகரிக்கும். இதனால் பெண்கள் நம் உடலின் வனப்பில் இழுக்கப்பட்டு நம்மையும் அறியாது தவறு செய்துவிடும் அதுபோல் சித்து வேலை போன்ற வேளைகளில் இடுபடுத்தி நம்மை உலகவியல் அன்பர்களையும் நாம் ஈர்க்கப்பட்டு பொருளாசையில் செலுத்தி நெறி தவறச் செய்து விடும். நாம் முழுமையான பயனை அடைந்து வெற்றி பெரும் வரையில் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
உரைத்தன வற்கு அரி ஒன்று முடிய
நிரைத்தஇராசி நிறை முறை எண்ணி
பிரச்சதம் எட்டும் பேசிய நந்தி
நிரைத்த இயம நியமம் செய்தானே
                        :-- திருமந்திரம் – 543
இராசி சக்கரத்தில் வரிசையாக என்னி வந்தால் பன்னிரண்டு எண்ணிக்கை வரும் அது போல் நமது மூச்சுக் காற்றையும் ஒரு ஒழுங்கு முறையாகச் செய்து யோகத்தின் அடிப்படையான இயம, நியம என்னும் நெறி வழிகளை வரிசைக் கிரமாக பின்பற்றி யோக வாழ்விற்கு விதிகள் எது விளக்க வேண்டியது எது என்பவற்றை நமக்கு அளித்தான்.
அந்நெறி, இந்நெறி என்னாதே, அட்டாங்கத்
தன்னெறி சென்று சமாதியிலே நின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞனனத்தில் ஏகலாம்
புல்நெறி ஆக்கத்தில் போக்கு இல்லை ஆகுமே
                              :-- திருமந்திரம் – 545

இங்கு பல நெறிகள் என்று செல்லாமல் யோக வழியினைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார். பலநெறி என்றால் என்ன ? இந்திய நாட்டில் பல சமயங்களும் தோன்றி தங்கள் சமயங்கள் தான் உண்மையானது என்று வாதிட்டு வந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மையே. எனவே தான் திருமூலர் தன் வழியை பின் பற்றுமாறு கூறுகிறார்.
    மாந்தனின் வாழ்வியலில் அவன் குமுகாயக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின் ஏற்பட்ட மாறுபாடுகள், சிந்தனைகளில் சமயம் சார்ந்த சிந்தனைகளும் ஒன்றாகும். வேதங்களில் பார்த்தோமானால் இவை விளங்கும் அன்றைய காலக்கட்டத்தில் அவர்கள் அக்கினி, இந்திரன், சோமன் என்ற தெய்வங்களை வழிபட்டும் பிற்காலங்களில் அவர்கள் பிற இணக்கலப்பிற்குப் பின் வழிபாடு தத்துவங்களில் மாறி வந்ததையும் பார்க்கலாம். இதில் அவர்களில் தங்களை நெறிப்படுத்திக் கொண்டோர் சமுதாய தலைவர்களாகவும் சமய நிறுவனர்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு பல மதங்கள் இந்நாட்டில் தோன்றி வளர்ச்சியும், வீழ்ச்சியும் பெற்றன அதில் புத்தம், சமணம், சாக்கியம், சைவம், வைஷ்ணவம், சாக்கதம், கெளமாரம் போன்றவையாகும் இதில் சில மதங்கள் பிராமணிய ( வைதீக ) மதத்திற்கு கடும் எதிர்ப்பைக் காட்டின. அது போல் சித்தர்களும் தங்களுக்கு என்று ஒரு நெறியை கடைப் பிடித்தனர். சரியை, கிரியை, மந்திரம் தந்திரம் என்றும் அரசன் எவ்வழிப் பாட்டினை பின் பற்றினார்களோ அதனையே பெரும் பான்மையினர் ஏற்றுக் கொண்டனர். இதற்காக பலவிதக் கருத்தாக்கங்கள் உண்டாகின. இதில் திருமூலர் ஒரு நெறியை கடைப்பிடிக்கிறார். இவர் விக்ரக ஆராதனை, கோயில் வழிபாடு, சக்கரங்கள் என்று பல வற்றைப் பற்றிக் கூறினாலும் இவை எல்லாம் வற்றையும் விட தனது யோக நெறியே உயர்ந்தது, முக்திக்கு வழி காட்டும் என்று சொல்கிறார். திருமூலர் மற்றும் சித்தர்களின் யோக வழிக்கான இயம, நியமம், ஆசனம், பிரானாயாமாம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் நெறிகளை முன் தொகுதியில் பார்த்தோம். திருமந்திரத்தில் இந்த நெறிகளைக் கடைப் பிடிக்கவும் தங்கள் வழியினை கடைப்பிடிப் பதற்காக இறைவன் பற்றிப் புகழ்ந்தும், உருவ வழிப்பாடு, நம் உடல் இயக்கம் அதில் உள்ள தத்துவங்கள் பற்றியும் வினைகளினால் ஏற்படும் நன்மை தீமைகள் என்று பல செய்திகளைக் கூறி நம் மனதைப் பக்குவப் படுத்துகின்றனர்.
         இச் செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்கும் போது படிக்கும் போது அந்தச் செய்தியினை செயலுக்கு கொண்டுவரவும் ஆசை ஏற்படும் அதன் முடிவை எட்ட தொடர் பயிற்சி வேண்டும். நம் வாழ்வில் பிறந்ததில் இருந்து இன்றுவரை தொடர் அனுபவங்களும், தொடர் பயிற்சியும் இருந்து கொண்டே இருக்கும். இத் தொடர் நிகழ்வுகளின் செயல்களே நம் மூளையில் பதியப்பட்டு பின் நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப் படுகிறது. குழந்தை பிறந்தவுடன் எழுந்து நடப்பதோ பேசுவதோ இல்லை எல்லாம் தொடர் பயிற்சியும் முயற்சியுமே நம்மை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு பயிற்சியையும் நாம் தொடர்ந்து செய்யாமால் மாறி மாறி செய்தால் எதிலும் பயனடைய முடியாது. இது போல் நம் செயலில் ஏற்படும் நன்மை தீமைகளை ஆய்ந்தால் நம் தவறுகளும் சரியானதும் தெரியவரும் அதன்படி நாம் நம்மை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு இன்றி நம் தவறுகளுக்கு காரணம் விதி என்று தலை விதிக் கட்டுப்பாட்டினை எடுத்துக் கொண்டால் நம் முயற்சிகள் தடுக்கப்பட்டு பலனளிக்காது.
         ஒரு செயலினினை செய்யும் போது நமக்கு இது போன்ற சூழ்நிலைகள் முன் ஏற்பட்டு இருந்தாலோ அல்லது வேறு சிலரின் அனுபவங்களைக் கேட்டு இருந்தாலோ நமக்கு மூளையானது அந்தச் செய்தினை எடுத்துக் கூறும் இதனையே புத்தி பட்டறிவு என்று சொலப்படுகிறது. நமது சமய நிறுவனர்களும், ஞானிகளும், சித்தர்களும் ஓர் எல்லை வரையுமே செயல் பட்டுள்ளதை அறியலாம்.
         நாம் ஐம்புலன்களின் வழியாகவே செயல் பட்டு வருகிறோம். இதனை அகம் புறம் என்று இருவகையாக பிரிக்கலாம் புறத்தில் நம் புலன்களின் அறிவுக்கு உட்பட்டு உள்ள கருத்துக்களைக் கொண்டு முடிவு செய்வது. அடுத்தது அகத்தின் உள் முகமாக அறிவை செலுத்தி ஆய்வது. இதையே நம்மை உள் நோக்கி தியானம் செய்யச் சொல்கிறார்கள். சரி இப்போது உள்நோக்கி நாம் தியானம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அந்தப் பயிற்சியில் ஈடுபடும் போது  உணர்வீர்கள் தியானத்தில் உட்க்கார்ந்தவுடன் நமக்கு பலவித சிந்தனைகள் நம் அன்றாட வாழ்வியலில் கண்டது கேட்டது என்று வந்து கொண்டே இருக்கும். அப்படியானால் அதை எவ்வாறு தியானம் என்று சொல்ல முடியும். அகவே அதற்கு ஒரு உபாயம் சொல்லப்படுகிறது. முதலில் நாம் எதைக் குறித்து தியானம் அல்லது சிந்தனை செயப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும் பின் அதைக் குறித்தே மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது அது பற்றிய அறிவு வெளிப்படுகிறது. இதையே நம் சித்தர்கள் நம் சிந்தனை (மனம்) ஒரு முகப்பட சில வழிகளை சொல்லி  உள்ளனர். அதாவது முதலில் நமது உடல் பற்றிய அறிவுகளை சொல்லி இது தலை இது கால் இது கை என்றும் உடல் உறுப்புகளில் நம் அறிவைக் திணிக்கின்றனர். பின் இந்த உடலில் முதுகுத் தண்டுவடம் பற்றியும் நம் மூலையில் பதியப்படுகிறது. அதில் கீழ்பகுதியில் மூலாதாரம் என்று ஒன்று உள்ளது அது நான்கு இதழ்களைக் கொண்டது. இதில் குண்டலினி சக்தி சுருண்டு படுத்து உள்ளது என்றும் அதன் வடிவம்  குணங்களும் நம் மூலையில் ஏற்றப்பட்டு அது குறித்து தியானிக்கப் பழக்கப் படுத்துகிறோம். இதில் நீங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் இதில் பதஞ்சலி யோக நூல்களில் பார்த்தீர்களானால் நான்கு இதழ் நாற்கோணவடிவம் என்றுமட்டுமே சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின் ஏற்பட்ட நூல்களில் அந்த இடங்களுக்கு கணபதி, வாலை என்று தெய்வங்கள் புகுத்தப் பட்டு இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நமக்கு தியானத்திற்கு முன்பே அது பற்றிய கருத்தும் அதற்கான வடிவங்கள் நம் மூளையில் பதியப் பட்டு அதில் நம் சிந்தனையை ஒருமுகப் படுத்துகின்றனர். இதுபோல் சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் என்று ஆறு இடங்கள் குறிப்பிடப் பட்டு அதற்கான வடிவங்கள் அதி தேவதைகள் அவற்றின் பயன்கள் என்று முன் கூட்டியே செய்திகளை நமக்கு மூளையில் பதியப்படுகிறது. இதை நாம் ஒழுங்காக பயிற்சி செய்து வரும் போது நமது மூளைப்பகுதியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள மற்ற விசயங்கள் தடுக்கப்பட்டு ஒரே பொருளின் மீது அல்லது கருத்தின் மீது சிந்தனையை (மனதை) நிறுத்தப் பழக்கப் படுத்தப்படுகிறது. இதற்கு ஓர் உதவியாகவே மூச்சு பயிற்சியும் உதவுகிறது. இந்த பயிற்சியின் போது மூளைக்கு முதலில் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைகிறது. அதன் பின் சுவாசம் கும்பக நிலையிலும் தியான நிலையிலும் சுவாசத்தின் அளவு குறைந்து மூளை ஓர்வித அயர்ச்சி நிலை அடைகிறது. அப்போது மென்மையான தூக்க நிலையை அடைகிறது.
        இந்த நிலையின் ஒரு பரிமாண நிலையே சமாதி நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதில் சித்தர்கள்  உருவநிலையில் சோதி உருவமாக தியானத்தை மாற்றுகின்றனர். பின் அந்த சோதியில் சிந்தனை (மனம்) லயிகப்பட்டு ( ஒரு முகப்பட்டு ) சோதியில் கலப்பதாகவும் அதுவே முக்தி நிலை என்று கருதப் படுகிறது. இதுபோல் ஆழ்ந்த யோக பயிற்சியின் போது பலவித உடல் உபாதைகள் தோன்றும் அது பற்றியும் பின் பார்ப்போம். இப்போது சமாதி நிலையில் நம் உடலின் எவ்வாறு செயல் படுகிறது என்பதையும் பார்ப்போம்.
        நீங்கள் உண்ணாவிரதம் இருப்போரைப் பார்த்து இருப்பிர்கள். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் காலத்தில் முதலில் ஒன்று இரண்டு நாட்கள் அவர்களுக்கு சிரமமாகவும் தளர்ச்சியும் ஏற்படும் பின் அந்த நிலை மாறி பொதுவான பலகீனம் மட்டுமே தென் படும். ஏன்னென்றால் நம் உடலில் ஏற்படும் குளுக்கோஸ் பற்றாக்குறையை மூளை புரிந்து கொண்டு தனக்கு தேவையான குளுக்கோஸ் வெளியில் கிடைக்காததால் இது போன்ற பற்றக் குறை ஏற்படும் போது பயன் படுத்துவதற்காக சேமித்து வைத்து உள்ள கொழுப்பு சத்தை கரைத்து குளுக்கோசாக மாற்றி எடுத்துக் கொள்ளும். இவ்வாறு வெளியில் இருந்து குளுக்கோஸ் கிடைக்கும் வரை நடைபெறும். குளுக்கோஸ் இல்லாமல் இருந்தால் மூளை செயலற்று இறப்பு நிலை அடையும். இந்த நிலையில் நாம் நீரும் அருந்தாதா நிலையில் இருந்தால் நம் உடல் தன் தேவைக்கான நீரை நம் சிறுநீர் பையில் உள்ள சிறுநீரை மீண்டும் சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்கிறது இதனால் சிறுநீர் பையில் அசுத்தங்கள் அதிகரித்து அமிலத் தன்மையும் அதிகரித்து சிறுநீர்ப்பை சிறுநீரகங்கள் செயல் இழக்க ஆரம்பித்து விடும் பின் இருதயம் போன்ற கருவிகளும் செயலிழக்க ஆரம்பித்து மூளைக்கு தேவையான குளுக்கோஸ், ஆக்சிஜன் போன்ற பற்றாக்குறை ஏற்பட்டு இறந்து விடுவர்.
          இது போல் யோகநிலையில் ஏற்கனவே உணவுக்கட்டுப் பாடுகளின் மூலம் உடலி கொழுப்பு குறைவாகவே இருக்கும். நாம் தொடர்ந்து யோகநிலையில் அதாவது நிர்விகல்ப சமாதியில் இருந்தால் நமது உடல் இயக்கங்கள் அனைத்தும் நின்று விடும். இந்த நிலையில் நம் மனமானது சகஸ்ராரம் எனப்படும் ஆயிரம் இதழ் தாமரை ஸ்தானத்தில் ஒன்றி இருக்கும் இந்நிலையில் இயக்கம் அனைத்து நின்றுவிடுவதால் இது முக்தி நிலை அடைந்ததாக கருதப்படும் இந்த ஒடுக்க நிலையில் மனமானது எந்த விதக் கோரிக்கைகளும், சங்கற்ப விகற்பங்கள் அற்று இருப்பதால் அதற்கு மீண்டும் பிறப்பில்லை என்று சொலப்படும். இந்த நிலையில் ஐம்புலன்களும் செயலிழந்து இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். சமாதி நிலையில் பழகும் போது நாம் எண்ணங்கள் அற்றும் ஜோதி உருவமோ அல்லாது அந்த உருவமும் அற்ற நிலையிலோ இருப்போம். இவையாவும் நாம் மனக்கற்பனையிலேயே செயல் படுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் நான் இந்த தொகுதியில் முதலில் சொல்லி உள்ள நந்திச்வரரின் பாடலை மீண்டும் கவனியுங்கள் இது புரியும் விவேகானந்தரின் ராஜயோக விளக்க நிலையில் பார்த்தல் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார் ஆதாரச் சக்கரங்கள் என்பதை மனதில் கற்பனையாக உருவகிக்க வேண்டும் என்பது பற்றி இது பற்றி அடுத்துக் கூறுகிறேன். நம் உடல் இயக்கத்திற்கும் நாம் முக்தி நிலை அடைவதற்கும் உணவு எவ்வளவு முக்கியம் என்பதை புத்தரின் கருத்தைப் பார்ப்போம்.
புத்தர் “ வத்ஸ “ அரசனான உதயனரின்  மகனான போதி இராச குமாரனிடம் கூறுகிறார் :--
     “ அரசகுமார ! ஞானம் பெற்ற புத்தனாவதற்கு முன்பு சுகத்தில் சுகமில்லை, வேதனையிலும் சுகமிருக்கிறது என்றெல்லாம் எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது. ஆகவே நான் இளவயதிலேயே அழகான வாலிபனாக இருந்தபோதே பெற்றோர்களைக் கலங்க விட்டு வீட்டைத் துறந்து சந்நியாசியாகி விட்டேன். முதலில் நான் ஆளார காலாம் என்னும் அறிவாளியிடம் சென்றேன். அவர் யோகத்தைப் பற்றிய சில விதிகளைக் தெரிவித்தார். ( இதில் இருந்து புத்தர் அக் காலகட்டத்தில் உள்ள யோக வழிகளை அறிந்து கொண்டார் என்று அறிந்து கொள்ளலாம். பதஞ்சலிக்கு முன்பே யோக முறைகள் இருந்ததையும் அதன் பரிணாம மாற்றத்தையே புத்தருக்கு பின் வந்த பதஞ்சலி ( கி.பி. 400  ) நெறிப் படுத்தி வழங்கி இருக்க வேண்டும் என்பதையும் அறியலாம்) ஆனாலும் இதனால் எனக்கு ஐயங்கள் தீரவில்லை அங்கிருந்து நான் “ உத்திர ராம புத்திரர் “ என்ற அறிஞரிடம் சென்றேன். அங்கும் சில யோக வழிகளைக் கற்றறிந்தாலும் மன நிறைவு ஏற்படவில்லை பின்னர் போத கயாவுக்கு அருகில் சுமார் ஆறு வருடங்கள் யோகமும் உன்னாவிரதமாகவும் ( உண்ணாவிரதம் என்பது சில விதிகளுக் உட்பட்டு குறைந்த அளவு உணவு சாப்பிடுவது ) கடின தவம் புரிந்தேன்.
       “ என்னுடைய உடல் பலவீனத்தின் எல்லையையே அடைந்து விட்டது 80 வயதான கிழவர்களின் தள்ளாத உடலைப் போல் என் உடல் உறுப்புக்கள் தளர்ந்து போய்விட்டன. ஒட்டகத்தின் காலைப் போல் என்தொடை ஆகி விட்டது ( போதிய உணவு இல்லாத காரணத்தால் உடலிலுள்ள கொழுப்புக்கள் கரைந்து மெலிந்து விட்டன ) கிளிகளின் வரிசையைப் போல் ஏன் முதுகுத்தண்டு மாறிவிட்டது. ஆழமான கிணற்றுக்குள் நட்சத்திரம் தென்படுவதைப் போல் என் கண்கள் குழிவிழுந்து தோற்றம் அளித்துக் கொண்டு இருந்தன. பிஞ்சிலே பறித்த சுரைக்காய் காற்றிலும் வெய்யிலிலும் பட்டு வாடி வதங்கி விடுவதைப் போல என்தலை உடல் சருமம் வாடி விட்டது. அந்த உண்ணா நோன்பால் என்னுடைய முதுகு எலும்பு, கால் எலும்பு, கை எலும்பு இவற்றில் உள்ள சதைகள் கரைந்து விட்டன. நான் மலம் சிறுநீர் கழிக்க எழுந்து நின்றால் கண்கள் சுற்றி அப்படியே கீழே விழுந்து விடுவேன். நான் என் உடலை என் கையால் மெல்ல வருடினால் உடலில் இருந்து மயிர்கள் உதிர்ந்தன. என் வெண்மையான உடல் வாடி வதங்கி நிறமிழந்து கருத்துவிட்டது.”
        “ ஆனால் நான் இந்த தவத்தால் அந்த மகத்தான ஞானத்தை (அறிவை) அடைய முடியவில்லை. அப்பொழுது ஞானம் பெறுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தித்தேன். உடன் எனக்கு சிந்தனை பிறந்தது ( நினைவில் வந்தது ) நான் என் தந்தையின் வயதிலிருந்தே கொய்யச் செடியின் குளிர் நிழலில் அமர்ந்து முதன் முதலாக தியானத்தில் சஞ்சரித்தது பற்றி. இது தான் ஞானத்தை அடையும் வழி போலும் ! என்று. ஆனால் என்னுடைய பலவீனமான உடலால் அந்த தியான சுகம் அடைவது கடினமாகத் தோன்றியது அதனால் நான் திட உணவு உட்க்  கொள்ள ஆரம்பித்தேன். (இதில் இருந்து குறைந்த அளவு திரவ உணவு சாப்பிட்டு வந்து இருக்கவேண்டும்.) அச்சமயம் என்னுடன் ஐந்து சன்யாசிகள் கூட இருந்து வந்தனர். நான் திட உணவு சாப்பிட ஆரம்பித்ததும் அவர்கள் என்னை விட்டுப் போய்விட்டனர்.
பின் புத்தர் வேறு ஒரு இடத்தில் இருக்கும் போது கூறுகிறார் :--
     “ நான் ஓரிடத்தில் அழகிய சோலையின் நடுவே நிரஞ்சனா நதி பிரவாகம் எடுத்து ஓடுவதைக் கண்டேன். அதன் படித்துறையில் எழில் நிறைந்திருந்தது. தியானத்திற்கு இது சிறந்த இடமென்று கருதி நான் அங்கேயே அமர்ந்து விட்டேன். பிறப்பின் கெட்ட பயனை உணர்ந்து மிகை செயல்களையும் தவிர்த்து மத்திம வழியைக் கண்டு கொண்டேன். இந்த மத்திய வழி பார்வையளிப்பது, ஞானம் அளிப்பதும், அமைதி அளிப்பதும் ஆகும் அட்டாங்க மார்க்க மாகும். அது எட்டு விதமான  கருத்துக்களை கொண்டதாக கண்டு பிடித்தார். அதாவது சரியான பார்வை – சரியான சங்கர்ப்பம் – சரியான சொல் – சரியான செயல் – சரியான வாழும் வழி – சரியான முயற்சி – சரியான சிந்தனை – சரியான மோன நிலை. என்று தன் சிந்தனையை வெளிப்படுத்தினார். இனி இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம் யோகத்திற்கு உணவு மற்றும் சூழ் நிலைகளும் சரியாக இருந்தால் உடலும் மனமும் வேலை செய்யும் என்பதை புத்தரின் மேற்கண்ட நிலையில் இருந்து அறிந்தோம் இதில் சித்தர்களின் கூற்றைப் பார்ப்போம்.
ஆறவே வறுமை வந்து மூண்டதென்றால்
அளிம்பான மனக் குரங்கால் ஞானம் போச்சு
தேறவே வேதாந்த சித்தாந்தம் இரண்டும்
செனத்திலே சென்றுவிடும் சேரப் போயாம்
பாரவே பசியதனால் மனம் பேயாகிப்
பாக்கியங்கள் அற்றதினால் கல்லுப்போல
வாரவே வாசியோடு சமாதி நிஷ்டை
வறுமையாற் சகலமுமே மண்ணாய்ப் போம்
                              :-- உரோமரிஷி பரிபாஷை – 300  
இன்னும் ஒரு ஞானியின் பாடலையும் பார்ப்போம்:---
பூணும் பணிக்கல்ல பொண்ணுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்க்கையர்க்கல்ல நற்காட்சிக்கல்ல
சேணும் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை வழிகாட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயரம் சற்றல்லவே
                                    :-- பட்டினத்தார் பாடல்
     நமது ஐம் புலன்களுக்கு உட்பட்டு கடவுள் இருப்பதாக யாரும் இதுவரை காட்டியது இல்லை இது பற்றி கடவுள் பற்றிய கூற்றை சொல்வோர் வெளியில் தெரியாத உணரப்படாத கடவுளை உள் முகமாக நம் உடலில் பார்க்கலாம் என்பதாக கூறுகின்றனர். இவ்வகையைச் சேர்ந்தவர்களே சித்தர்களும் ஆவர். இந்த உள்முக தேடலுக்கான வழிகள் தான் யோகம் என்பதாகும். யோகம் என்றால் சேர்க்கை எனப்படும். இந்த யோகம் பற்றி சொல்லியுள்ளோம். நம் முதுகுப் பகுதியில் உள்ள தண்டு வட்டப் பகுதி யோகத்திற்கான முக்கியமான வழித்தடமாகும். இத் தண்டு வடம் என்பது ஒரே எழும்பினால் ஆனது அல்ல. இது முப்பத்து மூன்று தனித்தனி எலும்புகளின் தொகுப்பாகும் இதன் நடுப்பாகத்தில் நாம் எண்ணால் எழுதும் 8 ஐ குறுக்கு வாட்டமாக எழுதினால் எப்படி இருக்குமோ அது போல் இரு துவாரங்களும் நடுவில் ஒரு மெல்லிய துவாரத்தின் வழியாக சுஷும்னா நாடி என்னும் நரம்பு செல்லுகிறது இது மூலாதாரத்தில் இருந்து நம் நடு மூளையின் மையப் பகுதிவரை செல்லுகிறது மற்ற இரண்டு பெரிய துவாரங்களின் வழியாக நரம்புத் தொகுப்பு கற்றையாக மூலையின் அடிப் பாகத்தில் இருந்து கீழே இறங்குகிறது. இது நமது உடலின் இயக்கத்திற்கான அனைத்து செய்திகளையும் மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் தொடர்பும் செய்திப் போக்கு வரத்துக்குமான சாதனமாக விளங்குகிறது. இது மிக முக்கியமான நரம்பு கற்றையாக இருப்பதால் தண்டுவட எலும்புக் கோர்வையின் துவாரத்தில் மிகப் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது இந்த நரம்புகளும், மூளையும் ஒருவித நீரால் சுற்றி மிதக்க வைக்கப் பட்டு இருக்கிறது. இது முப்பத்தி ஒரு ஜோடி நரம்புகளாகும் ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு நரம்புகளின் தொகுப்பாகும். இதில் எட்டு ஜோடி நரம்புகள் தொண்டை, மார்பு, கைகளை பராமரித்துக் கொள்கிறது. உடலின் நடுபாகத்தை பனிரண்டு ஜோடிகளும், கால்களுக்கு ஐந்து ஜோடிகளும், பாதங்களுக்கும் ஐந்து ஜோடிகளுமாக, உடல் இயக்கத்திற்கான வேலைகளை செய்கிறது இது அல்லாமால் 12  ஜோடி நரம்புகள் (24)   நேரடித் தொடர்பு உடையது. இதைக் க்ரேனியல் நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளின் வழியாக மூலையில் இருந்து  உடல் பாகங்களுக்கு செய்திகள் கொண்டு வருவதும் உடலிலிருந்து மூளைக்கு செய்திகளை கொண்டு செல்லுகிறது.
       இந்த நடுப்பகுதியி உள்ள சுசும்னா நாடியை தூண்டி அதன் வழியாக யோகத்தின் மூலமாக உணர்வுகளை கடத்தி சகஸ்ராரம் என்னும் பகுதியில் உள்ள பகுதிக்கு சிந்தனையை படிப்படியாக கீழிருந்து மேலாக கொண்டு செல்லப் படுகிறது. இந்தநிலையில் யோகாவில் குறிப்பிடும் ஒவ்வொரு ஆதாரங்களின் கற்பனை நிலைகளில் மனதை நிறுத்தும் போது அங்கு அதிகப் படியான இரத்தம் செலுத்தப் படுகிறது. இந்த இரத்தம் அதிக நேரம் அங்கு தங்கு வதால் அங்கு ஏற்பட்டு தடையால் உஷ்ணம் ஏற்படுகிறது. ( நம் எண்ணம் செல்லும் இடங்களில் இரத்த சிறிது அதிகம் கொண்டு செல்லப்படும். உதாரணமாக உடலில் காம உணர்வு ஏற்பட்ட உடன் ஆண் குறிக்கு அதிக இரத்தம் கொண்டு செல்லப்பட்டு அது விரைப்புத்தன்மை ஏற்படும் ) இவ்வாறு ஒவ்வாரு ஆதாரங்களிலும் மனம் லயித்து ( ஒரு முகப்பட்டு ) இருக்கும் போது அவ்விடங்களில் உஷ்ணம் ஏற்படும். நீங்கள் இந்தத் தொகுதியின் கற்பம் பகுதியில் அகத்தில் பார்த்தால் யோகத்தின் ஒரு வழி முறை சொல்ல படும் அதாவது நமது உள் நாக்கு என்று சொல்லப்படும் பகுதிக்கு அருகில் நாசியில் இருந்து வரும் இரண்டு துவாரம் இருக்கும் இவ்விடைப் பட்ட பகுதிக்கு மேல் நம் மனத்தை செலுத்தும் போது.அங்கு அதிகம் உஷ்ணம் ஏற்பட்டு புண்ணாகி இரத்தம் ஒழுக ஆரம்பிக்கும். இதையே அமுதம் என்று சொலப்படும். இதற்கு மேல் உள்ளபகுதி தான் உச்சிப்பகுதி எனப்படு இது குழந்தை பிறந்த காலத்தில் மண்டை ஓடு மூடப்படாமல் ஒரு ரூபாய் காசளவு ஓட்டை இருக்கும் இதன் மேல் தோல் மூடியிருக்கும் இதை நம் பெரியவர்கள் இன்னும் உச்சிக்குழி மூடவில்லை என்பர் இது பின் சில மாதங்களில் மண்டை ஓடு நெருங்கி மூடிவிடும். இதையே சித்தர்கள் பாடலில் பிறந்த போது திறந்ததப்பா பின் திறப்பது இல்லை என்று குறிப்பிட்டுகின்றனர் இதை மீண்டு திறந்து அதன் வழியாக உயிர் பிறிவதையே முக்தி எனப்படுகிறது.
          நாம் இப்போது ஒரு காரை பார்ப்போம் அதன் இயக்கத்திற்கு ஒரு இஞ்சின் ,நான்கு சக்கரங்கள், பிரேக், எக்சிலேட்டார் பெட்ரோல் டேங் என்று பல பாகங்கள் உள்ளதை அறிவோம். இதில் இன்ஜினை இயக்கும் சாவியை போட்டு திருப்பி லேசாக ஆக்சிலேட்டரையும் கிளச்சையும் மிதிக்கும்போது இஞ்சின் செயல் படத்துவங்குறது இதில் துவக்கத்தில் ஒரு பாட்டரி எனப்படும் மின் சாதனம் துவக்கநிலையில் மின்சாரத்தை கொடுத்து இன்ஜினை இயங்கச் செய்கிறது. நாம் ஆக்சிலேட்டரை அமுக்கியவுடன் இன்சினுக்கு தேவையான பெட்ரோல் செலுத்தப் பட்டு தொடர் இயக்கம் ஆரம்பிக்கப் படுகிறது. இந்த இயக்கத்திற்கு தொடக்கத்தில் நாம் சாவியை போட்டு திருகியவுடன் பாட்டரி மின் சாரம் பாய்ந்து உதவுகிறது. இதில் மின்சாரம், பெட்ரோல் முக்கியமாக உள்ளது இதில் பெட்ரோல் மட்டும் இருந்தால் மட்டும் இருந்து மின்சாரம் இல்லாவிட்டால் இஞ்சின் இயங்காது அது போல் மின்சாரம் இருந்து பெட்ரோல் இல்லாவிட்டாலும் இயங்காது. இதில் எது இயக்கத்திற்கு காரணமாகிறது. பெட்ரோலா அல்லது மின்சாரமா. ( கார் நம் உடலாக கருதிக் கொள்ளுங்கள் ) இதில் எது இல்லாவிட்டாலும் இயங்காது இரண்டுமே தேவை அதுபோல் நம் உடல் இயக்கத்திற்கு இரத்தம், காற்று (பிராணவாயு) அன்னரசம் அவசியம் தேவை. இதில் ஆன்மா நம் உடலில் இருப்பதாகவும் அதுவே உயிராகவும் சிவமாகவும் காரனான ஆகவும் உள்ளதாக சொல்லப் படுகிறது. அப்படியானால் அன்னரசமா, காற்றா உஷ்ணமா எது ஆன்மா வாகச் செயல் படுகிறது. கருத்தரிப்பதற்கு நாதம், விந்தணு இரண்டும் முக்கிய காரண மாக செயல் படுகிறது இதில் ஒவ்வொன்றும் இயக்கத்தில் உள்ள ஒருவகை செல்கள். இரண்டிலும் இயக்கம் உள்ளது இதில் நாதத்தின் இயக்கமும் விந்தின்  இயக்கமும் ஒன்றாகிவிடும் போது எது கருவுக்கு இயக்கமாக உள்ளது. இவை எல்லாம் ஒரு கூட்டு செயலாக்கமே தவிர தனியாக ஆன்மா என்று இல்லை. இது கற்பனைக் கருத்தியலே.
         இது போல் நம் உடலுக்கு உணவு முக்கியமானது என்பதும் இது பற்றி தைத்திரிய உபநிஷத்து கூறுவதைப் பார்ப்போம் பிரமத்தை அறிந்தவன் பரம நிலை அடைகிறான். பிரம்மம், சத்தியம், ஞானம், ஆனந்தம் எனப்படும். இருதயமாகிய குகையில் பரம ஆகாசத்தில் இருக்கும் இதை ( பிரமத்தை) எவன் அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கும் பிரமத்துடன் கூடி எல்லா ஆசைகளையும் அனுபவிக்கின்றான். அதே பிரம்மமாகின்ற இந்த ஆத்மாவிடம் இருந்து ஆகாசம் உண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து, அக்கினி, அக்கினியிலிருந்து நீர், நீரில் இருந்து, மண் (பிருதிவி) மண்ணில் இருந்து செடி, கொடிகள், செடி கொடிகளில் இருந்து அன்னம், அன்னத்தில் இருந்து மனிதன் தோன்றினான். அவ்வாறு தோன்றிய இம் மனிதன் அன்னரசமே உருவாகியவன் அவனுக்கு இதுவே தலை, இது வலது(இறகு) பக்கம் இது நடுவுடல் இது இடது பக்கம் (இறகு) அடிபாகாம் வால் என்று அன்னப் பறவையாக உருவகப் படுத்திக் கூறப்பட்டுள்ளது. அது பற்றிய பின் வரு மந்திரமாவது.
        பூமியில் உள்ள மக்கள் எல்லாம் அன்னத்திலிருந்தே உண்டாகின்றனர். பின் அன்னாத்தாலேயே உயிர் வாழ்கின்றனர். அன்னம் உண்டாய பொருள்களுக்கு எல்லாம் முனுண்டானது. ஆகையால் அனைவருக்கும் அது ( பசியை போக்குகிறது) மருந்து. (ஒளசதம்) எனப்படும். எவர்கள் அன்னத்தை பிரம்மம் என உபாசிக்கிறார்களோ அவர்கள் எல்லா அன்னத்தையும் அடைகிறார்கள். அன்னமன்றோ உண்டானதற்கு எல்லாம் உண்டாகி ஸ்வெளஷதம் ( முழுமையான மருந்து ) எனப்படுவது. அன்னத்தில் இருந்து பிராணிகள் உண்டாகின்றன அந்தப் பிராணிகள் அந்த அன்னத்தால் வளர்கின்றன. உன்னப்படுகிறதும் பிராணிகளை உண்கிறது ஆகையால் அது அன்னம் என்ற காரணப் பெயரால் குறிக்கப்படுகிறது. இதுவரை இந்த அன்னராச மயத்தினும் வேறானது. இதனுள்ளிருக்கும் பிராணமய ஆத்மா ஆனால் இது ( அன்னமய உடல் ) பூரணமாய் இருக்கிறது. அதுவும் புருசனைப் போலவே உருவமுடையது. என்று கூறிச் செல்கிறது. இது தைத்திரிய உபநிஷத்தின் முதல்  பிரசன்னத்தில் சொல்லப்பட்டுள்ளது.
           இது மூன்றாவது பிரசன்னத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பிருகு முனிவர் தன் தகப்பனரான வருணனிடம் பிரம்மம் பற்றிய உபதேசத்தில் வருவது
           அன்னம், பிராணன், கண், காற்று, மனம் வாக்கு இவை எல்லாம் பிரமத்தை அறியும் வழியாகும். உண்டாக்கப்பட்ட பிராணிகள் எதனிடமிருந்து உண்டாயினவோ, முடிவுறும் போது எதனிடம் புகுந்து மறைகின்றனவோ அதை ஆராய்ந்தது அறிய முயல்வாய் அதுவே பிரமமாம் இக்கருத்தில் மனத்தை நிறுத்தி நோக்கி தவம் இருக்கச் சொன்னார். அதன் படி ஆராய்ந்த பிருகு முனிவர் அன்னம் பிரம்மம் என்று ஆய்ந்தார். அன்னத்தில் இருந்தன்றோ இப்பிராணிகள் எல்லாம் உண்டாகின்றன. உண்டானது அன்னத்தாலேயே உயிர்வாழ்கின்றன. முடிவுறும் போது அன்னத்தாலேயே மறைகின்றனே. இங்கனம் அறிந்த பின் மீண்டும் வருணனிடம் சென்று அன்னம் உற்பத்தியும் அழிவும் உடையதால் அது எவ்வாறு பிரமமாகும் என்று கேட்க மீண்டும் அதே முறையில் தவம் இயற்றி அறியச் சொன்னார். என்று கூறிச் செல்கிறது. மற்றும் அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம் எது உன்னப் படுகிறதோ அது அன்னம், எது உண்கிறதோ அது அன்னாதம் என்னப்படுகிறது. பிரானான் அன்னமாகவும் உடல் அன்னாதமும் ஆகிறது. பிரானணிடம் உடல் ஒடுங்கி  நிற்கும். உடலில் பிரானான் ஒடுங்கி நிற்கும். இவ்வாறு அன்னாம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கிறது. எவன் இவ்வாறு அன்னம் அன்னத்தில் நிலை பெறுவதை அறிகிறானோ அவன் நிலையான பதவியை எய்துகிறான். அன்னத்தை எறியாதே அது விரதம், நீரும், நெருப்பும், அன்னமும், அன்னாதமும் ஆகின்றன. நீரில் நெருப்பு ஒடுங்கி நிற்கும் நெருப்பில் நீர் ஒடுங்கி நிற்கும். அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும் அது விரதம் பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும் ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்.
       இவ்வாறு ஆன்மா என்பதற்கு ஆரம்ப நிலையில் வெவ்வேறு பொருள்களும் கருத்துக்களும் கொண்டு இருந்தனர். பின்னர் படிப்படியாக மாற்றங்கள் அடைந்து இன்றைய நிலையில் ஆன்மா என்பது தனித்துவம் உடையது அது தன்  வினைகளுக்கு தக்கபடி உயர்ந்த தாழ்ந்த பிறப்புகளை அடைகிறது என்றும் உருவ வழிபாடு செய்வதாலேயே உயர்நிலையை அடைய முடியும் அல்லது இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் இறைவனைப் பற்றியும் இறப்பிற்குப் பின் வாழ்வியல் என்பதைப் பற்றியும் வேதகாலத்தில் இருந்து இன்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் பிருந்து மனிதனின் கருத்து மாற்றம் ஏற்பட்டு விட்டது. இன்றைய வாழ்வியல் சூழ்நிலை புதிய கண்டு பிடிப்புக்கள் கல்வியறிவு பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டது. அந்நாளில் மாந்தனுக்கு தேவைகள் குறைவாகவும் பல நிகழ்வுகளுக்கு சரியான காரணங்களும் தெரியாத நிலையிருந்தது. இன்றைய நிலையில் போகிற போக்கில் தெய்வங்களுக்கு சலாம் செய்து விட்டுச் செல்லும் சூழ்நிலையில் ஆன்மீகம் உள்ளது. சில வறட்டு பழமை வாதிகளின் முரட்டு பிடிவாதமும் தங்களின் ஆதிக்க நிலை மாறிவிடக் கூடாது என்று அவர்களின் அவலக் கூக்குரலே இன்று சில பத்திரிகைகளிலும் டிவி போன்றவற்றிலும் இந்தக் கோவிலுக்கு போனால் தலை வலி  தீரும் அந்தக் கோவிலுக்கு போனால் அது நடக்கும் என்றும் மக்களிடம் புராணங்களையும் கூறி தங்கள் கொள்கைகளை நிலைப் படுத்த  முயல்கின்றனர். ஆனால் இந்த பழமை வாதிகளின் வேதாந்தங்களும் தத்துவங்களும், இன்று வாழும் யோகக்கலை வளமுடன் வாழ, அத்தனைக்கும் ஆசைப்படு என்று பயிற்சி வகுப்புகள் கொடுத்து பணம் சம்பாதிக்கும் கலையாக மாறிவிட்டது. இன்றைய நிலையில் அவர்களின் பொன், பொருள், ஆசையை துறந்து கடவுள் தேடல் என்பது எல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் இல்லை அவன் நிகழ்கால வாழ்வியலை நிறைவு செய்யவே போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலையில் கடவுளை சிந்திக்க மாந்தனுக்கு நேரம் இல்லை.
           இன்றைய அறிவு வளர்ச்சி பல புதிய கண்டுபிடிப்புக்களையும் நம் முன் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. உயிரியலில் மனிதனின் மூளையை மூன்று பாகங்களாக பிரிகின்றனர். இது முன்மூளை, பின்மூளை, நடுமூளை என்றும் நமது மூளை பார்வைக்கு ஒரு முட்டைக் கோஸ் போல் மடிப்பு மடிப்பாக இதழ் இதழ்களாக உள்ளது. இதில் தான் மனித உடலின் செயல் அனைத்தும் இடம் பெறுகிறது. இந்தப் பகுதியின் எந்த ஒரு பகுதியாவது செயல் இழந்தாலும் மனித உடலின் செயல் பாட்டில் நடத்தல், படித்தல், பார்த்தல், தூக்கம், உணர்வு என்று அந்தப் பகுதிக்குரிய செயல் பாதிக்கப் படுகிறது. அது போல் அந்தப் பகுதி தூண்டப்பட்டால் அப்பகுதியின் செயல் அதிகரிக்கிறது என்றும் பல செய்திகள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. மனிதனின் தோற்றம் குணம் இவற்றிக்கான காரணங்கள், மரபணுக்கள் மன நலக் குறைபாடுகள் அதனை நீக்கும் வழி என்றும் பல கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன. இது போல் வெவ்வேறு துறைகளிலும் அன்றாடம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பற்றி எல்லாம் விவரிப்பது நமது நோக்கம் அல்ல.
         நாம் யோக நிலையில் செயல் படும் பாகங்கள் அல்லது பாதிக்கப்படும் பாகங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நம் உடலில் சில சுரப்பு நீர்கள் உண்டாகின்றன. அவை பலவிதங்களில் நம் உடலில் இரசாயன மாற்றங்களை செய்கின்றது. இவற்றில் சில நாளமில்லச் சுரபிகள் ஆகும். இவை நேரடியாக தன்  உற்பத்தியை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. மூளையின் உள் நடுப்பகுதியில் தலாமஸ், ஹைப்போதலாமஸ் என்ற பாகங்கள் உள்ளன அதுபோல் அங்கு பிட்யுட்டரின், பினியல் என்ற சுரபிகள் உள்ளன. இந்த தலாமஸ், ஹைப்போதலாமஸ் போன்ற பாகங்களுக்கு நம் ஐம்புலன்களில் இருந்து வரும் செய்திகள் சேகரிக்கப்பட்டு தேவையான பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு கண், காது, மூக்கு, என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் புலன்களில் இருந்து வரும் செய்திகள் அலசப்பட்டு கார்ட்டெக்ஸ் எனப்படும் பகுதிக்கு அனுப்பப்படுகிறது இந்தக் கார்ட்டெக்ஸ் என்னும் அமைப்பானது நம் மூளையில் மேற்புறம் சுற்றி போர்வை போல் அமைந்துள்ள பகுதியாகும் இங்கு கோடிக்கணக்கான நரம்பு செல்கள் பின்னிப் பிணைந்து உள்ளன. நம் சிந்தனை பற்றிய எல்லா செயல்களும் இப்பகுதியில் தான் நடை பெறுகிறது. வலது பக்க செயல்கள் இடது பக்க மூளையிலும் இடது பக்க செயல்கள் வலது பக்க மூளைக்கும் மாறிச் சென்று செயல் புரிகின்றன. இது போல் நடுப்பகுதியில் உள்ள ஹைப்போதலாமஸ் என்னும் பகுதியில் நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, இரத்த அழுத்தம், செக்ஸ், பயம் தூக்கம் என்று பல முக்கியப் பணிகள் அனைத்தையும் கட்டுப் படுத்துகின்றன. ஒருவிதமாக நமது யோகநிலையில் நம் சகஸ்ராரத்தில் இந்த மையப் பகுதியில் தான் நம் சிந்தனை ஓட்டத்தை ( மனதை ) நிறுத்திச் தியானிக்க பயிற்சி செய்கிறோம். இந்தப் பயிற்சியின் போது இந்தப் பகுதிகள் தூண்டப் பட்டு செயல் புரிகிறது.  
        இதில் சித்தர்களின் கருத்தைப் பார்ப்போம்:--
உள்ளத்துக்கு உள்ளே உணர வேண்டும்
உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்
வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
கண்ணுக்கு மூக்குக்கு மேற்கான நின்று
தெற்று பரஞ்சோதி தன்னைத் தேடிச்
சீர்பாதங் கண்டோம் என்றாடாய் பாம்பே
                              :-- பாம்பாட்டி சித்தர் – 115 
நடலித்த நாவுக்கு நால் விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடிலத் தலைவனைத் தாம் அறிந்தாரே
                              :-- திருமந்திரம் – 609
நான் மேற்ச சொல்லியுள்ளபடி நம் நாக்கிற்கு நான்கு விரல் கணம் மேலே தொண்டைக்கு இரண்டு விரல் கணம் உள்ளே அண்ணாக்கு துவாரத்துக்கு மேலே மனதைச் செலுத்த வல்லார்கள் இறைவனை அறிந்தவர்கள் ஆகலாம். இதையே பாம்பாட்டிச் சித்தர் பாடலில் சோதியாக காணலாம் என்று கூறுகின்றனர்.
ஆயிரத் தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டமெல்லாம் நிறைந்த அற்புத சித்தன்
காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன்
கண்ணுள் ஒளியானான் என்றாடாய் பாம்பே
                                    :-- பாம்பாட்டிச் சித்தர் – 103 
நம் மூளையில் சிந்தனையின் வாயிலாக அமர்ந்த இறைவன், இந்தப் பரந்த அண்டமெல்லாம் எங்கும் நிறைந்து உள்ள இறைவன் நம் உடலில் தனக்கு என்று தனி உருவம் இல்லாமல் அருவமாக இருக்கும் காரண மாகிய இறைவன் கண்ணுக்குள் ஒளியாக காட்சி அளித்தான் என்று ஆடாய் பாம்பே என்று கூறுகிறார். இவை எல்லாம் மனிதனின் சிந்தனைக் கருத்தோட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மூளையின் மையப்பகுதியான் கட்டுப்பாட்டுப் பகுதியில் செலுத்தும் போது மீண்டு மீண்டும் ஒரே விதமான சிந்தனைகள் பதிவு செய்யப்படுகிறது. அவற்றின் வெளிப்பாடே இறைவன் காட்சியாக தோற்றம் அளிப்பது. நமது உணர்ச்சிகள் ஞாபக சக்தி, கோபம், இன்பாம் போன்ற ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் தனித்தனிப் பகுதிகள் செயல் படுவதாக உயிரியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். 1953 – ஆம் ஆண்டு கனடாவில் ஒரு பரிசோதனை நடத்தினார்கள். ஒரு எலியின் ஹைப்போதலாமஸ் பகுதியில் ஒரு மைக்குரோ ஊசி ஒன்றை குத்தி அதில் மின்சாரத்தை செலுத்தியவுடன் அந்த எலி சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது. இதைக் கண்ட விஞ்ஞானிகள் ஒரு மின்சார பொறி ஒன்றை செய்து அதில் ஒரு பொத்தானை அமைத்து அதை அமுக்கியவுடன் எலிக்கு மின்சாரம் பாயுமாறு செய்யப்பட்டது இதை அறிந்து கொண்ட எலியானது தொடர்ந்து அந்த இன்பத்தை விரும்பி அந்தப் பட்டனை அமுத்தி அமுத்தி இன்பத்தில் திளைத்து இறந்து போனது. இந்த நிகழ்வுகளுக்கு சில சுரப்பு நீர்களும் காரணமாகிறது. நாம் விரும்பிய உணவைப் பார்த்தவுடன் வாயில் உமிழ் சுரப்பதை நாம் அறிவோம். இது போல் நம் மன உணர்வுகள் செல்லும் இடங்களில் அந்தப் பகுதி தூண்டப் படுவதால் சில நிகழ்வுகள் நடை பெறுகிறது. அதற்கு சில சுரப்பு நீர்கள் காரணமாகிறது. நாம் காப்பி கஞ்சா, அபின், ஆல்ஹகால்  போன்ற போதைப் பொருள்கள் சாப்பிடும் போதும் இதே நிகழ்வுகள் தான் நிகழ்கிறது. கோபம், சந்தோசம், இன்பம், துன்பம், ஆண்மை பெண்மை உணர்வுகள் தூண்டப்படுவதற்கு சில அசிட்டில் கோலன், செரோடினின், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்றவைகள் என்னத்துக்குத் தகுந்தாற்போல் கூடுதல் குறைவாக சுரக்கப்படுகிறது. இவ்வாறு பல இரசாயனச் செயல்கள் நடை பெறுகிறது.
          இது போல் ஒரு எலியின் ஹைப்போதலாமஸ்ஸின் முன் பகுதி ஒரு மைக்ரோ ஊசி செலுத்தப்பட்டு மின்சாரம் பாய்ச்சியவுடன் அதற்கு உடலுறவு எண்ணம் தூண்டப்பட்டு தன் சுக்கிலத்தை வெளியேற்றி விட்டது. இது போல் மனிதருக்கும் தலை சருமம், கண்கள், காது, வாய் உதடு, நாக்கு, கழுத்து தோள்ப்பட்டை, அக்குள், முலைக் காம்பு, முலை, இடுப்பு, தொப்புள், அடிவயிறு, கைகள், நடு முதுகு, தொடைகள்,, பாதங்கள் ஆண் பெண் உறுப்புகள் இவைகளைத் தொட்டால் அல்லது வருடினால் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு விடும். இது பற்றி எல்லாம் நம் கொக்கோகம் நூலிலும் இதன் வெளிப்பாடாக கண்ணதாசனின் காமசூத்ரா நூலிலும் பார்க்கலாம். இது போன்ற செயல்களின் தொடர்புக்கு ஹைப்போதலாமஸ் பகுதியே காரணம். சித்தர்களின் தியானப் பயிற்சியின் போது இந்த பகுதியில் மனத்தைச் செலுத்தியும் ஆக்ஞை போன்ற இடங்களில் மனதைச் செலுத்தும் போது தங்களின் தியானக் கருத்தின் படியான தோற்றங்களை பெறுகின்றனர். இன்னும் சிலர் கஞ்சா அபின் போன்ற போதைப் பொருள்களை உபயோகித்து அதன் தூண்டுதலால் தோன்றும் ஹலுசினஸ் என்னும் பொய்த் தோற்றங்கள் உண்டாகும் .ஒரு இருட்டு அறையில் நிசப்த்தமான நிலையில் அமர்ந்து புலன்களை தன் வயப்படுத்தல் முறைகள் பயிற்சி செய்யப்படும். உதாரணமாக மேற்கண்டவாறு அமைதியான இடத்தில் சுகாசனம் இட்டு அமர்ந்து மனதை ஒருநிலைப் படுத்தி பிரணாயாமம் செய்து பின் உடலை தளர்வாக வைத்துக் கொண்டு இரு காது துவாரங்களையும் உன் கையின் கட்டை விரல்களைக் கொண்டு மூடி காற்றுப் போகாமல் வைத்துக் கொண்டு மனத்தை காதின் உள் பகுதியில் செலுத்தினால் பலவிதமான ஓசைகள் கேட்க்கும். இதை ஊன்றிக் கவனித்தால் மூளையின் உள் நடுப் பாகத்தில் இருந்து வருவதை அறியலாம்.நுண்ணிய நாடிகள் தூண்டப்பட்டு ஆகாயத்தின் குனாமான நாதங்கள் (ஒலி) கேட்க்கும். அவை சமுத்திரத்தின் அலை ஓசை , மத்தளம் அடிப்பது, சிறிய மணிகள் ஒலிப்பது போலும் கைத்தாளம் போடுவது போலும் புல்லாங்குழல், மிருதங்கம், பேரிகை போன்ற சப்த்தங்கள் கேட்க்கும் நல்ல யோகிக்கு காதை  அடைக்காமலேயே மனத்தை அதில் செலுத்தும் போது கேட்க்கும் இது போன்ற பயிற்சியை தொடர்ந்து பழகி வரும் போது பல விசயங்கள் தெளிவுறும். அதை எல்லாம் இங்கு விவரிக்கின் விரிவடையும். இது போல் ஒவ்வொரு புலன்களிலும் மனதை செலுத்தி பயனடையலாம்.
       தியானம் என்பது ஒரு பொருளைக் குறித்து மனதில் கருதி அந்தக் கருத்து பற்றி ஆழ்நிலையில் தியானிப்பது ஆகும். அதில் நாம் விரும்பிய தெய்வத்தின் உருவத்தின் வடிவங்களை கருத்தில் கொண்டு பார்ப்பது. வராகி மாலை என்று ஒரு தெய்வத்தை சிலர் தன் வசப்படுத்தி அதன் மூலம் சில காரியங்களை செய்வார்கள். இது அந்த தெய்வத்தை தியானித்து அதைக் தனக்கு குற்றேவல் செய்வதாகும். இதில் அந்த தெய்வத்தின் மீது பாடல்கள் அல்லது மந்திரங்கள் என்று உள்ளது முதலில் அந்த தெய்வத்தின் உருவ அமைப்பு பற்றி விவரித்து இருக்கும் உடல் அமைப்பு அதன் செயல்கள் அதன் வலிமைகள் விவரிக்கப் பட்டு இருக்கும் நாம் முதலில் இக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தியானிக்க பயிற்சி கொள்ளவேண்டும் தினசரி அந்த பாடல்களை படித்து அந்த வருணனைகளை மனத்தி இருத்தி பயிற்சி மேற் கொளவேண்டும். இதன் மூலம் நாம் நினைத்தவுடன் அத் தெய்வத்தின் உருவம் நம் மனக்கண்ணில் தோன்ற வேண்டும். பின் நாம் எந்தக் காரியத்திற்கு அத்தெய்வத்தினை அழைத்தையும் மனத்தில் கொண்டு அத் தெய்வத்திற்கு கட்டளை பிறபிப்பதற்கான மந்திரச் சொல்லை மீண்டும்மீண்டும் சொல்ல வேண்டும். இது வழக்கம் ஆகும் இந்த தெய்வத்தின் உருவ நிலையினை வர்ணிப்பதை மீண்டும்மீண்டும் படித்து சிலர் பயித்தியமானவர்கள் உண்டு அத் தெய்வத்தின் தோற்றமே அவர்களின் மன நிலையில் கட்டுப் பாடுகளை இழக்கச்செய்யும் பின் மனநலம் கெட்டவர்களாக பிதற்றித் திரிபவர்கள் உண்டு ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நான் நேரில் சிலரை பார்த்தும் பெரியோர்கள் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். எனவே தான் எதையும் முறையோடும் அதைப்பற்றி அறிந்தவர்களின் வழிகாட்டுதலின் மூலமே செய்ய வேண்டும். தொட்டுக் காட்டா வித்தை சுட்டுப் போட்டாலும் வராது சரி வராகி என்பது ஒரு தெய்வம் என்று வணங்குகின்றனர் அதை மந்திரத்தின் மூலம் கட்டுப் படுத்தி ஒரு காரியத்தை செய்விக்கிறோம் என்றால் அது எப்படி நல்ல செயல் இது கெட்ட செயல் என்று அறியாததா அந்தச் செயலுக்கு பொறுப்பாளி யார் அந்த தெய்வமா அல்லது அதற்கு கட்டளை இட்ட மனிதனா அல்லது அந்த மந்திரச் சொல்லுக்கு அவ்வளவு வலிவு உண்டா. என்று நாம் சிந்திக்க வேண்டும். பிராமணியத்தில் ஒரு கருத்து சொல்லப்படுகிறது அதாவது கடவுள் உயர்ந்தது அந்தக் கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் அதை உச்சரிக்கும் பிராமனானுக்கு கட்டுப் பட்டது எனவே பிராமணன் உயர்ந்தவன். இதில் இருந்து என்ன கருத்து ஏற்படுகிறது பிராமணனை வணங்கினால் போதுமானது. என்று தோன்றுகிறது. எல்லாம் வல்ல கடவுள் எங்கும் உள்ள கடவுள் என்றும் கடவுள் அன்பே வடிவானவர் அன்பரின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர் என்றால் மந்திரங்கள் எதற்கு இது வரை அவ்வாறு அவர் வந்து நிகழ்த்திய செயல்கள் எவை இன்று உலகில் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து பொருள்களும் கருத்துக்களும் செயல்களும் மனிதனின் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொண்டதே தவிர திடீர் என்று ஒரே நாளில் வந்து விடவில்லை.
      ஆன்மா பற்றியும், கடவுள் பற்றியும் புத்தர் கொண்டு இருந்த கருத்தினைப் பார்ப்போம் :--
       புத்தர் ஆன்மாவையும், கடவுளையும் இல்லை என்று மறுப்பவர். புத்தருக்கு முன்பிருந்த உபநிஷத்துக்களை இயற்றிய ரிஷிகள் ஆன்ம தத்துவத்தை பலமாகப் பிரச்சாரம் செய்து வந்ததை நாம் அறியலாம். அவர்களுடன் சார்வாகர்கள் போன்ற லோகாயத வாதத்தத்துவ அறிவாளிகளும் இருந்து வந்தனர். ஆன்மாவை பற்றிய கருத்துக்களை புத்தர் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். ஆன்மாவை உருவகப் படுத்திப் பார்ப்பது ஒன்று அதை உருவம் இல்லாமல் பார்ப்பது மற்றொன்று மனம் நாம் ஐம்புலன்கள் என்று கண், காது, மூக்கு, வாய், உடல் என்று ஐந்து உறுப்புகளை புலன்கள் என்று சொல்கிறோம். புத்தர் ஆறாவதாக மனம் என்பதையும் ஒரு புலனாக கருவியாக கருதுகிறார். ஒரு விதத்தில் அது சரி என்று எடுத்துக் கொள்ளல்லாம் மேற்கண்ட ஐந்து உறுப்புக்களும் வெளியில் இருந்து செய்திகளை கொண்டு வந்து சேர்க்கிறது அதைத் தேவையானது, தேவையில்லாதது, இதைச் செய் இதைச் செய்யாதே என்று செயலில் செய்வது மூளையே ஆகும் அகவே அதையும் ஒரு கருவியாக எடுத்துக் கொண்டு அதற்கு மனம் என்று குறிப்பிடலாம். இந்த மனத்தையே புத்தி என்று பிற்காலத்தில் கீதை முதலிய நூல்கள் வர்ணிக்கின்றன. மற்றும் புத்தர் உருவம், துன்பம், பெயர், பண்பாடு, புலன்களினால் ஏற்படும் செயல்கள் இவை அனைத்துமே அழிந்து போகக் கூடியவை. இவை ஒரு மாறாத விதியாகும்.
         பொருள்களின் அழியும் தன்மையைச் சுலபமாக புரிந்து கொள்ளலாம். மனமும் நிலையில்லாதது ஆகும். “ துறவிகளே “ மனிதர்கள் நான்கு பூதங்களின் உடலையே ஆன்மாவாகக் கருதிக் கொள்வது சிறந்ததாகும். ஆனால் மனத்தை  ஆன்மாவாகக் கொள்வது சரியல்ல. ஏனெனில் நான்கு பூதங்களான இவ் உடல் ஒன்று ----- இரண்டு ----- என்று உடல் இயங்கும் காலம் வரை பார்க்கலாம். ஆனால் மனம் என்பது இரவு, பகல் என்று புதிது, புதிதாக எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். எனவே அது நிரந்தரமானது அல்ல. புத்தரின் தத்துவம் அழிவுடமையை கருத்தாகக் கொண்டதாகும். ஒன்று பிறக்கிறது, மற்றொன்று அழிகின்றது என்பதைப் போல் சில பொருள்களின் வெளித் தோற்றத்தில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இல்லை. ஒன்றின் முழுஅழிவும் மற்றொன்றின் முழுப்பிறப்பும் ஏற்படுகிறது. என்று கூறுகிறார். காரனாகாரியத் தொடர்பை புத்தர் ஒப்புக் கொள்ளாவிடினும் ஒன்றின் அழிவுக்குப் பிறகு மற்றொன்று தோன்றுகிறது என்று கூறினார். ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒன்று கடந்து  போன பின் அல்லது அழிந்து போன பின் மற்றொன்று பிறக்கிறது. ஒரு பொருளோ நிகழ்ச்சியோ தோன்றுவதற்கு முந்தைய வினாடி எப்பொழுதுமே மறைந்து கொண்டே இருக்கிறது. புத்தரின் இக் கொள்கை காரனா – காரிய விதியை தொடர் விதியாகாக் கருதாமல் தடங்கள் உள்ள நிகழ்வாக கருதுகிறது. இக் கொள்கையை அடிப்படையாகாக் கொண்டே நாகார்ச்சுனர் தனது சூனிய வாதக் கருத்தை நிறுவினார்.
      ஒன்றின் அழிவிற்குப்பின் இன்னொன்று தோன்றுகிறது என்ற புத்தரின் இத்தத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அவருடைய மற்ற கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் இது மிகவும் உபயோகமாகும். பழைமையான இந்து உபநிஷத்துக்களின் தத்துவ அறிஞர்கள் அழிவற்ற தென்று ஆன்மாவைச் சொல்லி வந்தனர். ஆனால் புத்தரின் இந்தத் தத்துவத்தில் ஆன்மாவிற்கு இடமில்லை இதனால் அவர் ஆன்ம வாதத்தை மிகப் பெரும் அறிவின்மை என்றார். புத்தர் ஆன்மாவை இரண்டாகப் பிரித்தார். புலன்களைக் கொண்டு உருவமாகப் பார்ப்பது ஒன்று மற்றொன்று உருவமில்லாது பார்ப்பது ஒன்று. இந்த இரு விதக் கருத்துக்களில் சிலர் ஆன்மாவை தொடர்ந்து வரும் அழிவில்லாதது என்று கருதுகின்றனர்.  சிலர் அதை முடிவுடையது என்று சொல்லுகின்றனர். ஆன்மாவின் கருத்தை புத்தர் தத்துவ தரிசனத்திற்கு ஒரு பெரிய அடிமை விலங்காக எண்ணினார். உண்மையான ஞானத்தை பெற ஆன்ம வாதத்தை விட்டு ஒழிக்க வேண்டும் என்றார்.
      மனிதர்களின் எல்லாக் குண இயல்புகளுக்கும் அறிவினமும் கோரிக்கைகளும் தான் காரணமென்று புத்தர் கூறினார். அவர் ஆன்மவாதக் கருத்தை இயற்கையானது என்று கருதவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டு இருக்கும் கள்ளம் கபட மற்ற சிறு குழந்தைக்கு ஆன்மாவைப் பற்றிய புரிதல் இருக்காது பின் ஆத்மா திருஷ்டி அக் குழந்தைக்கு எங்கிருந்து வரும் என்று கேட்டார். இந்துக்களுடைய உபநிஷத்துக்கள் கஷ்டப்பட்டு சிந்தித்து நிலை நிறுத்திய ஆன்ம தத்துவத்தைப் புத்தர் மிகச் சாதாரணமாக மறுக்கிறார். ஆன்மாவே எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. அதுவே அனுபவத்தின் விஷயமாகும் ஆன்மாவே தனது நல்ல கெட்ட செயல்களை அனுபவிக்கிறது. அப்படிப்பட்ட என்னுடைய ஆன்மா அழிவில்லாதது. அனந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. வரப்போகும் முடிவில்லாக் காலத்திற்கும் அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்பதெல்லாம் வெறும் மூட நம்பிக்கையே. புத்தர் ஆன்மாவை மறுக்கும் அனாத்ம வாதத்தை கூறினாலும் அவருடைய அனாத்மா வாதத்திற்கு ஒன்றும் இல்லை என்று பொருளல்ல. ஆன்ம வாதம் எப்படி ஒரு பொருளுடையதோ அனாத்ம வாதமும் ஒரு பொருளுடையதே ஆகும். அவர் ஓரிடத்தில் கூறுகிறார் அதாவது “ உருவம் அநாத்மாவாகும் ,துன்பம் அநாத்மாவாகும், பெயர், பண்பாடு விஞானம் ஆகிய எல்லாமுமே அநாத்துமா ஆகும். இனி கடவுள் பற்றி புத்தரின் கருத்து பற்றிப் பார்ப்போம்.
        ஒரு தடவை வசிஷ்டர் என்னும் பிராமணர் ஒருவர் புத்தரிடம் கூறினார். “கொளதமரே” நாம் செல்ல வேண்டிய பாதையைப் பற்றியும் செல்லக் கூடாத பாதையைப் பற்றியும் ஐதரேய பிரமான நூல்களும் சாந்தோக்கிய, சந்தாவா பிரமாண நூல்களும் எத்தனையோ எடுத்துச் சொல்கின்றன. நம்மை பிரம்ம லோகத்துக்குச் சேர்ப்பிக்கின்றன. ஒரு கிராமத்துக்குப் பல வழிகள் இருப்பினும் அவை எல்லாமுமே அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கே கொண்டு செல்கின்றன. அதைப்போல் இந்த பிரமாண நூல்களும் நம்மை அந்த ஒரே கடவுளிடம் சேர்ப்பிக் கின்றன. என்று புத்தரிடம் கூறினார்.
இதற்கு புத்தர் கூறினார் :--
     ஓ வசிஷ்டரே மூன்று வித பிரமாண நூல்களை ஓதும் பிராமணர்களில் ஒரே யொருவர் கூடப் பிரம்மாவை (கடவுளை) தனது கண்களால் பார்த்தது இல்லை, ( புத்தர் காலத்தில் சிவன், விஷ்ணு போன்ற கடவுள் உயர்வாக கருதப்படவில்லை அல்லது வழக்கில் இல்லை ) எந்த ஒரு மதாச்சாரியாரும், பிராமணர்களின் முன்னோர்களும், ரிஷிகளும், வேத மந்திரங்களை இயற்றியவர்களும், அஷ்டகர், வாமகர், வாமதேவர், விஷ்வாமித்திரர், யமதக்கினி, அங்கிரா, பரத்வாஜர், வசிஷ்டர், கஷ்யபர் போன்ற எந்த முனிவர்களும் பிரம்மாவை தன் கண்களால் பார்த்தவர்கள் அல்ல யாரைப் பார்க்க முடியவில்லையோ, அறிய முடிய வில்லையோ அவரை அடைவதற்காக இவர்கள் எல்லாம் வழி சொல்கிறார்களா. வசிஷ்டரே குருடர்கள்  ஒருவர் பின்னர் ஒருவர் செல்வதைப் போல இது இருக்கிறது. இவர்களில் முதலில் இருப்பவனும் ஒன்றும் பார்ப்பது இல்லை, நடுவில் இருப்பவனும் ஒன்றும் பார்ப்பது இல்லை, கடைசியில் இருப்பவனும் ஒன்றும் பார்ப்பதில்லை. என்று மறு மொழி கூறினார். புத்தரின் கடவுள் நம்பிக்கை இது தான்.
        மேற்கண்ட கருத்துப்படிதான் கடவுளைக் கண்டவர் எவரும் இல்லை. வேதகாலத்தில் இருந்து இன்றைய காலக் கட்டம் வரை இதுவே நிலை. புறத்தில் பார்க்காமால் அகத்தில் உள் நோக்கி பார்க்கவேண்டும், என்கின்றனர். ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று சொல்கின்றனர். ஐம்புலன் வழியல்லாது வேறு எவ்வாறு நிர்ணயிப்பது. நாம் பிறந்த காலத்தில் இருந்து இன்றைய காலக்கட்டம் வரை நம் ஐம்புலன்களின் வழியாகச் சென்ற கருத்துப் பதிவுகளே சிந்தனையின் வாயிலாக வெளிப்படுகிறது. அதனால் தான் புத்தர் கூறினார், கள்ளம் கபடமற்ற குப்புறப் படுத்துக் கொண்டு இருக்கும் குழந்தைக்கு ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் என்ன கூறமுடியம். படிப்பறிவு இல்லாத மக்களுக்கு இதுபற்றி என்ன தெரியும். ஆகவே தான் சட்டை முனி நாயனார் முன் ஞானம் நூறில் கீழ்க் கண்டவாறு சொல்கிறார்.
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்
உருவியந்த மண் சென்று சலத்தை யுண்ணும்
பத்தி நின்ற சலமது தான் தீயை யுண்ணும்
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்
வெந்து நின்ற கால் சென்று வின்னையுண்ணும்
விழுந்ததுதப்பா சடமென்று வேதாந்தப் பேச்சு
முத்திகண்டுக் கூடுவது எந்தக் காலம்
மூடரே மதுவையுண்டு மேலேபாரே. --------------- என்று வெட்டி வேதாந்தம் வாயில் பேசுவதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது. மூடரே செயலில் இறங்கு என்று சொன்னார்.
       சில நேரங்களில் நாம் கனாக்கான்பது அல்லது புதிய விசயங்களை பற்றி சிந்திக்கிறோம் இவை எல்லாம் நம் மூளையில் பதிந்துள்ள விசயங்களில் இருந்து பிரித்து அறிந்து சிந்தனை முடிவாகிறது. நாம் சிறுவயதில் என்றோ வாய்ப்பாட்டின் பதிவு நாம் ஒரு கூட்டல் பெருக்கல் கழித்தல் என்று கணக்கிட்டு செய்வதற்கு உதவுகிறது. படிப்பறிவு இல்லாத மக்களிடம் எட்டும் எட்டும் எவ்வளவு என்று கேட்டால் என்ன தெரியும் அவர்களால் விடை காண இயலாது. நமக்கு கனவில் அல்லது நினைவில் சில விசயங்கள் அல்லது நாம் இதற்கு முன் பார்த்தது போன்ற கருத்துக்கள் உண்டாகும் இதுவும் நம் மூளையில் நாம் என்றோ கண்ட கேட்ட செய்திகளின் பதிவுகளின் வெளிப்பாடேயாகும் சில விசயங்களை பார்த்து இருப்போம் படித்து இருப்போம் அவற்றை எல்லாம் நினைவுக்கு கொண்டு வரமாட்டோம் நம் அன்றாட வாழ்வியலில் சம்பத்தப் பட்ட விசயங்கள் உடனுக்குடன் வெளிப்பட்டுவிடும். ஆனால் சில விசயங்கள் நம் மூளையின் ஆழ்ந்த பதிவில் இருந்தால் அவற்றை நாம் சிந்தித்து தான் வெளிப் படுத்துகிறோம். படிக்கும் மாணவர்கள் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு பாராவை சிலதடவை படித்துவிட்டு எழுதிப் பார்க்கும் போது நினைவாற்றல் பற்றி தெரியவரும் இதைக் கவனித்தால் புரியும் சில வரிகள் எழுதியவுடன் அடுத்த வரி என்ன என்று தெரியாது இந்த இடத்தில் துணைக்கால் போடனுமா, ஒற்றைக் கொம்பா இரட்டைக் கொம்பா என்றல்லாம் நமக்கு சந்தேகம் வருவதை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள் இது எதனால் ஏற்படுகிறது. நாம் படிக்கும் போதும் பார்க்கும் போதும் கேட்க்கும் போதும் சில நேரங்களில் கவனம் நம் செயலை விட்டு வேறு புறச் செய்திகளில் சென்று பின் மீண்டும் நம் சூழலுக்கு வருவோம் அந்த சந்தர்ப்பங்களில் நம் மூளையில் பதிவாகாமல் விடு படுவதால் ஏற்படும் சிக்கலே அதற்கு காரணம் மூளையில் பதியப் படாத உணரப்படாத எந்த ஒரு விசயமும் வெளிப்படாது. ஒருவன் யானையை பார்த்தது இல்லை என்றால் அவனால் யானை பற்றி எதுவும் கூறயியலாது அதை நேரில் பார்க்கும் போது கூட அதுதான் யானை என்று தெரியாது யானையை பற்றி அறிந்த பார்த்த ஒருவர் அவனிடம் இது தான் யானை என்று கூறினால் தான் தெரியும். இது போல் தான் விஞ்ஞான வெளிப்பாடுகளும் நம் அனுபவங்களின் மற்றும் பிறரின் அனுபவங்களின் கருத்துக்களைக் அறிந்து சிந்தித்ததின் விளைவுகளே புதிய கண்டு பிடிப்புகள் தோன்றக் காரணம் ஆயின. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்க முடியும். ஆதி மனிதன் தீடிரென்று தீயைக் கண்டு பிடித்து விடவில்லை இயற்கையில் காட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்களைக் கண்டும் அதனால் தானும் தன் உடன் இருந்த மனிதர்கள் மிருகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தே தெரிந்து கொண்டான். இதுவே இன்றளவும் நம் நடை முறையில் உள்ள செயலாகும். படிப்படியான பட்டறிவே அவனை தீயை உண்டாக்கவும், அதனைக் கையாலவும் தெரிந்து கொண்டன். இயற்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மரங்கள் ஆற்றில் மிதந்து வந்ததைப் பார்த்து கட்டு மரங்கள் கட்டி ஆற்றைக் கடந்தான் குளத்தைக் கடலை என்று கடந்தான் அதில் ஏற்பட்ட விளைவுகளின் பரிணாம வளர்ச்சியே படகு, பாய்மரம், கப்பல் என்றும் ஒவ்வொன்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தினான் காரணம் புரியாத செயல்களுக்கு கடவுளை காரணம் என்று கூறிக் கொண்டான். ஒரு காலக் கட்டத்தில் அம்மை நோய், காலார போன்ற நோய்களுக்கு மாரியம்மனின் கோபம் காளியின் கோபம் என்று கருதி வந்தான் அதற்கான காரணங்களை அறிந்த பின் நாம் உண்மை நிலை தெரிந்து கொண்டோம். எவரும் பார்க்காத அறியாத கடவுளும் இவ்வாறே உருவானார். ஒரு மதத்தில் வானுலகில் இருந்து இறைவன் தேவ வாக்காக் சொன்னான் என்றும் அவரவர் கற்பனைக் ஏற்றவாறு கடவுளைக் கற்பித்துக் கொண்டார்கள். இது போல் சித்தர்களும் கடவுளை தங்கள் வழியில் கற்பித்துக் கொண்டார்கள்.  
நிற்பது நிற்க நிலை தவறாமல்
சொற்ப வாழ்வு துவண்டு அலையாதே
அற்புதம் ஆன ஆனந்த போதம்
கற்பனை ஆகக் கண்டு கொள்வாயே
                      என்ற நன்தீஸ்வரரின்-------- கருத்தில் இருந்து சித்தர்களின் சித்தாந்தம் அறியலாம் இவை எல்லாம் நமக்கு ஆரியர்களின் கலப்பிற்குப்பின் ஏற்பட்ட விளைவுகளே தவிர நம் தமிழரின் இயல்பு வாழ்பியலை மறந்து விட்டோம்
யாதும் ஊரே யாவரு கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தரவாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிது என்று மகிழ்ந்தன்று மிலேமே
                              :-- புறநானூறு
ன்று புறன் தருதல் தாயின் கடமை
சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்கு கடமை
நன்னடை நல்கல்  நாட்டை ஆளும் வேந்தர்க்குக் கடமை
ஒளிருவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு பெயர்தல் காளையின் கடமை
                              :-- புறநானூறு 
ஈயென இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனைக் காட்டிலும் இழிந்தது
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனைக் காட்டிலும் உயர்ந்தது
                              :  -- புறநானூறு
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
செறிவு எனப்படுவது கூறியது மாறாமை
நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வவ்வல்
பொறை  எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
                                 :---- கலித்தொகை என்ற மேற்கண்ட பாடல்களின் வாயிலாக தமிழரின் எளிய வாழ்வினையும் கருத்துக்களையும் புரிந்து அதன் வழி நடப்போம் என்று இனிது கூறி இந்த பாரம்பரிய சித்த மருத்துவ தொகுப்பு பதினொன்றையும் இனிது முடிக்கின்றேன். இனி எனது இரண்டாம் பாகத்தில் சித்த மருத்துவ செயல் முறைகள் அகத்தியர் பற்றியும் பார்ப்போம் நன்றி -- -- --                                     








;                                                       
      






          .                                 
    
   
         
    
        .